பதிவு செய்த நாள்
27 பிப்2019
23:31
மும்பை : குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 5 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் வாய்ப்பு, வங்கிகளுக்கு காத்திருக்கிறது.
கடந்த, 2016, நவ.,8ல் அறிவிக்கப்பட்ட, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், ஏராளமான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. எண்ணற்றோர் வேலைவாய்ப்பை இழந்தனர்.இந்த பாதிப்பில் இருந்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை மீட்க, மத்திய அரசு பல்வேறு ஊக்கச் சலுகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சமீபத்தில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின், 25 கோடி ரூபாய் வரையிலான இடர்பாட்டு கடன்களை, சிறப்பு திட்டத்தின் கீழ், மறுசீரமைக்க, வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டது.அந்த கணக்குகளுக்கு, வங்கிகள், 5 சதவீத நிதி ஒதுக்கவும், ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான, ‘அசோசெம்’ மற்றும் ‘அஷ்வின் பரேக் அட்வைசரி சர்வீசஸ்’ நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு தேவைப்படும் நிதியில், வங்கிக் கடன் மூலம், 40 – 70 சதவீதம் தான் பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது.
தற்போது, இத்துறைக்கு, 5,500 கோடி டாலர், அதாவது, 3.90 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.மேலும், 7,000 கோடி டாலர், அதாவது, 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெறுவதற்கான தேவை, இத்துறைக்கு உள்ளது. இந்த வாய்ப்பை, வங்கித் துறை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், அவற்றின் சரக்கு மற்றும் சேவைகளுக்கான தொகையை, உரிய காலத்தில் பெற முடிவதில்லை. இதனால், இந்நிறுவனங்கள் தொடர்ச்சியாக செயல்படுவதில் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றன. கடன் தவணையை முறையாக திரும்பச் செலுத்த முடிவதில்லை.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதுகெலும்பாக, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை விளங்குகிறது. ஏற்றுமதி, உற்பத்தி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|