பதிவு செய்த நாள்
02 ஜன2019
23:20
ஆத்துார்:பிளாஸ்டிக் பயன்படுத்த அரசு தடை விதித்ததால், பாக்கு மட்டையிலிருந்து, பாக்கு தட்டு தயாரிக்கும் தொழில் புத்துயிர் பெற்றுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்துார், வாழப்பாடி, ஏத்தாப்பூர், கருமந்துறை, பெத்தநாயக்கன்பாளையம், நரசிங்கபுரம், பச்சமலை, தம்மம்பட்டி பகுதியில், பாக்கு சாகுபடி அதிகளவில் உள்ளது.சில ஆண்டுக்கு முன், குறைந்த முதலீட்டில், அதிக லாபம் என்ற நோக்கில், பாக்கு மட்டை தொழில் உருவானதால், பெரும்பாலானோர் குடிசை தொழில் போன்று, இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
வறட்சி, பிளாஸ்டிக் வரத்து அதிகரிப்பு காரணத்தால், சில ஆண்டுகளாக பாக்கு மட்டை தட்டு தயாரிப்பு தொழில், அழிவின் பாதையை நோக்கி சென்றது.புத்தாண்டு முதல், தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்ததால், கோவில், திருமணம் உள்ளிட்ட விழாக்களில் பாக்கு தட்டு பயன்பாடு மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது.
இது குறித்து, ஆத்துார், வாழப்பாடி பகுதி பாக்கு தட்டு தயாரிப்பாளர்கள் கூறியதாவது: குறைந்த முதலீட்டில் அதிக லாபம் என விளம்பரம் செய்யப்பட்டதால், பாக்கு மட்டை தொழிலில் ஈடுபட்டோம். வறட்சியால், ஆத்துார், வாழப்பாடி பகுதியில், நான்கு லட்சம் பாக்கு மரங்கள் செத்து மடிந்ததால், பாக்கு மட்டைகள் கிடைக்காமல் போயின.கடந்தாண்டு மழை பெய்ததால், பாக்கு மட்டை மீண்டும் கிடைப்பதால், பல்வேறு விதமான தட்டுகளை தயாரித்து வருகிறோம்.
சிறிய வகை தட்டுகள் தலா, 50 காசு, ஆறு சைஸ் அளவு – 70 காசு, எட்டு சைஸ் – 1.50 ரூபாய், 10 சைஸ் – 3 ரூபாய், 12 சைஸ் – 4 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம். ஒரு மிஷின் மூலம், ஒரு மணி நேரத்தில், 25 முதல், 30 தட்டுகள் வரையும், எட்டு மணி நேரத்தில் 1,000 தட்டுகள் வரையும் தயாரிக்க முடியும்.பெரும்பாலான மண்டபங்களில், பாக்கு மட்டை தட்டு உபயோகிப்பது கிடையாது.
கோவில்களில் மட்டும், எட்டு சைஸ் தட்டுகள், பிரசாதம் வழங்க பயன்படுத்துவதால், அவ்வகை தட்டுகளின் விற்பனை மட்டும் நன்றாக நடக்கிறது.தமிழக அரசு தடை விதித்துள்ளதை அடுத்து, பாக்கு மட்டை தட்டுகளை பயன்படுத்த பலர் முன் வந்து உள்ளதால், இத்தொழில் புத்துயிர் பெறத் துவங்கியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|