பதிவு செய்த நாள்
01 மார்2019
07:23
டில்லி : ‘‘பொதுத் துறை வங்கிகள் வலிமையுடன் திகழ, சிறிய வங்கிகளை ஒன்றிணைப்பது அவசியம்,’’ என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
அவர், டில்லியில், இந்திய வங்கிகள் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசியதாவது:பொதுத் துறை வங்கிகள், ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் திகழ வேண்டும். இதற்கு, சட்ட ரீதியான செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்; அல்லது, சிறிய வங்கிகளை ஒன்றிணைத்து, பெரிய வங்கிகளாக உருவாக்கலாம். அதன்படி, பொதுத் துறையைச் சேர்ந்த, சிறிய வங்கிகளை படிப்படியாக இணைத்து, பெரிய வங்கிகளாக உருவாக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் கொள்கை.
இதன் மூலம், சர்வதேச வங்கிகளின் போட்டியை சமாளிக்க கூடிய வகையில், இந்திய வங்கிகள் வலிமை பெறும்.குறுக்கீடு இல்லைமத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், தொலைபேசி மூலம் வேண்டப்பட்டவர்களுக்கு வங்கி கடன் வழங்க உத்தரவிடும் கலாசாரத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.அதுபோல, கடன் வசூலிப்பிலும், எவ்வித அரசியல் குறுக்கீடுகளும் இன்றி நடவடிக்கை எடுக்க, வங்கிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
துவக்கத்தில், பல வங்கிகள், இடர்ப்பாட்டு கடன்களை, வாராக் கடன் பிரிவில் சேர்க்காமல் இருந்தன; அவை, ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளால், வாராக் கடன் பிரிவிற்கு மாற்றப்பட்டன.இந்த வெளிப்படையான நடைமுறை காரணமாக, பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்தது.
இந்நிலையில், மத்திய அரசு அமல்படுத்திய திவால் சட்டம், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை, வங்கிகள் காட்டிய தீவிரம் போன்றவற்றால், வாராக் கடன், 2- – 3 காலாண்டுகளாக குறைந்து வருகிறது.கடந்த, 2015 ஏப்ரல் முதல், 2018 டிசம்பர் வரை, பொதுத் துறை வங்கிகள், 2,87 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூலித்துள்ளன.
நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டில், ஏப்ரல் – டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், 98 ஆயிரத்து, 493 கோடி ரூபாய் வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் வசூலானதை விட, 100 சதவீதம் அதிகம்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்தாண்டு ஜனவரியில், மத்திய அமைச்சரவைக் குழு, பொதுத் துறையைச் சேர்ந்த, பேங்க் ஆப் பரோடா உடன், விஜயா பேங்க், தேனா பேங்க் ஆகியவற்றை இணைக்க ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இணைப்பிற்கு பின், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகியவற்றை அடுத்து, மூன்றாவது பெரிய வங்கியாக, பேங்க் ஆப் பரோடா விளங்கும்.
லாபம் அதிகரிப்பு:
பேங்க் ஆப் பரோடா உடன், இரு வங்கிகளை இணைக்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதிக்குள் இப்பணிகள் முடிவடைந்து, ஏப்., 1ல், ஒன்றிணைந்த வங்கி நடைமுறை செயல்பாட்டிற்கு வரும். இந்த இணைப்பு நடவடிக்கையின் வெற்றியை பொறுத்தே, மேலும் பல வங்கிகளின் இணைப்பு இருக்கும். பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் குறைந்து, லாபம் அதிகரித்து வருகிறது. வங்கித் துறையின் கடன் வளர்ச்சி, 15 -– 16 சதவீதமாக உள்ளது.
-ரஜ்னிஷ் குமார், தலைவர், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|