பதிவு செய்த நாள்
22 ஜன2019
23:45
புதுடில்லி : குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடம் பெற்ற பொருட்களுக்கு தர வேண்டிய நிலுவை எவ்வளவு என்பதை, கொள்முதல் நிறுவனங்கள் தெரிவிக்கும் திட்டம், விரைவில் அமலுக்கு வர உள்ளது.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சப்ளை செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தொகையை, நிறுவனங்கள், அரசு துறைகள் ஆகியவை, 45 நாட்களில் வழங்க வேண்டும்.எனினும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு குறித்த காலத்தில், பணம் கிடைப்பதில்லை என்ற புகார் அதிகரித்துள்ளது.
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அமலாக்க நடவடிக்கைகளால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன. இந்நிலையில், சப்ளை செய்த பொருட்களுக்கான பணம் கிடைப்பதில் ஏற்படும் தாமதம், அந்நிறுவனங்களின் வளர்ச்சிக்குமேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 45 நாட்கள் கடந்தும் பணம் தராமல் உள்ள நிறுவனங்கள், அரசு துறைகள் ஆகியவை, அது பற்றி, ‘கெடு’ முடிந்த, 30 நாட்களுக்குள், நிறுவனங்கள், பதிவாளர் அலுவலகத்தில் தெரியப்படுத்தும் நடைமுறை அமலாக உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இது குறித்த அரசாணை பிறப்பிக்கப்படும்.
இதனால், குறித்த காலத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பணம் கிடைக்கும். பணம் தராமல் இழுத்தடிக்கும் நிறுவனங்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கவும் இத்திட்டம் உதவும். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் நிதி நெருக்கடி மற்றும் நடைமுறை மூலதனத் தேவைகளை சமாளிக்க, இத்திட்டம் துணை புரியும். இவ்வாறு அவர் கூறினார்.
மூன்று மடங்கு:
பொருட்களை சப்ளை செய்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 45 நாட்கள் தாண்டியும், பணம் தராத கொள்முதல் நிறுவனங்கள் மீது, புகார் தெரிவிக்க, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில், வர்த்தக வசதி சேவைப் பிரிவு உள்ளது. ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள வட்டியை விட, மூன்று மடங்கு அதிக வட்டியுடன், நிலுவையை வசூலிக்க, சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|