பதிவு செய்த நாள்
08 பிப்2019
00:20
மும்பை:ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ‘ரெப்போ’ வட்டியை, 0.25 சதவீதம் குறைத்து, 6.25 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இந்த பலனை, வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும்பட்சத்தில், வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான தவணைக் காலம் குறையும்.
மும்பையில், ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ் தலைமையில், மூன்று நாட்களாக நடைபெற்ற, நிதிக் கொள்கை குழு கூட்டம், நேற்றுடன் முடிவடைந்தது.இக் கூட்டத்தில், ‘ரெப்போ வட்டி, மாற்றமின்றி நீடிக்க வேண்டும்’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர், விரால் ஆச்சார்யாவும் மற்றொரு உறுப்பினரான, சேதன் கதேவும் வலியுறுத்தினர்.
‘ரெப்போ வட்டியை குறைக்க வேண்டும்’ என, சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட நான்கு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். அதனால், பெரும்பான்மை ஆதரவுடன், ரெப்போ வட்டி குறைப்பு தீர்மானம் நிறைவேறியது.அதேசமயம், நிதிப் புழக்கத்தை கட்டுக்குள் வைக்கும் கொள்கையில் இருந்து, நடுநிலையான அணுகுமுறைக்கு மாற, அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, ரிசர்வ் வங்கி, முதன்முறையாக, காலை 11:45 மணிக்கு, நிதிக் கொள்கை அறிக்கையை, வலைதளத்தில் வெளியிட்டது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2018 டிசம்பரில், 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு, சில்லரை பணவீக்கம், 2.2 சதவீதமாக குறைந்துள்ளது. இதே நிலை, குறுகிய காலத்திற்கு நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உணவுப் பொருட்கள், காய்கறிகள், கச்சா எண்ணெய், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளின் பணவீக்கம், நிதிச் சந்தையின் ஏற்ற, இறக்கம், பருவமழை கணிப்பு உள்ளிட்ட அம்சங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. நடுத்தர கால அளவில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரியவும், சில்லரை பணவீக்கத்தை, இலக்கு அளவான, 4 சதவீதத்திற்குள் வைத்திருக்கும் நோக்கிலும், ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
**நடப்பு நிதியாண்டில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம், ஆறு முறை நடைபெற்றது. அதில், இரு முறை ‘ரெப்போ’ வட்டி, தலா, 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டது ; ஒரு முறை, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மூன்று முறை, மாற்றம் ஏதும் செய்யவில்லை.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
* ‘ரெப்போ’ வட்டி, 0.25 சதவீதம் குறைத்து 6.25 சதவீதமாக நிர்ணயம்
* ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி, 0.25 சதவீதம் குறைத்து 6 சதவீதமாக நிர்ணயம்
* வங்கி ரொக்க இருப்பு விகிதம், 4 சதவீதம் என்பதில் மாற்றமில்லை
* நடப்பு ஜன., – மார்ச் காலாண்டில், சில்லரை பணவீக்க மதிப்பீடு, 2.8 சதவீதமாக குறைப்பு
* சில்லரை பணவீக்கம் 2019-–20ம் நிதியாண்டில், ஏப்., – செப்., வரை 3.2-–3.4 சதவீதம் ; அக்., – டிசம்பர் வரை, 3.9 சதவீதமாக இருக்கும்
* மொத்த உள்நாட்டு உற்பத்தி, நடப்பு 2018-–19ம் நிதியாண்டில், 7.2 சதவீதம் ; 2019-–20ம் நிதியாண்டில், 7.4 சதவீதமாக உயரும்
* மொத்த உள்நாட்டு உற்பத்தி, இந்தாண்டு, ஏப்., – செப்., வரை, 7.2 -–7.4 சதவீதம் ; அக்., – டிசம்பர் வரை, 7.5 சதவீதமாக இருக்கும்
* கச்சா எண்ணெய் விலை, வர்த்தக போர் பதற்றம் ஆகியவை, சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும்
*மத்திய பட்ஜெட், மக்களின் செலவழிப்பு வருவாயை அதிகரித்து, தேவையை பெருக்க உதவும்
* வங்கிகளின் ‘பெருந்தொகை டெபாசிட்’டிற்கான அளவுகோல், 1 கோடி ரூபாயில் இருந்து, 2 கோடி ரூபாயாக உயர்வு
* வங்கி சாரா நிதி நிறுவனங்களின் முக்கிய செயல்பாடுகள் குறித்த விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்
* அன்னியச் செலாவணிக்கு நிகரான ரூபாய் மதிப்பின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க, செயல் திட்டக் குழு அமைக்கப்படும்
*பெரு நிறுவனங்களின் கடன் பத்திரங்களில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீட்டிற்கான கட்டுப்பாடு நீக்கம்
* மின்னணு பணப் பட்டுவாடா மற்றும் ‘இ–வாலட்’ சேவை தொடர்பாக ஆய்வறிக்கை வெளியிடப்படும்
*சிறு,நடுத்தர விவசாயிகளுக்கு, பிணையின்றி வழங்கப்படும் வங்கிக் கடன் வரம்பு, 1 லட்சம் ரூபாயில் இருந்து, 1.60 லட்சம் ரூபாயாக உயர்வு
* வேளாண் கடன் குறித்து ஆய்வு செய்ய, செயற்குழு அமைப்பு
* நகர்புற கூட்டுறவு வங்கிகள் வளர்ச்சிக்கு, அவற்றை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வர முடிவு
* ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக் கொள்கை குழு கூட்டம், ஏப்., 2-–4 வரை நடைபெறும்
**சிறிய வர்த்தகர்களுக்கு பயன்
ரிசர்வ் வங்கி ‘ரெப்போ’ வட்டியை குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இது, பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். சிறிய வர்த்தகர்கள், வீடு வாங்குவோர் உள்ளிட்டோருக்கு, குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்
– பியுஷ் கோயல், மத்திய நிதியமைச்சர் (பொறுப்பு)
மத்திய அரசுக்கு உரிமை உள்ளது
ரிசர்வ் வங்கியிடம், இடைக்கால டிவிடெண்ட் கோரவும், அத்தொகையை, விருப்பமான திட்டங்களுக்கு செலவிடவும், மத்திய அரசுக்கு முழு உரிமை உள்ளது.ரிசர்வ் வங்கி, நிதிச் சந்தையில் பணப்புழக்கத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
எந்த துறைக்கும், பணப்புழக்க பற்றாக்குறை என்ற பேச்சிற்கு இடமில்லாத வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், இதுவரை, வெளிச் சந்தை நடவடிக்கைகளுக்காக, ரூ.2.36 லட்சம் கோடி புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.
– சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கி கவர்னர்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|