பதிவு செய்த நாள்
12 பிப்2019
23:05
புதுடில்லி:கடந்த ஓராண்டில், பங்கு, கடன் பத்திரம் போன்றவற்றில் முதலீடு செய்வதற்கு அவசியமான, ‘டீமேட்’ கணக்கை, 40 லட்சத்திற்கும் அதிகமானோர் துவக்கியுள்ளனர். இது, கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத சாதனையாகும்.
தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டிபாசிட் போன்ற பாரம்பரிய முதலீடுகளுக்கு பதிலாக, பங்குகள், கடன் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்வதில், மக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது.இதனால், வங்கியில் பணத்தை சேமிக்க, கணக்கு துவக்குவது போல, பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றின் மூலம் சேமிக்க, ‘டீமேட்’ கணக்கு துவக்குகின்றனர்.
ஐ.சி.ஐ.சி.ஐ., – எஸ்.பி.ஐ., கோட்டக் மகிந்திரா உள்ளிட்ட, முன்னணி வங்கிகள், பங்குத் தரகு நிறுவனங்கள் ஆகியவை, பங்குகளை மின்னணு வடிவில் சேமிக்க உதவும், டீமேட் கணக்கு துவக்கும் வசதியை வழங்குகின்றன.இதனால், எந்த இடத்தில் இருந்தும், கணினி, மொபைல்போன் ஆகியவற்றின் மூலம், சுலபமாக பங்குகளை வாங்கவும், விற்கவும் முடியும் என்பதால், குறிப்பாக, இளைஞர்கள் பங்கு முதலீட்டில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
நடுத்தர மக்கள்
இது குறித்து, பங்கு தரகுச் சேவையில் ஈடுபட்டுள்ள ஜெரோதா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, நிகில் காமத் கூறியதாவது:கடந்த, 2017ல், பங்குச் சந்தையில் கிடைத்த சிறப்பான வருவாய் காரணமாக, நடுத்தர மக்களிடம், பங்கு முதலீட்டில் ஆர்வம் அதிகரித்துள்ளது.இதனால், 2018ல், 40 லட்சத்திற்கும் அதிகமான டீமேட் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், மொத்த டீமேட் கணக்கு எண்ணிக்கை, 3.08 கோடியில் இருந்து, 3.48 கோடியாக உயர்ந்துள்ளது. பத்தாண்டுகளுக்கு பின், ஒரே ஆண்டில், டீமேட் கணக்கு எண்ணிக்கை, 13 சதவீதம் உயர்ந்து சாதனை படைத்துள்ளது.கடந்த, 2016ல், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், நடுத்தர மக்களிடம், தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றுக்கு பதிலாக, பங்குகளில் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
மத்திய அரசின், அனைவருக்கும் வங்கிச் சேவை திட்டமும், அதிகமானோரை பங்கு முதலீட்டிற்கு இழுத்துள்ளது. ஆண்டுக்காண்டு, எங்கள் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்து வருகிறது.எனினும், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியா, பங்கு முதலீடுகளில் மிகவும் பின்தங்கி உள்ளது.
முன்னேறிய நாடுகளின் மக்கள் தொகையில், 90 சதவீதம் பேர், பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்கின்றனர். இது, இந்தியாவில், 10 சதவீதம் என்ற அளவிற்கு மிகவும் குறைவாக உள்ளது. இது, வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த,2017ல், பங்கு சந்தையின் எழுச்சியை கண்ணுற்றோர், 2018ல், ‘டீமேட்’ கணக்கு துவங்கி, பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். பங்குத் தரகு நிறுவனங்கள் வழங்கும் கவர்ச்சிகரமான சலுகைகள், வலைதளத்தில் சுலபமாக கணக்கை துவக்கும் வசதி போன்றவற்றால், இது சாத்தியமாகியுள்ளது. கடந்தாண்டு, எங்கள் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 300 சதவீதம் அதிகரித்துள்ளது
பிரகாஷ் கக்டனி, தலைமை செயல் அதிகாரி,
5பைசா கேப்பிடல் நிறுவனம்
புதிய பங்கு வெளியீடு
கடந்த, 2018ல், 24 புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 30 ஆயிரத்து 959 கோடி ரூபாய் திரட்டப்பட்டு உள்ளது. முந்தைய ஆண்டில், 36 புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 67 ஆயிரத்து 147 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|