பதிவு செய்த நாள்
08 பிப்2019
23:55
புதுடில்லி:அனில் அம்பானியின், ‘ரிலையன்ஸ்’ குழும நிறுவனங்களின் சந்தை மூலதனம், நான்கு நாட்களில், 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை சரிவடைந்துள்ளது. இதற்கு, ‘எல் அண்டு டி, மற்றும் எடல்வைஸ்’ குழுமங்கள் தான் காரணம் என, ரிலையன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
அனில் அம்பானியின், ‘ஆர்காம்’ என, சுருக்கமாக அழைக்கப்படும், ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனத்திற்கு, 46 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது.இந்நிறுவனம் மீது முதன் முதலாக, ஸ்வீடனைச் சேர்ந்த, ‘எரிக்சன்’ நிறுவனம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில், திவால் நடவடிக்கைக்காக விண்ணப்பித்தது.இதையடுத்து, முகேஷ் அம்பானியின், ‘ஆர்ஜியோ’ நிறுவனத்திற்கு, அகண்ட அலைக்கற்றை உரிமத்தை விற்று கிடைக்கும், 975 கோடி ரூபாயில், எரிக்சன் நிறுவனத்திற்கு, 550 கோடி ரூபாய் வழங்குவதாக கூறி, ஆர்காம் அவகாசம் கேட்டது.
இதை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஏற்று, திவால் நடவடிக்கையை நிறுத்தி வைத்தது. ஆனால், எதிர்பார்த்தபடி, சொத்துகளை விற்பனை செய்ய முடியவில்லை.இந்நிலையில், சட்டச் சிக்கல் வரும் எனக் கூறி, ஆர்ஜியோவும் பின்வாங்கி விட்டது.அதனால், வேறு வழியின்றி, ‘திவால் நடவடிக்கைக்கு உட்பட தயார்’ என, ஆர்காம், கடந்த வார இறுதியில் அறிவித்தது.
இதையடுத்து, இவ்வாரத்தின் துவக்க வர்த்தக தினமான திங்களன்று, ஆர்காம் பங்கு விலை, 54 சதவீதம் சரிவடைந்து, 5.30 ரூபாயாக வீழ்ச்சி கண்டது.அடுத்த இரு தினங்களில், அனில் அம்பானியின், ‘ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ ஆகியவற்றின் பங்கு விலையும், தலா, 60 சதவீதம் சரிவடைந்தது. ‘ரிலையன்ஸ் கேப்பிடல்’ நிறுவனப் பங்கின் விலை, 34 சதவீதம் குறைந்தது.இந்நிறுவனங்களின் பங்கு விலை, அதல பாதாள வீழ்ச்சி கண்டதற்கு, அப்பங்குகளை அடமானமாக வைத்திருந்த நிறுவனங்கள் தான் காரணம் என, தெரிய வந்துள்ளது.
இந்த வகையில், அனில் அம்பானியின் நான்கு நிறுவனங்களின், 550 கோடி பங்குகள், நான்கு தினங்களில் விற்கப்பட்டுள்ளன.இதனால், இந்நிறுவனங்களில் அனில் அம்பானி குடும்பத்தினரின் பங்கு மூலதன மதிப்பு, 3 -– 8 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து, ஆர்காம் வெளியிட்டுள்ள அறிக்கை:அடமானம் வைத்த அனில் அம்பானி குழும நிறுவன பங்குகளை, எல் அண்டு டி மற்றும் எடல்வைஸ் குழுமங்கள் சட்ட விரோதமாகவும், உள்நோக்கத்துடனும், வெளிச் சந்தையில் விற்பனை செய்துள்ளன. இதனால், குழும நிறுவனங்களின் சந்தை மூலதனம், இதுவரை இல்லாத வகையில், நான்கு நாட்களில், 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை குறைந்துள்ளது.
இக்குழுமத்தில் முதலீடு செய்துள்ள, 74 லட்சம் நிதி நிறுவனங்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் உட்பட, அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால், விதிகளை மீறி, அடகு வைத்த பங்குகளை மொத்தமாக விற்பனை செய்த நிறுவனங்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, ஆர்காம் ஆலோசித்து வருகிறது.மற்றபடி, இந்த சரிவுக்கு முன், நான்கு நிறுவனங்கள் எப்படி செயல்பட்டனவோ, அதேபோல தற்போதும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முகேஷ் – அனில் சகோதரர்கள்
திருபாய் அம்பானி நிறுவிய, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், முதன் முதலாக, 1977ல் பங்குச் சந்தை பட்டியலில் இணைந்தது. அப்போது இந்நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்த லட்சக்கணக்கானோர், பின்னாளில் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் உயர்ந்தனர்.
கடந்த, 2002ல், திருபாய் அம்பானி மறைந்தபோது, இந்தியாவில் வேறு எந்த நிறுவனத்தில் இல்லாத வகையில், ரிலையன்ஸ் குழுமத்தில், 20 லட்சத்திற்கும் அதிகமான பங்கு முதலீட்டாளர்கள் இருந்தனர். இந்நிலையில், முகேஷ் – அனில் அம்பானி சகோதரர்கள், 2006ல் பிரிந்தனர்.முகேஷ், தன் சிறந்த அனுபவத்தால், ரிலையன்ஸ் குழுமத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறார். அனில் அம்பானி, ஒவ்வொரு துறையில் இருந்தும் வெளியேறி வருகிறார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|