பதிவு செய்த நாள்
08 ஜன2019
02:28
மும்பை:‘‘ நாட்டின் அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்தால், அது வங்கித் துறையின் கடன் கலாசாரத்தில் எதிர்மறை பாதிப்பை உண்டாகும்,’’ என, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ் எச்சரித்துள்ளார்.
அவர், நேற்று மும்பையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரதிநிதிகளை சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசியதாவது:நம் அரசியல் சாசன சட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளுக்கு, நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும் உரிமையை வழங்கியுள்ளது.ஆனால், ஒவ்வொரு மாநில அரசும், விவசாய கடன் தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கும் முன், அவற்றின் நிதியாதாரத்தை அவசியம் ஆராய வேண்டும்.மாநில அரசுகள், கடன் தள்ளுபடி அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான நிதியை வங்கிகளுக்கு உடனடியாக ஒதுக்க முடியுமா என்பதை பரிசீலிக்க வேண்டும்.
கண்காணிப்புஅனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டால், அது, கடன் கலாசாரம் மற்றும் கடன் வழங்குவோரின் எதிர்கால நிலைப்பாட்டில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.ரிசர்வ் வங்கி, நாட்டின் பணப்புழக்க நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது. பணப்புழக்கத்தில் நெருக்கடி ஏற்பட இடம் கொடுக்க மாட்டோம். அவ்வாறு ஏற்பட்டால், உடனடியாக சரி செய்யப்படும். அதேசமயம், அளவிற்கு அதிகமான பணப்புழக்கச் சூழலையும் ரிசர்வ் வங்கி அனுமதிக்காது.
வங்கி சாரா நிதி நிறுவன பிரதிநிதிகளை, செவ்வாயன்று சந்திக்க உள்ளேன். அப்போது, அத்துறை எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடி பிரச்னை குறித்து விவாதிக்கப்படும்.ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு இடைக்கால, ‘டிவிடெண்டு’ வழங்க உள்ளதாக ஊடகங்கள்தான் கூறுகின்றன.அது போன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டால், தாமதமின்றி உடனடியாக முதலில் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும்.
கடன் மறுசீரமைப்புகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின், 25 கோடி ரூபாய் வரையிலான வாராக் கடனுக்கு, ஒரு முறை தீர்வாக, கடன் மறுசீரமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது, இத்துறையின் வளர்ச்சிக்கு உதவும்.பொதுத் துறை வங்கிகளின் நிதிவளம் சீராக, ரிசர்வ் வங்கி முக்கியத்துவம் அளிக்கும். வங்கிகளின் வாராக் கடன் குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மத்திய அரசுக்கு ரூ.40,000 கோடி ‘டிவிடெண்டு’ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் இடைக்கால, ‘டிவிடெண்டு’ வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.நடப்பு நிதியாண்டில், மத்திய அரசு, நிதிப் பற்றாக்குறை இலக்கை, 3.3 சதவீதமாக நிர்ணயித்துஉள்ளது.இது, பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனையில் தாமதம், வரி வருவாய் குறைவு போன்றவற்றால் அதிகரிக்கும் என, தெரிகிறது.
இதனால், 1 லட்சம் கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதை சமாளிக்க, ரிசர்வ் வங்கியின் டிவிடெண்டு ஓரளவு துணை புரியும்.வளர்ச்சி திட்டங்கள்மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுகள், 1.47 லட்சம் கோடி ரூபாய்க்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளன. ஆனால், அதற்கான நிதியாதாரம் போதிய அளவிற்கு இல்லாததால், அம்மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|