பதிவு செய்த நாள்
02 ஜன2019
23:25
மும்பை:ரிசர்வ் வங்கி, புத்தாண்டு பரிசாக, 25 கோடி ரூபாய் வரையிலான, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடனை மறுசீரமைக்க, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அமலாக்கம் போன்றவற்றால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.இதன் காரணமாக, இத்துறை நிறுவனங்கள், வங்கிக் கடனை உரிய முறையில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வங்கிகள், தவணை செலுத்த தவறும் நிறுவனங்களின் கடன்களை, வாராக்கடன் பிரிவில் சேர்த்து, திவால் சட்டத்தின் மூலம், கடனை வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதனால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதால், அவற்றின் வாராக்கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என, மத்திய அரசு, ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வந்தது.இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பொறுப்பேற்ற, சக்திகாந்த தாஸ், ஒரு முறை தீர்வாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின், வாராக்கடன்களை மறுசீரமைக்க, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொள்கை
இது குறித்து, வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:நடப்பு ஜனவரி, 1 முதல், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின், 25 கோடி ரூபாய் வரையிலான வாராக்கடன்கள் மறுசீரமைக்கப்படும். இத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கொள்கைகளை வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உருவாக்கி, அவற்றின் இயக்குனர் குழுவின் ஒப்புதலை பெற வேண்டும்.அடுத்த ஆண்டு, மார்ச் 31க்குள், இத்திட்டத்தை வங்கிகள் செயல்படுத்த வேண்டும்.
வங்கிகள், வாராக் கடனுக்காக ஏற்கனவே ஒதுக்கிய தொகையுடன், கடன் மறுசீரமைப்பிற் காக, கூடுதலாக, 5 சதவீத தொகையை ஒதுக்க வேண்டும்.அறிக்கைஇந்த வகையில், வங்கிகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் கடன்களுக்காக, 5,000 கோடி ரூபாய் ஒதுக்கும் என, தெரிகிறது.
வழக்கமாக, மறுசீரமைக்கப்படும் கடன்கள் தொடர்பாக, வங்கிகளின் சொத்து மதிப்பு குறைக்கப்படும்.ஆனால், தற்போது அக்கடன்கள், நிலையான சொத்துக்கள் பிரிவிலேயே இருக்கும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதனால், வங்கிகளின் சொத்து மதிப்பும், அவற்றின் தர நிர்ணயமும் குறையாது.அதேசமயம், மறுசீரமைத்த கடன்கள் குறித்தும், அவற்றின் கண்காணிப்பு தொடர்பான அறிக்கைகளையும், வங்கிகள் தொடர்ந்து வழங்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக் கடன்கள், சில சலுகைகளுடன் புதிய கடன்களாக மாற்றப்படும். இதன் மூலம், இந்நிறுவனங்கள், கடன் அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, தொழிலில் கவனம் செலுத்தும் சூழல் உருவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
வேலைவாய்ப்பு
இந்தியாவில், வேளாண் துறையை அடுத்து, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை தான், 12 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. இத்துறையின் வாராக்கடன், 1.30 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.சந்திப்புரிசர்வ் வங்கி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடன்களை மறுசீரமைக்க, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, அடுத்த கட்டமாக, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை, அடுத்த வாரம் சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|