பதிவு செய்த நாள்
27 பிப்2019
23:35
புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், ஜி.எஸ்.டி.,யில், 20 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மோசடி தடுப்பு நடவடிக்கைகளை, வரித் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இது குறித்து, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி புலனாய்வு பிரிவு உறுப்பினர், ஜான் ஜோசப் கூறியதாவது: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரியில், நடப்பு, 2018 – -19ம் நிதியாண்டில், இதுவரை, 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளதை, வரித் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதில், வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்களிடம் இருந்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் திரும்பப்பெறப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்தது போல, போலி ரசீது தயாரித்து, அதன் மூலம், உள்ளீட்டு வரியாக, 75 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், 25 கோடி ரூபாய் மீட்கப்பட்டு உள்ளது. மீதி தொகையை மீட்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தொழில் துறையில், பெரும்பான்மையான நிறுவனங்கள், நேர்மையாக, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்கின்றன. 5 – 10 சதவீத நிறுவனங்கள் தான், மோசடியில் ஈடுபடுகின்றன.
மத்திய அரசு, வரி ஏய்ப்பாளர்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த உள்ளது. அதேசமயம், நேர்மையாக வரி செலுத்துவோர் பாதிக்கப்படக் கூடாது என்பதும் கவனத்தில் கொள்ளப்படும்.ஜி.எஸ்.டி., நடைமுறையை அனைவருக்கும் ஏற்றதாக, இணக்கமாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த, 2017, ஜூலை, 1ல் அறிமுகமான, ஜி.எஸ்.டி.,யில், இதுவரை, 1.20 கோடி நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.நம் நாட்டில், ஜி.எஸ்.டி., 5, 12, 18, 28 சதவீதம் என, நான்கு விதமாக உள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு, பூஜ்ய வரி விதிப்பு உள்ளது. பல நாடுகளில், ஒரே ஜி.எஸ்.டி., அமலில் உள்ளது. இந்தியாவில் அதுபோல அமல்படுத்த முடியாது. இங்கு, மிகப் பெரும் பணக்காரர்களும், பரம ஏழைகளும் உள்ளனர்.
பணக்காரர்களை கருத்தில் இருத்தி, வரி விதித்தால், அது ஏழைகளை பாதிக்கும். அதனால், ஜி.எஸ்.டி., வரி விகிதத்தை, ஒரே சதவீதமாக அமல்படுத்துவது கடினம்.அதேசமயம், தற்போது உள்ளவற்றை சுருக்கி, வருங்காலத்தில், இரண்டு அல்லது மூன்று வரி விதிப்புகள் அமலுக்கு வரலாம். இது குறித்து, ஜி.எஸ்.டி., கவுன்சில் தான் முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.
ரியல் எஸ்டேட் – உள்ளீட்டு வரி:
கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கான, ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக, தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதுபோல, குறைந்த விலை வீடுகளுக்கு, 8 சதவீதத்தில் இருந்து, 1 சதவீதமாக, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது.அதனால், இதுவரை, கட்டுமான நிறுவனங்கள் பெற்ற, உள்ளீட்டு வரி பயன், இனி கிடைக்காது.
ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு, விற்பனையாகாமல் உள்ள வீடுகளுக்கு, உள்ளீட்டு வரி பயன் தரவேண்டும் என, கட்டுமான நிறுவனங்கள் கோருகின்றன. இதை, சம்பந்தப்பட்ட நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தான் பரிசீலிக்க வேண்டும்.எனினும், ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்ட பின், உருவாகியுள்ள சூழலுக்கு தீர்வு காண, விரைவில், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன், வரித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
–ஜான் ஜோசப், உறுப்பினர், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி புலனாய்வு பிரிவு
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|