பதிவு செய்த நாள்
18 பிப்2019
06:56
பொது தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பங்குச் சந்தையில், அச்சம் தொடர்ந்து அதிகரித்து வருவது தெளிவாக தெரிகிறது.‘நிப்டி மற்றும் சென்செக்ஸ்’ அதிகம் வீழ்ச்சி காணாத போதும், தனி முதலீட்டாளர்களின், ‘போர்ட்போலியோ’வில் சரிவு ஏற்பட்டு, கவலைக்கிடமான சூழலை உருவாக்கி உள்ளது. இதற்கான காரணங்களை முதலீட்டாளர்கள் தேடுவது தெரிகிறது.கடந்த காலத்தில், முதலீட்டு முடிவுகளை எடுக்கும் போது, ஒவ்வொருவரும் ஏற்படுத்திக் கொண்ட எதிர்பார்ப்புகளில், அந்த கவலைக்கான விடை அடங்கியுள்ளது.முதலீட்டு முடிவு எடுக்கும் போது, மூன்று அம்சங்களை தெளிவாக தீர்மானிக்க வேண்டும். வாங்கும் பங்கு எத்தகைய மதிப்பில் இருக்கிறது; நிறுவனத்தின் லாபம் எந்த அளவிற்கு வளர்ச்சி காணும்; எவ்வளவு கால அவகாசத்தில் முதலீட்டில் லாபத்தை எதிர்பார்க்க வேண்டும் என்ற, மூன்று அம்சங்கள் தான் முடிவு செய்ய வேண்டியவை.இவற்றில் தெளிவாக இருந்தால், முதலீட்டின் பயணம் சீராகவும், நிதானமான வளர்ச்சி சார்ந்ததாகவும் அமையும்.பொறுமை இந்த அடிப்படை தேவைகளை உறுதி செய்த பின் மட்டுமே, முதலீட்டு பயணத்தை துவக்க வேண்டும். வெற்றியை தேடி எப்படி பயணிக்க வேண்டும் என்ற புரிதல் தெளிவாக இருந்தால் மட்டுமே, முதலீட்டு பயணத்தை துவங்க வேண்டும். அப்படி பயணிக்கும் போது, நாம் பல சவால்களை சந்திப்போம்.நம் அடிப்படை புரிதல்கள், சில சமயம் தவறாக அமையக்கூடும். அவற்றை மறு ஆய்வு செய்து, கவனமாக மாற்ற வேண்டும். நாம் வாங்கிய பங்கின் மதிப்பு, சில காலத்திற்கு பின், அதிகமாக தோன்றலாம். அந்த நேரத்தில், நாம் லாபத்திற்கான அவகாசத்தை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கும்.ஆனால், பெரும்பாலானோர் முதலீட்டையே மாற்ற அவசரம் காட்டுவர். அதுபோல, நம் லாப எதிர்பார்ப்பு சில காலம் தள்ளி நிறைவேறக்கூடும். இதுவும், பலரை எளிதில் பொறுமை இழக்கச் செய்து விடும்.பல பங்குகளை, அதிக மதிப்பீடு செய்து வாங்குவது தான், நாம் அடிக்கடி செய்யும் தவறு. இதன் காரணமாக, நம் முதலீட்டின் மீது லாபம் ஈட்ட, அதிக காலமாகும். இதில், பலரும் எளிதில் பொறுமை இழந்து விடுவதை நாம் காணலாம்.இன்றைய சூழலில், மூன்று வித தவறுகள் நடக்கின்றன. நிதிச் சந்தை சூழல் வெகுவாக மாறி உள்ளது. மதிப்பீடுகள் பற்றிய புரிதலுக்கான காலம் கடந்து விட்டதை, சந்தை உணர்ந்துள்ளது. இத்தகைய சூழலை, எப்படி முதிர்வோடு முன்னெடுப்பது என்பதே இப்போதைய சவால்.சோதனைமுதலீட்டு தேர்வு, அடிப்படையிலேயே தவறாக இருப்பின், பங்குகளை விற்று வெளியேறுவது ஒன்றே சரியான தீர்வாக இருக்க முடியும்.ஆனால், பல தேர்வுகள் மதிப்பு, லாப வளர்ச்சி மற்றும் கால அவகாசம் சார்ந்து மாற்றங்கள் காணும். இது, சந்தையில் இயல்பான ஒன்று தான்; நல்ல பங்குகளுக்கும் இந்த மாற்றங்களால் சோதனைகள் நேரும்.அவற்றை பொறுமையோடு கடக்க பழக வேண்டும். அவசரப்பட்டு, முடிவுகளின் தரத்தை குறைத்துவிடக் கூடாது. புதிய கால அவகாசத்தை கணித்து, முதலீட்டில், அந்த மூன்று அம்சங்களும் தற்போது எத்தகைய முடிவை தரும் என்பதை தீர்மானிக்க வேண்டும். அந்த முடிவை எப்படி முன்னெடுத்து செல்வது என, சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|