பதிவு செய்த நாள்
04 ஜன2019
23:31
புதுடில்லி:‘‘பேங்க் ஆப் பரோடாவுடன், தேனா, விஜயா வங்கிகள் இணைக்கப்படுவதால், ஒருவருக்கு கூட வேலை பறிபோகாது,’’ என, மத்திய நிதியமைச்சர்அருண் ஜெட்லி உறுதி அளித்துள்ளார்.
பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆப் பரோடா உடன், தேனா மற்றும் விஜயா வங்கிகளை இணைக்க, மத்தியஅமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பெரிய வங்கி
இந்த இணைப்பால், பலர் வேலையிழப்பர் என்பதால், திட்டத்தை கைவிட வேண்டும் என, வங்கி ஊழியர் சங்கங்கள் போர்க்கொடி துாக்கியுள்ளன.இந்நிலையில், நேற்று லோக்சபாவில் அருண் ஜெட்லி பேசியதாவது:பேங்க் ஆப் பரோடா உடன், தேனா, விஜயா வங்கிகள் இணைக்கப்படுவதன் மூலம், யாரும் வேலையிழப்பிற்கு உள்ளாக மாட்டார்கள்; ஒருவருக்கு கூட, வேலை பறிபோகாது.இதற்கு மாறாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போல, மிகப் பெரிய வங்கியாக, பேங்க் ஆப் பரோடா உருவாகும்.அது மட்டுமின்றி, இந்த இணைப்பு காரணமாக, வங்கி வழங்கும் கடனுக்கான செலவும் வெகுவாக குறையும்.
கண்காணிப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த, 21 வங்கிகளில், அதிக வாராக் கடன் உள்ள, 11 வங்கிகள், ரிசர்வ் வங்கியின் தீவிர கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. நலிவடைந்த நிறுவனங்கள் மற்றும் திவால் சட்டத்தின் அமலாக்கத்தால், வங்கி களின் வாராக்கடன் சுமை குறையும்.இந்த சட்டம், 3 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை, வங்கி துறைக்கு திரும்பக் கொண்டு வந்துள்ளது.வாராக்கடன் ஒதுக்கீடு காரணமாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இதர பொதுத் துறை வங்கிகள், இழப்பை சந்தித்தன. தற்போது, இவ்வங்கிகள் லாபம் காண்கின்றன.
ரூ.90 ஆயிரம் கோடி
நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டு பட்ஜெட்டில், பொதுத் துறை வங்கிகளுக்கு, மறு பங்கு மூலதன திட்டம் வாயிலாக, 65 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.அதில், ஏப்., – டிச., வரை, 51 ஆயிரத்து, 533 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2017- – 18ம் நிதியாண்டு மத்திய பட்ஜெட்டில், பொதுத் துறையைச் சேர்ந்த பல வங்கிகளுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் பங்கு மூலதனமாக வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
மோசடி எதுவும் நடைபெறவில்லை
மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியதாவது: பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வகிக்கும், தொழிலாளர் ஓய்வூதிய நிதியம் மற்றும் பணிக்கொடை நிதியங்களில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. இந்த நிதியங்களில் இருந்து, பஞ்சாப் நேஷனல் வங்கி, பணம் எடுக்கவும் இல்லை; அதன் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளவும் இல்லை. இதை, அவ்வங்கியே தெரிவித்துள்ளது.
ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை நிதியங்கள், தனித்து இயங்குகின்றன. இந்த நிதியங்களின் கணக்குகளை கையாளவோ அல்லது நிதியை தன் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளவோ, வங்கிக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.இந்த கணக்குகள், ஆண்டுதோறும், ‘ஆடிட்’ குழுவினரால் தணிக்கை செய்யப்பட்டு, வங்கியின் ஆடிட் மற்றும் இயக்குனர் குழுக்களின் அங்கீகாரத்தை பெறுவதாக, பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|