பதிவு செய்த நாள்
13 பிப்2019
23:28
புதுடில்லி:மத்திய அரசு, அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க, ‘சிங்கிள் பிராண்ட்’ எனப்படும் ஒற்றை வணிக முத்திரையின் கீழ் மேற்கொள்ளப்படும் சில்லரை விற்பனைக்கான விதிகளை தளர்த்த திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரிக்க, சிங்கிள் பிராண்ட் சில்லரை விற்பனை விதிகளை தளர்த்த திட்டமிட்டுள்ளது.இப்பிரிவில், அன்னிய நிறுவனங்கள், முதலில் கடைகளை திறந்த பின் தான், வலைதள விற்பனை மேற்கொள்ள முடியும். இதை தளர்த்தி, இந்தியாவில், வலைதள விற்பனை துவக்கிய, இரண்டு ஆண்டுகளுக்குள், கடைகளை திறக்க, அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப் படுகிறது.
கொள்முதல்
மேலும், உள்நாட்டு நிறுவனங்களிடம், 30 சதவீத பொருட்களை கட்டாயம் கொள்முதல் செய்யும் விதிமுறையிலும் மாற்றம் செய்யப்படும் என, தெரிகிறது.தற்போது, அன்னிய நிறுவனம், வர்த்தகம் துவங்கி, ஐந்து ஆண்டுகள் வரை, சர்வதேச வர்த்தகத்திற்காக, உள்நாட்டில் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு, விதியில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.இது, இனி, 2,100 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் அன்னிய சில்லரை விற்பனை நிறுவனங்களுக்கு, 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும்.
அதுபோல, 1,400 கோடி ரூபாய் மற்றும் 700 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, முறையே, ஆறு மற்றும் எட்டு ஆண்டுகள் விதி விலக்கு வழங்கப்படும்.இது தொடர்பான வரைவு அறிக்கை, அனைத்து அமைச்சகங்களின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்த பின், புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.அமெரிக்காவின், ‘ஆப்பிள்’ நிறுவனம், 2016ல், ஒற்றை வணிக முத்திரை பிரிவில், சில்லரை விற்பனை கடைகளை திறக்க விரும்பியது. இதற்காக, உள்நாட்டு கொள்முதல் விதிமுறையில் விலக்கு அளிக்க கோரியது. அதை, மத்திய அரசு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சரிவு
நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டின், ஏப்ரல் – செப்டம்பர் வரையிலான, ஆறு மாதங்களில், அன்னிய நேரடி முதலீடு, 11 சதவீதம் குறைந்து, 1.58 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|