பதிவு செய்த நாள்
09 பிப்2019
23:39
புதுடில்லி:கடந்த ஆண்டு, டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன், 8.95 லட்சம் கோடியில் இருந்து, 8.64 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இது குறித்து, மத்திய நிதித் துறை இணை அமைச்சர், ஷிவ் பிரதாப் சுக்லா, லோக்சபாவில் கூறியதாவது:பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன், 2018, மார்ச்சில், 8 லட்சத்து, 95 ஆயிரத்து, 601 கோடி ரூபாயாக இருந்தது.இது, நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டில், ஏப்ரல் – டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், 31 ஆயிரத்து, 168 கோடி ரூபாய் குறைந்து, 8 லட்சத்து, 64 ஆயிரத்து, 433 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
முந்தைய ஆட்சியில், கடன் வழங்கியதில் காட்டிய தீவிரம், சொத்து இருந்தும் கடனை திரும்பத் தராதது, மோசடி மற்றும் ஊழல்களால், பொதுத் துறை வங்கிகளின் இடர்ப்பாட்டு கடன் உயர்ந்துள்ளது.இதுகுறித்து, 2015ல், ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, இடர்ப்பாட்டு கடன்களை, வாராக் கடன்களாக மாற்றும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன், வாராக் கடன்களை மறுசீரமைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த திட்டம், 2018, மார்ச் இறுதி வரை அமலில் இருந்தது. இந்த வகையில், இடர்ப்பாட்டு கடன்கள், வாராக் கடன்களாக மாற்றப்பட்டதால், பொதுத் துறை வங்கிகளின் மொத்த வாராக் கடன் அதிகரித்தது.கடந்த, 2014, மார்ச் நிலவரப்படி, 2 லட்சத்து, 27 ஆயிரத்து, 264 கோடி ரூபாயாக இருந்த வாராக் கடன், 2017, மார்ச்சில், 6 லட்சத்து, 84 ஆயிரத்து, 732 கோடி ரூபாயாக உயர்ந்தது.
எனினும், மத்திய அரசு, 2015 -– 16ல் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடனை வெளிப்படையாக அங்கீகரித்து, அவற்றை திரும்பப் பெற எடுத்த நடவடிக்கைகள், நல்ல பலனைத்
தந்துள்ளன.
கடந்த ஆண்டு, டிசம்பர் வரை, பொதுத் துறை வங்கிகள், 3 லட்சத்து, 33 ஆயிரத்து, 491 கோடி ரூபாய் கடனை வசூலித்துள்ளன.பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க, மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. அத்தகைய திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|