பதிவு செய்த நாள்
06 மார்2019
23:13
ஈரோடு:ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தியாகும் விளை பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள், பாரம்பரிய சிறப்பான பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.
இதன்படி, விருப்பாச்சி வாழைப்பழம், நீலகிரி தேயிலை, கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு, பவானி ஜமுக்காளம், திருநெல்வேலி அல்வா என, பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளன. தற்போது, ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மஞ்சளின் தனித்தன்மை, மருத்துவ குணம், நோய் எதிர்ப்பு சக்தி, தரம், நிறம் போன்றவை பிற பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு இருப்பதில்லை. இதுபற்றிய குறிப்புடன், ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்க கோரி, 2011ல் ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், சென்னையில் உள்ள, இந்திய புவிசார் குறியீடு பதிவகத்தில் விண்ணப்பித்தனர்.தேவையான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர். ஆட்சேபனை ஏதும் இல்லாததால், குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
‘ஈரோடு மஞ்சள்’ என்ற பெயரை, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் மட்டுமே பயன்படுத்த முடியும்.இது குறித்து, இந்திய புவிசார் குறியீடு பதிவக, இணை பதிவாளர், சின்னராஜா நாயுடு கூறியதாவது:இந்தியாவில், மஹாராஷ்டிராவில் வைகான் ரக மஞ்சள், ஒடிசாவில் கந்தமால் மலை மஞ்சள் போன்றவைகளுக்கு, ஏற்கனவே புவிசார் குறியீடு உள்ளது.
இதன்படி, ஈரோடு மஞ்சளுக்கும் கடந்த வாரம், புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மண்ணின் தரம், முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.ஈரோடு, கோவை, காங்கேயம், அன்னுார், தொண்டாமுத்துார் பகுதி விவசாயிகள் மட்டுமே, ஈரோடு மஞ்சள் என்ற பெயரை பயன்படுத்த முடியும்.இந்த மஞ்சளை, பிற பகுதியினர் வாங்கி சென்று விளைவித்தாலும், அது ஈரோடு மஞ்சளாக கருத முடியாது.
காரணம் மண்ணை அடிப்படையாக கொண்டு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம், ஈரோடு மஞ்சள் உலக அளவில் அறியப்படும் பெருமை பெறுகிறது. கூடுதல் விலை, தேவை அதிகரிப்புக்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|