பதிவு செய்த நாள்
10 பிப்2019
23:40
சீரான முதலீட்டின் அவசியத்தை யாராலும் மறுக்க முடியாது. முதலீடு செய்யும் போது, பல விஷயங்களை பரிசீலிக்க வேண்டும் என்பது போல, முதலீடு செய்வதற்கு முன், கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களும் இருக்கின்றன. முதலீடு பாதை சீராக அமைந்து, எதிர்கால வளத்தை நோக்கி முன்னேற, இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்:
இல்ல பட்ஜெட்:
பலரும் முதலீட்டை மேற்கொள்ளும் போது, பட்ஜெட்டின் அருமையை உணருவதில்லை. குடும்ப செலவுக்கு என்று முறையான பட்ஜெட் இல்லாமலேயே, சேமிப்பையும், முதலீட்டையும் துவக்குகின்றனர். ஆனால், இல்ல பட்ஜெட்டை வகுத்துக்கொண்டால், கையில் உள்ள உபரித்தொகை தெளிவாக தெரியும். செலவுகளை குறைக்கவும் இது உதவும்.
கடன் விடுதலை:
முதலீடு செய்வதற்கு முன் எந்தவித கடனும் இல்லாமல் இருப்பது நல்லது. கடன்களை முழுவதும் அடைக்க முடியாவிட்டாலும் அதற்கான திட்டமிடல் இருக்க வேண்டும். முக்கியமாக, அதிக வட்டி விழுங்கும் கிரெடிட் கார்டு கடன் போன்றவற்றை பைசல் செய்ய வேண்டும். வீட்டுக்கடன் போன்றவற்றை முன்கூட்டியே அடைக்க திட்டமிடலாம்.
காப்பீடு பாதுகாப்பு:
காப்பீடு பெறுவதன் அவசியத்தை வலியுறுத்திக்கொண்டே இருக்கலாம். ஒருவர் போதுமான ஆயுள் காப்பீடு பாதுகாப்பு பெற்றிருக்க வேண்டும். தனக்கும், குடும்பத்திற்குமான மருத்துவ காப்பீடும் அவசியம். இல்லை எனில், மருத்துவ தேவைக்காக முதலீட்டு தொகையில் கைவைக்க வேண்டி வரலாம்.
இலக்குகள் எவை?:
முதலீடுகள் இலக்குகளுக்கு ஏற்ப அமைந்திருப்பது முக்கியம். முதலீடு செய்யும் முன் இலக்குகளை அவற்றுக்கான இலக்குகளை தெளிவாக வரையறை செய்து கொள்ள வேண்டும். இலக்குகளை குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால இலக்குகள் என பிரித்துக்கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும்.
அவசர கால நிதி:
காப்பீடு போலவே அவசர கால நிதியை உருவாக்கி கொள்வதும் தவிர்க்க இயலாதது. ஆறு மாத கால அடிப்படை செலவுகளுக்கான தொகையே அவசர கால நிதியாக கொள்ளப்படுகிறது. இந்த வகை நிதி கைவசம் இருந்தால், எதிர்பாராத நெருக்கடிகளின் போது கூட, முதலீடு தொகை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|