பதிவு செய்த நாள்
11 பிப்2019
00:05
‘சென்செக்ஸ்’ குறியீட்டின் சமீபகால நகர்வுகள், சந்தையின் உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
குறியீடுகள் அதிகம் விழாத சூழலில், தங்கள் பங்குகள் மிக பலமான சரிவை காண்பது, முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி அளித்து வருகிறது. நேரடி பங்கு முதலீடு செய்யும் பெரும்பாலானோர், தங்கள் போர்ட்போலியோவின் சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மியூசுவல் பண்டு முதலீடுகளும் எதிர்பார்த்தபடி அமையாத சூழலில், அடுத்து என்ன செய்வது என்ற தவிப்பு, சந்தையில் தெரிகிறது.
முதலீட்டாளர்கள், ஒருவருக்கொருவர் பரஸ்பர ஆலோசனைகளை வழங்கி, இந்த இக்கட்டான காலத்தை கடக்க முனைகின்றனர். ஆனால், இந்த ஆலோசனைகளின் தரம் மிகவும் முக்கியம். அவை தரமான ஆலோசனைகளாக இருந்தால், நன்மை ஏற்படும். மாறாக, தரம் இல்லாமலோ, மேம்போக்காகவோ அமைந்தால், பாதிப்புகளை மேலும் ஏற்படுத்தும்.
கடினமான காலகட்டங்களை கடந்து வெற்றி பெற, தரமான எண்ணங்களும், முதலீட்டு முடிவுகளும் அத்தியாவசியம்.கடந்த காலம் எப்படி அமைந்தாலும், எதிர்காலத்தை சீரமைத்துக் கொள்ள, இவை வழிவகுக்கும். அத்தகைய எண்ணங்களும், ஆலோசனைகளும் தாமாக நம்மை தேடி வராது; அவற்றை அடையாளம் கண்டு, நாமாக நாடி சேர்ந்தடைய வேண்டும். இதற்கு, பல தடைகள் அமையலாம்.
முக்கியமாக, முதலீட்டு வெற்றிக்கு சில கூடா நட்புகளும், சேராத சித்தாந்தங்களும் பெரும் தடையாக அமையும். அவற்றை முழுதும் தவிர்த்து, சரியான எண்ணச் சூழலையும், சிந்தனை போக்கையும் ஏற்படுத்திக் கொள்வது, ஒவ்வொரு முதலீட்டாளரின் கடமை.இதை ஏற்படுத்திக் கொள்வது தனி நபர் பொறுப்பு. கடந்த காலத்தின் தோல்விகளை கடந்து, எதிர்காலத்தை நோக்கி உடனடியாக நகர வேண்டிய கட்டாயம், நம் அனைவருக்கும் இருக்கிறது.
முதலீட்டாளர்களான நம் வாழ்வில் வெற்றி என்பது, தோல்விகளை கடந்து சென்றால் மட்டுமே நம்மை வந்து அடையும். ஆனால், அது எளிதல்ல. தோல்வியை ஒப்புக்கொண்டால் மட்டுமே, நாம் முன்னே செல்ல முடியும்.
ஒப்புக்கொண்ட பின், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற நகர்வை ஏற்படுத்தும். இல்லாவிட்டால், ஒன்றும் செய்யாமல் இருக்கும் தேக்க நிலைக்கு, நம்மை நாமே தள்ளி விடுவோம்.காலம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பது, எந்த தீர்வையும் தராது. மாறாக, நாளடைவில் நம் விரக்தியை மிகைப்படுத்தி, சந்தையை விட்டே வெளியேறச் செய்துவிடும்.
மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வது தான், நம் தற்போதைய தேவை. அந்த மாற்றம், எதிர்கால வெற்றிக்கு தேவையான சிந்தனைகளையும், சேர்க்கைகளையும் ஏற்படுத்த வேண்டும்.சந்தை மாறுவதற்கு முன், நாம் மாறுவது மட்டுமே, நம்மை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
பங்குச்சந்தை
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|