பதிவு செய்த நாள்
05 ஜன2019
23:42
மும்பை:ரிசர்வ் வங்கி, ‘இ – வாலட்’ எனப்படும் மின்னணு பணப் பை சேவை தொடர்பான நிதி மோசடியில், வாடிக்கையாளர் பாதுகாப்புக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மொபைல் போன் மூலம், வலைதளத்தில் பல்வேறு பொருட்களையும், சேவைகளையும் பெற, மின்னணு பணப் பை நிறுவனங்கள் உதவுகின்றன.ஒருவர், தன் வங்கிக் கணக்கில் இருந்து, குறிப்பிட்ட தொகையை, மின்னணு பணப் பைக்கு முன்கூட்டியே மாற்றி, அதில் இருந்து, தேவைகளுக்கு ஏற்ப, பணத்தை அவ்வப்போது செலவிடலாம்.இது, ஒவ்வொரு முறையும், வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்தும் சிரமத்தை தவிர்க்கிறது.
சலுகை
குடிநீர், மின்சாரம், மொபைல் போன், ‘ரீ சார்ஜ்’ போன்ற, பல்வேறு சேவை கட்டணங்களை சுலபமாக செலுத்த, மின்னணு பணப் பை உதவுகிறது.இத்தகைய நிதி சேவையில், ‘பேடிஎம், மொபிக்விக், போன்பீ, ப்ரீசார்ஜ்’ உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இவை, பொருட்களின் தொகையில், குறிப்பிட்ட சதவீதத்தை திரும்பப் பெறும், ‘கேஷ்பேக்’ உள்ளிட்ட சலுகைகளை வழங்குகின்றன.இதனால், மின்னணு பணப் பை நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள்எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.அத்தகையோரின் பணத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி, புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பொறுப்பல்ல
அதன்படி, மின்னணு பணப் பை பரிவர்த்தனையில் நடந்த மோசடி குறித்து, ஒருவர் மூன்று நாட்களுக்குள் புகார் அளித்தால், அவரை, அத்தொகைக்கு பொறுப்பாக்க முடியாது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.அதாவது, மோசடிக்கு மின்னணு பணப் பை நிறுவனங்களே பொறுப் பேற்க வேண்டும்.அதுபோல, வாடிக்கையாளர், நிறுவனம் தவிர்த்து, கணினி செயல்பாடுகளின் தவறால், பணம் இழந்தால், அது பற்றி மூன்று நாட்களுக்குள் புகார் தெரிவிப்போரை, இழப்பிற்கு பொறுப்பாளி ஆக்க முடியாது என, விதிமுறை கூறுகிறது.
இதனால், வாடிக்கையாளர், இழந்த தொகையை பெற முடியும்.பண மோசடி நடந்து, 4 – -7 நாட்களுக்குள் புகார் அளித்தால், ஒரு பரிவர்த்தனையின் மதிப்பு அல்லது 10 ஆயிரம் ரூபாய், இதில் எது குறைவோ அத்தொகைக்கான பொறுப்பு, வாடிக்கையாளரை சாரும்.வழக்கமாக, மின்னணு பணப் பை நிறுவனங்கள், ஒரு பரிவர்த்தனைக்கு, அதிகபட்சமாக, 10 ஆயிரம்ரூபாய் வரம்பு நிர்ணயித்து உள்ளன. அதனால், மோசடி குறித்து காலதாமதமாக புகார் அளிப்போர், முழு தொகையை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
24 மணி நேர சேவை
வாடிக்கையாளர், முகமறியா நபர்களிடம் நிதி விபரங்களை அளித்து, அதனால், அவர் கணக்கில் மோசடி நடைபெற்றால், அவர், மின்னணு பணப் பை நிறுவனத்திடம் புகார் தெரிவிக்கும் நாள் வரையிலான இழப்பை ஏற்க வேண்டும்.அதன்பின், ஏற்படும் இழப்பிற்கு, மின்னணு பணப் பை நிறுவனம் பொறுப்பேற்கும் என, விதிமுறை கூறுகிறது.
நிறுவனங்கள், வாடிக்கையாளர் புகாரை, 24 மணி நேரமும் ஏற்கும் வகையில், வலைதளத்தில் நேரடி இணைப்பு, எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல், இலவச உதவி மைய தொலைபேசி எண் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.புகார் தெரிவித்த உடனே, வாடிக்கையாளருக்கு தன்னிச்சையான பதிவு எண் வழங்க வேண்டும்.
மின்னணு பணப் பை
முன்கூட்டியே பணம் செலுத்தி, தேவைப்படும் போது சேவைகளை பெற, மின்னணு பணப் பை எனப்படும், ‘இ – வாலட்’ அல்லது ‘மொபைல் வாலட்’ உதவுகிறது.இச்சேவையை, ‘அமேசான் பே, ஆக்சிஜன் சர்வீசஸ், பேடிஎம், பேயு, பேவேர்ல்டு, போன்பி, மொபிக்விக், ப்ரீசார்ஜ், சோடக்ஸோ’ உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்குகின்றன.
தொகைக்கு பொறுப்பு
* ஒரு வாடிக்கையாளர், பண மோசடி குறித்து மூன்று நாட்களுக்குள் புகார் அளித்தால், அவரை, அத்தொகைக்கு பொறுப்பாக்க முடியாது
* அதே சமயம், 4 – -7 நாட்களுக்குள் புகார் அளித்தால், ஒரு பரிவர்த்தனையின் மதிப்பு அல்லது 10 ஆயிரம் ரூபாய், இதில் எது குறைவோ அத்தொகைக்கான பொறுப்பு, அவரை சாரும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|