பதிவு செய்த நாள்
05 மார்2019
23:37
புதுடில்லி:டில்லியில் உள்ள, தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப மையம், சந்தையின் தேவைக்கு ஏற்ப, நவீன பாணி கைத்தறி துணிகளை வடிவமைப்பது உள்ளிட்ட சேவைகளுக்காக, மூன்று திட்டங்களை உருவாக்கிஉள்ளது.
இம்மையத்தில், புதுப்பிக்கப்பட்ட கைத்தறி கண்காட்சி கூடத்தை, மத்திய ஜவுளி துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி திறந்து வைத்து, புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
காலத்திற்கேற்ற கைத்தறி ஆடைகளை வடிவமைக்கவும், தயாரிக்கவும், நுகர்வோர் விரும்பும் வண்ணங்கள் குறித்து ஆலோசனை வழங்கவும், 'விஷன்நெக்ஸ்ட்' திட்டம் உதவும்.இது, புதுமையான கைத்தறி ஆடைகள் தயாரிக்கவும், இத்துறையின் வளர்ச்சிக்கும் துணை புரியும்.அடுத்து, ஐ.டி.சி.ஆர்., திட்டத்தில், ஜவுளிகளின் மெய்நிகர் அருங்காட்சியகம் உருவாக்கப்படும். இதில், கலைநயமிக்க ஜவுளி வகைகள், ஜவுளி வடிவமைப்பு ஆவணங்கள், ஜவுளி ஆய்வு கட்டுரைகள் இடம் பெறும்.
மேலும், ஜவுளி மற்றும் அது சார்ந்த துறைகளின் ஆய்வு தகவல்களின் ஒருங்கிணைப்பு மையமாகவும் விளங்கும்.டி.ஐ.ஐ., திட்டத்தின் கீழ், ஜவுளி துறையில், இளம் தொழில் முனைவோர்கள், கைத்தறி நெசவாளர்கள், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும். இதர நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தகம் புரிவதற்கான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
இதில், தேசிய ஆடை வடிவமைப்பு மைய முன்னாள், இந்நாள் மாணவர்களும் பயன் பெறலாம்.தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப மையத்தின், மும்பை, டில்லி, பெங்களூரு கிளைகளில், 'ஸ்டார்ட் அப்' தொழில்களை உருவாக்குவதற்கான, முதல்நிலை மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|