பதிவு செய்த நாள்
06 ஜன2019
23:37
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை, பல வாரங்களுக்குப் பின், கடந்த வாரம் சிறிதளவு உயர்ந்து, வர்த்தகமாகி முடிவுற்றது.கடந்த ஆண்டின் இறுதியில், முதலீட்டாளர்கள் தங்களுடைய ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டு வந்ததன் காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு, 5 அமெரிக்க டாலர்கள் உயர்ந்து, வர்த்தகம் முடிவுற்றது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், ஒரு பேரலுக்கு, 32 அமெரிக்க டாலர் விலை சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 2014 மற்றும் 2016ம் ஆண்டிலும் இதே போல நிகழ்வு ஏற்பட்டிருந்தது. அதன்பின், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் சிறிதளவு விலை ஏற்றம் கண்டதும் குறிப்பிடத்தக்கது.
விலை சரிவினால், எண்ணெய் உற்பத்தி நாடுகள், பெரிய அளவில் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில், தினசரி எண்ணெய் உற்பத்தியை, 12 லட்சம் பேரல்கள் குறைப்பது என, முடிவெடுத்தனர். இதை ஜனவரி முதல் ஜூன் வரையான கால கட்டங்களில் அமல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.
உலகில் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக, சவுதி அரேபியா உள்ளது. இந்நாடு கடந்த மாதத்தில், அதன் ஏற்றுமதியை பெருமளவு குறைத்துள்ளது. இதன் காரணமாக, மொத்த வளைகுடா நாடுகளின் ஏற்றுமதி, 5 லட்சத்து, 30 ஆயிரம் பேரல்கள் குறைந்தது. தினசரி மொத்த ஏற்றுமதி, 3.26 கோடி பேரல்கள் ஆகும்.
கடந்த வெள்ளியன்று, கச்சா எண்ணெய் விலை, 2 சதவீதம் உயர்ந்தது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான பேச்சில் சுமுகம் ஏற்படும் என்றும், நிலவி வந்த வர்த்தக மோதல் போக்கு சீரடையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.இருப்பினும், அமெரிக்காவில் எண்ணெய் இருப்பு அதிகரித்து வருவதால், விலையேற்றம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தங்கம் வெள்ளி
சர்வதேச சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை, கடந்த மூன்று மாதங்களாக, தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதில் டிசம்பர் மாதம் மட்டும், 1 அவுன்ஸ் தங்கம், 60 அமெரிக்க டாலர் வரை உயர்ந்து வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் சந்தையில், புத்தாண்டு தினக் கொண்டாட்டங்கள் காரணமாக, ஆரம்ப கட்டங்களில் வியாபாரம் பெரிய அளவில் நடக்கவில்லை.வார இறுதியில், அமெரிக்காவில், புதிதாக
விவசாயம் சார்ந்த தொழில் துறைகளில் வேலைக்கு நியமிக்கப்பட்டோர் எண்ணிக்கை விபரம் வெளிவந்தது. இது எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. இதனால், அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் வலுவடைந்தது.
அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் வலுவடைந்ததன் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த வெள்ளியன்று, ஆறு மாத உச்சத்திலிருந்து சரிந்தது. இதையடுத்து, அந்த வாரத்தின் வர்த்தகம் சரிவுடன் முடிவுற்றது.கடந்த வாரம், அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் பேசுகையில், ‘வரும் ஆண்டுகளில் வட்டி விகிதம் குறித்த முடிவுகள், நன்கு ஆலோசித்த பின் எடுக்கப்படும்’ என, தெரிவித்திருந்தார். வட்டி விகிதம் குறித்த மாற்றங்கள், சந்தையில் அதிக அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும்.
நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டான, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், ஜப்பான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, முந்தைய ஆண்டைக் காட்டிலும், 1.9 சதவீதம் உயர்ந்தது. இதன் காரணமாக, அந்நாட்டின் நாணயமான, ‘யென்’ மதிப்பு, அமெரிக்க நாணயத்திற்கு எதிராக அதிகரித்தது. இதன் விளைவாக, அமெரிக்க நாணயத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, கடந்த வாரம், தங்கம் மற்றும் வெள்ளி விலை சிறிதளவு அதிகரிக்க காரணமானது.
ஆசிய மற்றும் அமெரிக்க சந்தைகள், கடந்த வெள்ளியன்று சரிவில் வர்த்தகம் ஆகின. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொருளாதார மாற்றம், உலக வர்த்தக மோதல், அமெரிக்க அரசு கொண்டு வந்த பொருளாதார தடை போன்ற காரணங்களால், சர்வதேச பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. இதுவும் தங்கம், வெள்ளி விலை அதிகரிக்க காரணமானது.
கடந்த வாரம், உள்நாட்டு ஆபரண சந்தையில், தங்கக் கட்டிகள் விற்பனையில், அதற்கு முந்தைய ஆறு வாரங்களைக் காட்டிலும் சிறிதளவு தொய்வு ஏற்பட்டது. 1 முதல், 2 அமெரிக்க டாலர் தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை ஆகிறது.
செம்பு
செம்பு விலை, இந்த ஆண்டு ஆரம்பம் முதல் தற்போது வரை, 8 சதவீதம் அளவுக்கு சர்வதேச சந்தையில் விலை சரிவு நிகழ்ந்துள்ளது. பொதுவாகவே பொருளாதார காரணிகளின் மாற்றம், செம்பு விலையை பாதிக்கும். பொருளாதாரம் உயரும்போது செம்பு விலை உயர்வதும், பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்போது சரிவதுமாக ஒருமித்த போக்கு காணப்படும். 2015ம் ஆண்டுக்குப் பின், முதன்முறையாக, இந்த ஆண்டு செம்பு விலை சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் செம்பு நுகர்வில், சீனா முதலிடம் வகிக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு, அமெரிக்கா அதிகப்படியான வரி விதிக்கும் என, அறிவித்து இருந்தது. பின்னர் ஏற்பட்ட பேச்சில், இதை விலக்கிக் கொள்ளும் வகையிலான போக்கு ஏற்பட்டது. இதனால் நிலவி வரும் சூழலில், செம்பு விலை ஏற்றம் கண்டது.
இருப்பினும், லண்டன் பொருள் வர்த்தக சந்தையில், செம்பு இருப்பு அதிகரித்து வருவது, இதன் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|