பதிவு செய்த நாள்
11 பிப்2019
00:08
ஆர்.பி.ஐ., எனப்படும் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் வந்த பின், நடைபெற்ற முதல் நிதிக் கொள்கை குழுவின் சந்திப்புக்கு பின், ‘ரெப்போ’ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் இது செய்யப்பட்டது? இதனால், பொதுமக்களுக்குப் பயன் உண்டா?
நிதிக் கொள்கை குழு சந்திப்பதற்கு முதல் நாள், நிடி ஆயோக்கின் துணைத் தலைவர் பேசும் போது, ‘ஆர்.பி.ஐ., வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைக்கலாமே’ என்று தெரிவித்தார். மத்திய அரசு இந்தத் திசையில் செல்லவே விரும்புகிறது என்பதை, குறிப்பால் உணர்த்துவது போன்று இருந்தது அவரது கருத்து.
அதற்கு ஏற்பவே, மறுநாள் நடைபெற்ற கூட்டமும் முடிவெடுத்தது. 18 மாதங்களுக்குப் பின், ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
சமிக்ஞை
இதற்கு முன், உர்ஜித் படேல் கவர்னராக இருந்த போது, ஆர்.பி.ஐ.,யின் நோக்கம், நாட்டின் நிதிப் பற்றாக்குறையை, 3 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே. அதற்கேற்ப, உர்ஜித் படேல், வட்டி விகிதங்களை இழுத்துப் பிடித்து வந்தார். தற்போது, நிலைமை மாறியுள்ளது.
இடைக்கால பட்ஜெட்டிலேயே மாற்றத்துக்கான சமிக்ஞை தெரிந்தது. இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் நம் நிதிப் பற்றாக்குறை, 3.4 சதவீதமாக இருக்கும். அதன் பின், வரும் ஆண்டுகளில், நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தது இடைக்கால பட்ஜெட்.
இதன் அர்த்தம் என்னவெனில், இனிமேலும் வட்டி விகிதத்தை இழுத்துப் பிடித்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முனைப்பு காட்டப்பட வேண்டியது இல்லை. வளர்ச்சியும், அதற்குத் தேவையான பணப் புழக்கமும், அதை எளிதாக்கக்கூடிய வங்கிக் கடன்களும் சுலபமாக்கப்படலாம் என்று பச்சைக்கொடி காட்டப்பட்டது.
இதையொட்டியே, ஆர்.பி.ஐ., 0.25 சதவீத வட்டி குறைப்பைச் செய்துள்ளது. இதற்கு இன்னொரு கோணமும் உண்டு.ஆர்.பி.ஐ., ரொம்பவும் ஜாக்கிரதையான அமைப்பு. நாட்டின் பொருளாதாரக் குறியீடுகள் முன்னேற்றம் அடைந்தால் தான், வட்டி விகிதங்களைக் குறைக்க ஒப்புக்கொள்ளும். முதன்முறையாக தற்போது தான் அது, வேறொரு அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது.
அதாவது, முன்னேற்றத்துக்கான முகாந்திரம் தெரியும் நிலையிலேயே வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.
முகாந்திரங்கள் என்ன?
டிசம்பர், 2018ல், 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லரை பணவீக்கம், 2.19 சதவீதமாகக் குறைந்துள்ளது முதற்காரணம். அடுத்து, வரும் மாதங்களில் இந்த நிலை தொடரும் என்ற நம்பிக்கை.இரண்டாவது, மார்ச், 2019ல், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.2 சதவீதமாக இருக்கும் என்ற நம்பிக்கை. மூன்றாவது, வளர்ச்சி மேன்மேலும் தொடரும் என்ற எதிர்பார்ப்பு.இத்தகைய நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே, வட்டி விகிதம், 0.25 சதவீதம் குறைய காரணமாயிற்று.
முழு பலன்
இந்தச் சலுகை, மக்களுக்குப் போய் சேருமா? அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில், வட்டி குறைப்பின் பலன்கள் பொதுமக்களுக்கு மாற்றித் தரப்படுவதற்கு, தான் முயற்சி எடுக்கவிருப்பதாக, சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
பொதுவாக, முழுப்பலனும் பொதுமக்களுக்குப் போய் சேருவதில்லை என்பது தான் உண்மை.இதற்கு நியாயமான காரணங்கள் இல்லாமல் இல்லை. பல பொதுத் துறை வங்கிகள், வாராக்கடன் பிரச்னையில் சிக்கிக்கொண்டு இருக்கின்றன. மேலும், ஒவ்வொரு காலாண்டும், அவை எதிர்வரும் புது வாராக்கடன்களைச் சமாளிக்க, போதிய நிதி ஒதுக்கீடுகளைச் செய்து வைக்க வேண்டியது கட்டாயம்.
இன்னொருபுறம், வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்குக் கொடுத்த கடன்களும் படிப்படியாக மோசமாகி வருவதால், பொதுத் துறை வங்கிகளில் போதிய நிதியாதாரங்கள் இல்லை.வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டுமென்றால், சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும்.
பொதுத் துறை வங்கிகளை விட தனியார் வங்கிகளிலும், சிறு வங்கிகளிலும் வட்டி அதிகம் என்பதால், மக்கள் தங்கள் சேமிப்புகளை அங்கே போடுகின்றனர். சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால், மக்கள் இன்னும் அதிகளவில் வெளியேறுவது நிச்சயம். அதனால், இந்த, ‘ரிஸ்க்கை’ பொதுத் துறை வங்கிகள் எடுக்காது.
அதேசமயம் மக்கள், தேசிய வங்கிகளில் கடன் வாங்குவதும் பெருகியிருக்கிறது. சேமிப்புகள் இல்லாமல் கடன் கொடுக்க முடியாது. அதனாலும், வட்டி விகிதங்கள் உடனடியாக குறைக்கப்படாது.கடந்த ஓராண்டில், தனியார் வங்கிகளிடம் மக்கள் கடன் வாங்குவது அதிகரித்துள்ளது. கடன் வளர்ச்சி, 14 – 15 சதவீதம் அளவுக்கு இருக்கிறது.
அவர்களுக்கு வரும் சேமிப்புகளோ, ஒற்றை இலக்கத்திலேயே இருக்கின்றன. சேமிப்புகளைக் கூடுதலாக்க, அவர்கள் பொதுத் துறை வங்கிகளை விட கூடுதல் வட்டி கொடுக்கத் துவங்கிவிட்டனர்.இந்நிலையில், இவர்கள் சேமிப்புகளுக்கான வட்டியை குறைக்க மாட்டார்கள்.வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வட்டி கொடுப்பதாலேயே, இவர்கள், கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கவும் மாட்டார்கள். கடனுக்கும், சேமிப்புக்குமான இடைவெளி தான் இவர்களது லாபம். அந்த லாபம் குறைவதை, தனியார் வங்கிகள் அனுமதிக்காது.
ஏட்டளவில்…
அரசு தரப்பில் இருந்து அழுத்தம் இருக்குமானால், ஒருசில பொதுத் துறை வங்கிகள், கடனுக்கான வட்டியை லேசாகக் குறைக்கலாம்.அப்படித்தான், எஸ்.பி.ஐ.,யும், பேங்க் ஆப் மஹாராஷ்டிராவும், 0.05 சதவீதம் குறைத்திருக்கின்றன. தற்போது, எஸ்.பி.ஐ.,யின், 30 லட்சம் ரூபாய் வரைக்குமான வீட்டுக்கடனுக்கான வட்டி, 8.70 சதவீதமாகக் குறைந்துள்ளது.இது, புதுக் கடனுக்கான வட்டி. ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கான வட்டி விகிதம், தற்போது குறையாது.
எம்.சி.எல்.ஆர்., அடிப்படையிலேயே வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுகிறது. அது ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ, ஓராண்டுக்கு ஒரு முறையோ திருத்தப்படும். உங்கள் வங்கியின் திட்டத்துக்கு ஏற்ப, அடுத்த முறை திருத்தம் வரும் போது தான், வட்டி விகித குறைப்புக்கான பலன் உங்களுக்குக் கிடைக்கும்.‘சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்க மாட்டார்’ என்றொரு முதுமொழி உண்டு. அதற்கு நேரடி உதாரணம், இந்த, 0.25 சதவீத வட்டி குறைப்பு தான். இது, ஏட்டளவில் மட்டுமே இருக்கப் போகிறது.
--ஆர்.வெங்கடேஷ்
பத்திரிகையாளர்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|