பதிவு செய்த நாள்
13 ஜன2019
23:51
முதலீடு செய்யும் போது முக்கியமாக கவனிப்பது அவை தரக்கூடிய வருமான பலனை தான். முதலீடுகள், நிதி இலக்குகளுக்கு ஏற்றவையாகவும் இருக்க வேண்டும். எனினும், எல்லா முதலீடுகளையும் அவை தரும் பலனை கொண்டு பரிசீலிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தவகையில் பலனை எதிர்பார்க்க தேவையில்லாத முதலீடுகளை பார்க்கலாம்:
அவசர கால நிதி
எமர்ஜென்சி பண்ட் எனப்படும் அவசர கால நிதி முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது. எதிர்பாராத நெருக்கடிகளின் போது அவசர தேவையை சமாளிப்பதற்கான நிதி இது. எனவே, இந்த நிதி அதிக பலன் தர வேண்டும் என்ற அவசியம் இல்லை. பலனை எதிர்பார்த்தால் இவற்றின் பாதுகாப்பில் சமரசம் ஏற்படலாம். வங்கி சேமிப்பு அல்லது லிக்விட் பண்ட் ஏற்றவை.
ஆயுள் காப்பீடு
காப்பீடு என்பது குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பிற்கானது. எதிர்பாராத அசம்பாவிதத்தின் போது பாதுகாப்பை உறுதி செய்ய, டெர்ம் காப்பீடு பொருத்தமானது. மாறாக, காப்பீட்டை முதலீட்டுடன் சேர்த்து குழப்பிக்கொள்ளக்கூடாது. முதலீடு அம்சம் கொண்ட காப்பீடு திட்டங்கள் அதிக பலன் தராதவை மற்றும் செலவு மிக்கவை.
தங்க நகைகள்
தங்கம் நல்ல முதலீடு என்றாலும், பல காரணங்களால், நகை வடிவில் தங்கம் வாங்குவது மோசமான முதலீடாகவே கருதப்படுகிறது. செய்கூலி, சேதாரம் ஆகிய செலவு உண்டு என்பதோடு, விற்கும் போதும் இதே சிக்கல்கள் உண்டு. முதலீடு நோக்கில் ஈ.டி.எப்., அல்லது தங்க சேமிப்பு பத்திரத்தை நாடலாம். நகை பாரம்பரியமானது.
சொந்த வீடு
தங்க நகை போலவே சொந்த வீடும் தேவை அடிப்படையில் அமைகிறது. வீடு என்பது அடிப்படையில் ஒரு சொத்தாகும். அது முதலீடு அல்ல. எதிர்கால இலக்கிற்காக வீட்டை விற்கப்போவதில்லை. எனினும், முதலீடு நோக்கில் வாங்கப்படும் இரண்டாவது வீடு வருமானம் அளிக்கலாம். அதன் மீதான பலனை கணக்கிடும் அவசியம் உண்டாகலாம்.
பிற முதலீடுகள்
முதலீட்டின் தன்மை மற்றும் தேவையை புரிந்து கொண்டால் அதற்கேற்ப நிதி திட்டமிடலில் ஈடுபடலாம். அவசர கால நிதி, ஆயுள் காப்பீடு போன்றவை நிதி திட்டமிடலில் தவிர்க்க இயலாதவை. தங்க நகை பாரம்பரியமாக அமைகிறது. இவை தவிர, மற்ற முதலீட்டு வாய்ப்புகளை நிதி இலக்குகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|