பதிவு செய்த நாள்
08 பிப்2019
00:07
புதுடில்லி:ஜனவரி மாதத்தில், பயணியர் வாகனங்களின் சில்லரை விற்பனை, 33.97 சதவீதம் அதிகரித்து, மொத்தம், 2 லட்சத்து, 71 ஆயிரத்து, 395 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளதாக, வாகன முகவர்கள் கூட்டமைப்பான, எப்.ஏ.டி.ஏ., தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்த கூட்டமைப்பின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:ஜனவரி மாதத்தில் விற்பனை அதிகரித்ததற்கு முக்கிய காரணம், வாகன தயாரிப்பு நிறுவனங்கள், ஆண்டு இறுதி சலுகைகளை, ஜனவரி மாதத்துக்கும் தொடர்ந்தது ஆகும். மேலும், புதிய வாகன அறிமுகங்களும் விற்பனை அதிகரிப்புக்கு உதவிகரமாக இருந்தது.
இருசக்கர வாகனங்கள் பிரிவில், ஜனவரி மாதத்தில், 11 லட்சத்து 89 ஆயிரத்து 679 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே, டிசம்பர் மாதத்தில், 11 லட்சத்து 41ஆயிரத்து 209 ஆக இருந்தது. ஜனவரி மாதத்தில் விற்பனை, 4.25 சதவீதம் அதிகரித்துள்ளது.
வர்த்தக வாகனங்களை பொறுத்தவரை, விற்பனையில் பெரிய மாற்றம் இன்றி மந்தமாகவே இருந்தது. ஜனவரி மாதத்தில், 53 ஆயிரத்து 732 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே, டிசம்பர் மாதத்தில், 53 ஆயிரத்து 712 ஆக இருந்தது.மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை, ஜனவரியில், 11.86 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜனவரியில் மொத்தம், 50 ஆயிரத்து 344 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே, டிசம்பரில், 45 ஆயிரத்து 8 ஆக இருந்தது.மொத்த வாகனங்களின் விற்பனையை பொறுத்த வரை, ஜனவரி மாதத்தில், 8.5 சதவீதம் அதிகரித்து, 15 லட்சத்து 65 ஆயிரத்து 150 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டிசம்பர் மாதத்தில், மொத்தம், 14 லட்சத்து 42 ஆயிரத்து, 514 வாகனங்கள் விற்பனை செய்யப் பட்டுள்ளன.அடுத்து வரும் மாதங்களை பொறுத்தவரை, இடைக்கால பட்ஜெட் காரணமாக, வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும் என கருதப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|