பதிவு செய்த நாள்
02 ஜன2019
23:30
புதுடில்லி:ந்திய பங்குச் சந்தைகளில், 145 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கடந்த ஆண்டில், புதிய பங்கு வெளியீடுகள் மூலமாக, 2,455 கோடி ரூபாயை திரட்டி உள்ளன. இது, அதற்கு முந்தைய, 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 37 சதவீதம் அதிகமாகும்.
இது குறித்து, ‘பன்டோமாத் அட்வைசரி சர்வீசஸ்’ நிறுவனத்தின், குழும நிர்வாக இயக்குனர், மகாவீர் லுனாவாட் கூறியுள்ளதாவது:நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான நிதியை திரட்டிக் கொள்ள, பங்கு வெளியீட்டை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றன. அப்படி திரட்டப்படும் நிதி, பெரும்பாலும் விரிவாக்க திட்டங்களுக்காகவும், செயல்பாட்டு மூலதன தேவைகளுக்காகவும், பொதுவான நிர்வாக தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த ஆண்டில், 145 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 2,455 கோடி ரூபாயை திரட்டி உள்ளன. இதற்கு முந்தைய ஆண்டான, 2017ல், 133 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பங்கு வெளியீட்டுக்கு வந்து, 1,785 கோடி ரூபாயை திரட்டி இருந்தன.கடந்த, 2012ம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால், மொத்தம், 474 நிறுவனங்கள், 5,825 கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளன.
இந்நிறுவன பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில், பங்குச் சந்தையில் அதிக ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும், பங்கு வெளியீட்டுக்கு வந்த நிறுவனங்கள், நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மேலும், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, துவக்க நிலை முதலீட்டாளர்களின் குறைந்தபட்ச முதலீட்டு வரம்பை, 10 கோடியிலிருந்து, 2 கோடி ரூபாயாக குறைத்தது.
இதனால், நிறைய துவக்க நிலை முதலீட்டாளர்கள், பங்கு வெளியீட்டில் பங்கேற்க முடிந்தது. கடந்த ஆண்டில், பங்கு வெளியீட்டின் மூலம், 25 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டிய, சிறிய நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை, 28. இதில் அதிகபட்சமாக திரட்டப்பட்ட தொகை, 92.74 கோடி ரூபாய்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|