பதிவு செய்த நாள்
02 ஜன2019
23:34
புதுடில்லி:கடந்த ஆண்டு, டிசம்பரில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி சற்று குறைந்துள்ளதாக, ஆய்வொன்றில் தெரிய வந்துஉள்ளது.
பிரிட்டனில், தலைமை அலுவலகத்துடன் செயல்பட்டு வரும், ஐ.எச்.எஸ்., மார்கிட் நிறுவனம், தரவு சேகரிப்பு துறையில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400க்கும் அதிகமான நிறுவனங்களின் டிசம்பர் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து, ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
கடந்த, 2018, டிசம்பரில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, பி.எம்.ஐ., குறியீடு, 53.2 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது, நவம்பரில், 54 புள்ளிகளாக இருந்தது. எனினும், தயாரிப்பு துறை, கடந்த ஆண்டிலேயே, டிசம்பரில் தான், இரண்டாவது முறையாக அதிகபட்ச வளர்ச்சியை கண்டுள்ளது.
அது மட்டுமின்றி, 2012, அக்., – டிச., காலாண்டுக்கு பின், 2018, அக்., – டிசம்பர் காலாண்டில் தான், தயாரிப்பு துறை, அதிகபட்ச சராசரி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், மூலப்பொருட்கள் பணவீக்கம், 34 மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது. புதிய, ‘ஆர்டர்’கள் அதிகரித்ததால், நிறுவனங்கள், உற்பத்தி மற்றும், பணியாளர் எண்ணிக்கையை உயர்த்தின.சர்வதேச சந்தையில், இந்திய பொருட்களுக்கான தேவை அதிகரித்ததால், ஏற்றுமதி உயர்ந்துள்ளது.
தொடர்ந்து, 14 மாதங்களாக, தயாரிப்பு துறையின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.இத்துறையின் வளர்ச்சி, நவம்பரை விட, டிசம்பரில் சற்று குறைந்துள்ளது. இருந்த போதிலும், கடந்த ஆண்டில், விரைவான உற்பத்தி வளர்ச்சியை கண்ட மாதங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அறிகுறிகள்
தயாரிப்பு துறை நிறுவனங்கள், சிறந்த உற்பத்தி திறனில் இயங்கி வருகின்றன. பொருட்களின் வினியோகமும், திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. மூலப்பொருட்கள் செலவினமும் குறைந்துள்ளது.மூன்றாவது காலாண்டு வளர்ச்சியும் நன்கு உள்ளது.இவை, பணவீக்க அழுத்தம் குறைந்துள்ளதற்கான அறிகுறிகள். அதனால், அடுத்த மாதம், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, வங்கிகளின் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யுமா என்பதை பார்க்க வேண்டும்.
– பாலியானா டி லிமா, தலைமை பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்கிட்..
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|