பதிவு செய்த நாள்
05 பிப்2019
23:20
புதுடில்லி, பிப். 6-–டாடா நானோ கார் குறித்து பல்வேறு விதமான செய்திகள் உலாவி வரும் நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில், ஒரு நானோ கார் கூட தயாரிக்கப்படவில்லை என்பதும், ஒரு கார் கூட விற்பனை ஆகவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
ரத்தன் டாடாவின், ’கனவு கார்’ என்றும், ’மக்களின் கார்’ என்றும் அழைக்கப்பட்ட நானோ காருக்கு, எதிர்பார்த்த அளவுக்கு, சந்தையில் வரவேற்பு இல்லாமல் போனது.’மலிவான கார்’ என்று விளம்பரம் செய்தது தவறாகி விட்டது என, ஒரு கட்டத்தில் ரத்தன் டாடாவே தெரிவித்தார். இந்நிலையில், நானோ கார் தயாரிப்பை, 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் டாடா மோட்டார்ஸ் கைவிட்டுவிட இருப்பதாக செய்திகள் வரத் துவங்கின.
தற்போது ஜனவரி மாதத்தில் தயாரிப்பு, விற்பனை என எதுவுமே இல்லாமல் போய்விட்டது தெரியவந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஜனவரியில், 83 கார்கள் தயாரிக்கப்பட்டன; 62 கார்கள் விற்பனை செய்யப்பட்டன.ஏற்றுமதியை பொறுத்தவரை, இரண்டு ஆண்டுகளாக, ஒரு கார் கூட ஏற்றுமதி ஆகவில்லை.இந்நிலையில், நானோ கார் தயாரிப்புக்காக, மேலும் முதலீடுகள் எதுவும் செய்யும் திட்டத்தில், டாடா மோட்டார்ஸ் இருப்பதாக தெரியவில்லை.
இது குறித்து, டாடா மோட்டார்ஸ் தரப்பில், ’இப்போதைக்கு எந்தவித முடிவும் எடுக்கப்பட வில்லை. வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து, கார் தயாரிப்பு தொடரும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|