பதிவு செய்த நாள்
13 ஜன2019
23:54
நிரந்தர பலன் தரும் முதலீடுகளில் ஒன்றான, என்.சி.டி., எனப்படும், பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது தொடர்பான முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
வைப்பு நிதி, மியூச்சுவல் பண்ட் போலவே சில்லரை முதலீட்டாளர்கள் பரிசீலிக்க கூடிய முதலீட்டு வாய்ப்புகளில் ஒன்றாக, என்.சி.டி., எனப்படும் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் அமைகின்றன. வர்த்தக நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நிதி திரட்ட, இந்த வகை கடன் பத்திரங்களை அவ்வப்போது வெளியிடுகின்றன.
இந்த பத்திரங்களுக்கு வட்டி வழங்கப்படும். அண்மையில், மகிந்திரா பைனான்ஸ் நிறுவனம் கடன் பத்திரங்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இதற்கு முன் எச்.டி.எப்.சி., கடன் பத்திரங்களை வெளியிட்டது. ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனமும் கடன் பத்திரங்களை அறிவித்துள்ளது.
வரும் ஆண்டு மேலும் பல வர்த்தக நிறுவனங்கள் கடன் பத்திரங்களை வெளியிட வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக கடன் பத்திரங்கள் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, சில்லரை முதலீட்டாளர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையலாம். எனினும், இவற்றில் முதலீடு செய்யும் முன், சில முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.‘ரிஸ்க்’ உண்டுபொதுவாக, நிறுவனங்கள் வெளியிடும் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் அதிக வட்டி அளிக்க கூடியவை. வைப்பு நிதியுடன் ஒப்பிடும் போது இவற்றின் வட்டி விகிதம் அதிகம். ஆனால், இவற்றில் ரிஸ்க் அம்சமும் அதிகம்.
இந்த பத்திரங்களை வெளியிடும் நிறுவனங்கள், குறிப்பிட்ட வட்டி விகிதம் அளிக்க ஒப்புக்கொள்கின்றன. ஏதேனும் காரணங்களால் நிறுவனத்தால் பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் போனால், பணத்தை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, முதலீடு செய்யும் முன் இந்த பத்திரங்களுக்கான ரேட்டிங்கை கவனிக்க வேண்டும். ரேட்டிங் அமைப்புகள் இதை அளிக்கின்றன.பொதுவாக, ‘ஏஏஏ’ ரேட்டிங் பெற்ற பத்திரங்கள் பாதுகாப்பானவை என கருதப்படுகின்றன. நிறுவனத்தின் கடன் பத்திரத்தில் முதலீடு செய்யும் முன், அந்நிறுவனத்தின் மதிப்பையும் மனதில் கொள்ள வேண்டும்.
குழப்பம் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேட்டிங்கையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இருப்பினும், ரேட்டிங் பாதுகாப்பு அம்சத்தை குறிப்பதே தவிர, முதலீட்டிற்கான உத்திரவாதம் அல்ல என்பதையும் அறிய வேண்டும்.வட்டி வருமானம்அதிக ரேட்டிங் கொண்ட கடன் பத்திரங்கள், 9 சதவீத அளவில் வட்டி வருமானம் அளிக்கலாம். குறைவான ரேட்டிங் கொண்ட பத்திரங்களுக்கு வட்டி விகிதம் அதிகமாக இருக்கலாம். அதற்கேற்ப ரிஸ்கும் அதிகமாக இருக்கும். எனவே, வட்டி விகிதத்தை மட்டும் பார்க்க கூடாது. வட்டி வருமானத்தை மாதாந்திர, காலாண்டு, ஆண்டு அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம்.
மொத்தமாக முதிர்வின் போதும் பெற்றுக்கொள்ளலாம். மொத்தமாக பெறும் போது பலன் சற்று அதிகமாக இருக்கலாம். வருமான தேவைக்கேற்ப இதை தீர்மானிக்கலாம்.பொதுவாக கடன் பத்திரங்கள் நீண்ட கால நோக்கிலானவை. 3 முதல், 10 ஆண்டு வரை முதிர்வு காலம் உண்டு.
நீண்ட காலமாக முதலீடு செய்ய தயாராக இருப்பவர்களுக்கு இவை ஏற்றவை. இந்த பத்திரங்களில் முதலீடு செய்தால் வரி விதிப்பும் பொருந்தும் என்பதை அறிய வேண்டும். எனவே, இவற்றின் பலனை கணக்கிடும் போது, வரி விதிப்பையும் மனதில் கொள்ள வேண்டும். அதிக வரி விதிப்பு வரம்பில் உள்ளவர்களை விட, குறைந்த வரி விதிப்பு வரம்பில் உள்ளவர்களுக்கு இவை ஏற்றதாக இருக்கும் என, கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|