உலக முதலீட்டு பார்வையின் தேவை உலக முதலீட்டு பார்வையின் தேவை ... நேரடி வரி வருவாய் ரூ.8.74 லட்சம் கோடி நேரடி வரி வருவாய் ரூ.8.74 லட்சம் கோடி ...
மோசடி சேமிப்பு திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2019
00:45

மோசடி சேமிப்பு திட்டங்களை கட்டுப்படுத்தவும், அதில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வழி செய்யும் ஒரு சட்டம் வரவிருக்கிறது. சமீபத்தில், இது குறித்து வழங்கப்பட்ட பரிந்துரைகள், நம் கவனத்தைக் கவர்ந்தன.


இந்தியாவில், கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை, மக்கள் பணத்தை சேமிக்கவே விரும்புகின்றனர். தங்கள் எதிர்காலத்துக்குப் பயன்படும், ஏதேனும் அவசர, அவசிய தேவைகளுக்குப் பயன்படும் என்பதே, இதன் பின்னேயுள்ள யதார்த்தம்.


மக்களின் அறியாமையையும், பேராசையையும் பயன்படுத்தி, பல நிறுவனங்களும், தனி நபர்களும் மோசடி சேமிப்பு திட்டங்களை அறிவித்து,பணத்தை வசூல் செய்கின்றனர். அவர்களுடைய கவர்ச்சிகரமான விளம்பரங்களிலும், வாக்குறுதிகளிலும் மயங்கி, பணத்தை முதலீடு செய்து, பின்னர், திண்டாடுவோர் பலர்.ஒவ்வொரு நாளும், ஏதேனும் ஒரு சீட்டு மோசடி பற்றிய செய்தி, நாளிதழில் வெளிவரும்.



பைனான்ஸ் கம்பெனிகள், கடையை மூட்டை கட்டிக்கொண்டு, ஓடிவிட்ட செய்திகள் வரும். கூடுதல் வட்டிக்கு ஆசைப்பட்ட ஏராளமானோர், பாதுகாப்பற்ற நிறுவனங்களிலும், திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளனர்.பணத்தை ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டால், அவர்களை சட்டப்படி தண்டிக்க போதிய வாய்ப்புகள் இல்லை. சட்டத்தின் ஓட்டைகள் வேறு சாதகமாக இருக்கின்றன. முதலீட்டை திரும்ப வசூலித்து தருவதற்கான வழிமுறையும் இல்லை.



ஒரு காலத்தில், ‘பாட்மா, மாக்ஸிமா’ போன்ற நிறுவனங்கள் இப்படித் தான் திவாலாகின. இப்போது மீண்டும், பல மாநிலங்களில் பல நிறுவனங்கள் மோசடி சேமிப்பு திட்டங்களை அறிவித்து, ஏமாற்றின. அவற்றில் முக்கியமானது, ‘சாரதா சிட் பண்ட்’ மோசடி.இந்த சூழ்நிலையில் தான், சென்ற ஆண்டு, பட்ஜெட் உரையில், ‘முதலீட்டாளர்களைப் பாதுகாக்க சட்டம் இயற்றப்படும்’ என, நிதி அமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்தார்.



முறைப்படுத்தப்படாத சேமிப்பு திட்டங்களை தடை செய்யும் சட்ட மசோதா, கடந்த ஆண்டு பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. பின், அது, வீரப்ப மொய்லி தலைமையிலான, 31 பேர் கொண்ட பார்லிமென்ட் ஆய்வுக் குழுவுக்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சமீபத்தில் இக்குழு தன் பரிந்துரைகளை வழங்கியது. அதாவது, முதலில் எவையெல்லாம் மோசடியான சேமிப்பு திட்டங்கள் என்பதை வரையறை செய்ய வேண்டும். அதில் எது தவறு, எது சட்டத்தை மீறியது ஆகியவற்றையும் தெளிவுபடுத்த வேண்டும் என, இக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.



இந்தியாவில், ஆர்.பி.ஐ., செபி, கம்பெனி விவகாரத் துறை மற்றும் மாநில அரசுகள் உட்பட, மொத்த ஒன்பது அமைப்புகளே, சேமிப்பு திட்டங்களை நெறிப்படுத்துகின்றன. இவற்றிடம் அனுமதி பெறாத எந்த திட்டமும் மோசடி திட்டமே. அப்படி சேமிப்புகளை திரட்டுபவர்கள் மோசடி பேர்வழிகளே.இவர்கள் எல்லாரும் தண்டனைக்கு உரியவர்களே. இத்தகையவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் சிறை தண்டனையோடு, 50 கோடி ரூபாய் வரை அபராதம் உண்டு.



பார்லிமென்ட் நிலைக்குழு முன் வைக்கப்பட்ட விபரங்கள் தான், நம் கவனத்தைக் கவர்கின்றன. உதாரணமாக, இந்தியாவெங்கும் நடைபெற்றுள்ள பல்வேறு நிதி மோசடி தொடர்பான வழக்குகளின் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.கடந்த நான்கு ஆண்டுகளில், சி.பி.ஐ., 146 வழக்குகளை விசாரித்துள்ளது; அமலாக்கத் துறை 56 வழக்குகளை நடத்தியுள்ளது, கம்பெனிகள் விவகாரத் துறையோ, 223 நிறுவனங்கள் தொடர்பான, 32 வழக்குகளைக் கையாண்டுள்ளது.



இவை அல்லாமல், பல்வேறு மாநிலங்கள், 978 வழக்குகளை பல்வேறு விசாரணை அமைப்புகளுக்கு அனுப்பி வைத்துஉள்ளன.செபி மட்டும், கடந்த மூன்றாண்டுகளில் மோசடி சேமிப்பு திட்டங்கள் தொடர்பாக, 64 உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.எவ்வளவு நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளன என்பதற்கு, இந்த எண்ணிக்கையே சான்று. இவை வழக்குகளாக பதிந்தவை. பதியாமல் போனவை எத்தனையோ?



இந்த சூழ்நிலையில் தான், வீரப்ப மொய்லி தலைமையிலான பார்லிமென்ட் நிலைக்குழு, பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவோரின், அத்தனை சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். சொத்துகள் ஏலம் விடப்பட்டு, குறித்த காலத்துக்குள், முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்பத் தரப்பட வேண்டும் என்பதும் சட்டத்தில் குறிப்பிட வேண்டும்.



மேலும், செபி இந்த மோசடி விஷயத்தில் தானே முன்வந்து ஆர்வம் காட்டி, தடுப்பதற்கான வழிமுறைகளை காண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது நிலைக்குழு.கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கீழ்மட்டத்தில், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவோர், சுய லாபங்களுக்காக இதை பயன்படுத்தும் அபாயம் இருக்கிறது என்பதையும்நிலைக்குழு கவனப்படுத்தியுள்ளது.



இதுவரை எல்லாமே சரி. ஆனால், இரண்டு கேள்விகள் இன்னும் தொக்கி நிற்கின்றன. முதலாவது, கூடுதல் வட்டிக்கு ஆசைப்படுவோர் ஒருபுறம் என்றால், சீட்டு திட்டங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் நுண், சிறு வணிகர்கள், குடும்பப் பெண்கள் தான். அவர்களுடைய நிதி தேவைகளின் அளவு பெரியதல்ல. ஆனால், அத்தியாவசியமானது.



அத்தகைய நுண், சிறு வணிகர்களின் தேவைகளை நிறைவேற்ற, போதிய வங்கித் துறை வசதிகள் பெருகாத நிலையில், இது போன்ற முறையற்ற திட்டங்களில் தானே அவர்கள் போய் நிற்பர்? இதற்கான மாற்று வழி என்ன?இரண்டாவது, நிதி தொடர்பான கல்வி. பல பேருக்கு, யார் பைனான்ஸ் கம்பெனி நடத்தலாம், யார் சீட்டு நிறுவனங்கள் நடத்தலாம்; யாரெல்லாம் சேமிப்புகள் திரட்டலாம்; அதற்கு அவர்களுக்கு உரிய அனுமதி இருக்கிறதா... என்பன போன்ற விபரங்கள் தெரியவே தெரியாது.



பெரும்பாலும் நம்பிக்கையின் அடிப்படையிலும், கூடுதல் தொகை திரும்ப வரும் என்ற நப்பாசையிலுமே மோசடி திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இவர்களுக்கு நிதி சார்ந்த கல்வியை யார் வழங்க வேண்டும்? நிதி அமைச்சகமும் உரிய அமைப்புகளும் தானே? பணத்தைப் பெருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை. அதற்கான முறையான வழிகள் என்ன என்பதை பற்றிய நிதிக் கல்வி தேவை. அதை, அனைத்து மக்களுக்கும், அனைத்து மட்டங்களிலும் வழங்க வேண்டும். வந்த பின் காப்பதை விட, வருமுன் காப்பது தானே சிறந்தது!


ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)