பதிவு செய்த நாள்
01 மார்2019
23:53
திருப்பூர்:''நடப்பு நிதியாண்டில், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 25 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும்,'' என, ஏற்றுமதியாளர் சங்க தலைவர், ராஜா சண்முகம் தெரிவித்தார்.
திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி, 'ஹைடெக் இன்டர்நேஷனல்' கண்காட்சி வளாகத்தில், 15வது நிட்டெக் பின்னலாடை இயந்திர கண்காட்சி நேற்று துவங்கியது. 'நிட்டெக்' தலைவர், ராயப்பன் வரவேற்றார். 'சைமா' சங்க தலைவர், ஈஸ்வரன், கண்காட்சியை திறந்து வைத்தார்.
ஏற்றுமதியாளர் சங்க தலைவர், ராஜா சண்முகம் கூறியதாவது:திருப்பூர் ஆடை உற்பத்தி துறை வளர்ச்சிக்கு, இத்தகைய கண்காட்சிகள் பக்கபலமாக உள்ளன. பணம் மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆகியவற்றின் காரணமாக, நாட்டின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிய துவங்கி விட்டது.திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியும் தொடர்ந்து சரிவை நோக்கியே பயணித்தது.
கடந்த, 2016 - 17 நிதியாண்டில், 26 ஆயிரம் கோடியாக இருந்த ஏற்றுமதி வர்த்தகம், 2017 -- 18 நிதியாண்டில், 24 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்தது.நடப்பு நிதியாண்டிலும், துவக்கம் முதல் ஏற்றுமதி, சரிவை நோக்கியே சென்றது.கடந்த, அக்., முதல், திருப்பூர் பின்னலாடை துறை, மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
நடப்பு நிதியாண்டில், ஏற்றுமதி வர்த்தகம், 25 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச பிரான்டட் நிறுவனங்கள், இந்திய சந்தையில், ஆடைகளை சந்தைப்படுத்துவதில் முனைப்பு காட்டுகின்றன. உள்நாட்டு வர்த்தகத்தில் மட்டுமே ஈடுபட்டிருந்த திருப்பூர் நிறுவனங்கள் பல, தற்போது ஏற்றுமதி ஆடை வர்த்தகத்திலும் கால்பதித்துள்ளன.
ஏற்றுமதி வர்த்தகம், உள்நாட்டு வர்த்தகம் இரண்டும் ஒன்றாகி கொண்டிருக்கிறது. இந்த இரு வர்த்தகத்துக்கும் சிறந்த எதிர்காலம் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|