பதிவு செய்த நாள்
10 பிப்2019
23:52
கமாடிட்டி சந்தை கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை, இந்த ஆண்டு துவக்கம் முதலே உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், இம்மாதம் முதல் வாரத்தில், சற்று சரிந்து வர்த்தகம் ஆகி முடிவுற்றது.இந்த சரிவுக்கு, பல்வேறு காரணங்களை சொல்லலாம்:
உலக அளவில் பொருளாதார வளர்ச்சி குறித்து எழும் சந்தேகங்கள்கச்சா எண்ணெயின் தேவை குறித்து எழும் கேள்விகள்பங்குச் சந்தைகளில் தொடரும் சரிவுஅமெரிக்க நாணய குறியீடான, டாலர் இண்டெக்ஸ், கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு பெற்றது
ஐரோப்பிய நாணயத்தின் மதிப்பு சரிவுஇது போன்ற பல்வேறு காரணங்களால், கடந்த வாரம், கச்சா எண்ணெய், விலை சரிந்து வர்த்தகம் ஆனது.அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதல் குறித்து, கடந்த மாதம் இறுதியில், இவ்விரு நாடுகளின் அதிகாரிகளுக்கிடையே பேச்சு நடைபெற்றது. ஆனால், எந்தவொரு சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை.
அடுத்தகட்டமாக, மார்ச், 1ம் தேதியன்று, மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே பேச்சு நடைபெற இருக்கிறது. இந்த சந்திப்பு குறித்து மிகப் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இதில் ஏற்படும் மாற்றங்கள், சந்தையில் ஏற்றத் தாழ்வுகளை நிச்சயம் ஏற்படுத்தும்.ஒபெக் உறுப்பு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா, ஜனவரி மாதத்தில், தன் உற்பத்தியை, தினசரி, 4 லட்சம் பேரல் என, குறைத்து அறிவித்திருந்தது.
உற்பத்தி குறைப்பு நிலவரங்களை மேற்பார்வை செய்யும் மேற்பார்வை குழுவின் கூட்டம், வரும் ஏப்ரலில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கூட்டத்தை மார்ச் மாதமே நடத்துவது என, ஒபெக் அமைப்பு முடிவு செய்துள்ளது.இது, சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, கடந்த வெள்ளியன்று, கச்சா எண்ணெய் விலை, 3 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
வெனிசுலா நாட்டின் மீது, அமெரிக்கா கொண்டு வந்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக, அந்நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி, பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.வாரம் ஒரு முறை வெளிவரும், அமெரிக்காவின் எண்ணெய் இருப்பு விபரம், கடந்த வாரம் வியாழன் அன்று வெளியானது. அதில், எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான இருப்பு உள்ளதாக விபரம் வெளியானது. இது, சந்தையில் விலை சரிவுக்கு காரணமாக அமைந்தது.
ஷெல் ஆயில் எனப்படும், அமெரிக்காவின், கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது, தினசரி உற்பத்தியானது, 1 கோடியே, 20 லட்சம் பேரல்களை தாண்டி, வரலாற்று உச்சத்தை அடைந்து வருகிறது.
தங்கம் வெள்ளி
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை, கடந்தாண்டு நவம்பர் மாதம் முதலே உயர்ந்து வந்தது. இந்நிலையில், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அதிகப்படியான உயர்வை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில், பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்று நாட்களாக சரிந்து காணப்பட்டன. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே, இறக்குமதி வரி விதிப்பு சம்பந்தமான பேச்சு, சுமுக நிலையை எட்டவில்லை. இதையடுத்து, அசாதாரண சூழல் தொடரலாம் எனும் சஞ்சலம் காரணமாக, பங்குச் சந்தைகள் சரிந்தன.
பங்குச் சந்தைகளின் இத்தகைய சரிவு காரணமாகவும் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை உயர்ந்து வருகிறது.அமெரிக்காவின் வட்டி விகிதம் தொடர்ந்து உயர்த்தப்படலாம் என்ற கண்ணோட்டம் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது வெளிவரும் பொருளாதார காரணிகள் அடிப்படையில், பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இருக்காது என்ற சூழல் உருவாகியுள்ளது.
இதனால், வட்டி விகித உயர்வு நீட்டிக்கப்படும் என்ற கருத்தால், அமெரிக்க நாணயத்தின் மதிப்பு இறங்கியது. இதன் காரணமாக, தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை அதிகரித்து வருகிறது.
மேலும் செலவினங்கள் தொடர்பான சர்ச்சையில், அமெரிக்க பார்லிமென்ட் ஒரு மாதத்திற்கும் மேலாக முடங்கியிருந்ததும், சந்தைக்கு சாதகமான சூழல் ஏற்பட வழிவகுத்தது.ஐரோப்பிய பொருளாதாரம் எதிர்பார்த்த அளவை விட வளர்ச்சி குறைவாக இருந்ததால், யூரோ நாணயத்திற்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு, தற்போது உயர்ந்து வருகிறது. இது, தங்கம் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருகிறது. இதனால், கடந்த வாரம் தங்கத்தின் விலையில் சிறிதளவு தொய்வு ஏற்பட்டது.
கடந்த வியாழன் அன்று, ஐரோப்பிய ஆணைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு மற்றும் அடுத்த ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சியை குறைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி.டி.ஆர்., எனப்படும், தங்க, இ.டி.எப்., சேமிப்பு முறையில், கடந்த வாரம் தங்க இருப்பு விகிதம், 1 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
தங்கம் உற்பத்தியை பொறுத்தவரை, ஜி.எப்.எம்.எஸ்., நிறுவனம் நடத்திய உலக தங்க உற்பத்தி கருத்துக் கணிப்பு நிலவரத்தில், தொடர்ந்து சீனா முதலிடம் வகித்து வருகிறது.சீனாவின் மொத்த தங்கம் உற்பத்தி, 426 டன் ஆகும். ஆஸ்திரேலியா, 275 டன்னுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 270 டன்னுடன் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக நாடுகளின் மொத்த உற்பத்தியானது, 2017ல், 3,247 டன் ஆக இருந்தது. இது, அதற்கு முந்தைய ஆண்டான, 2016ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 5 டன் குறைவாகும்.
செம்பு
செம்பு விலை, தொடர்ந்து ஐந்தாவது வாரமாக அதிகரித்து, வர்த்தகமாகி வருகிறது. சமீப காலமாக, விலையில் முன்னேற்றம் காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தென் அமெரிக்க நாடான சிலி நாட்டில் உள்ள மிகப் பெரிய செம்பு சுரங்கத்தில், கடந்த ஆண்டில், உற்பத்தி, 1.9 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவும் தற்போதைய விலை ஏற்றத்துக்கு சாதகமாக அமைந்தது. கடந்த, 2018ம் ஆண்டில் பெரிய அளவில் விலை சரிவை சந்தித்தது செம்பு. அதற்கு முன், 2017ம் ஆண்டில், 30 சதவீதம் அளவுக்கு விலை உயர்வு கண்டதும் நினைவுகூரத்தக்கது.
லண்டன் பொருள் வாணிப சந்தையில், செம்பு இருப்பு குறைந்து வருகிறது. தற்போது, மொத்த இருப்பு, 87 ஆயிரத்து, 725 டன்னாக உள்ளது. இது, ஜனவரி மாதத்தில், 1 லட்சத்து, 30 ஆயிரம் டன்னாக இருந்தது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|