பதிவு செய்த நாள்
09 மார்2019
00:13
புதுடில்லி:‘நுகர்பொருள் நிறுவனங்கள் வழங்கும், ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ திட்டத்தில், கூடுதலாக அளிக்கப்படும் பொருளுக்கும் உள்ளீட்டு வரி பயன் உண்டு’ என, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்துள்ளது.
பல நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்பை பிரபலப்படுத்தவும், விற்பனையை அதிகரிக்கவும், பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன.அவற்றில் ஒன்றாக, ஒரு பொருளை வாங்கினால், அதே விலைக்கு, அதே போன்ற மற்றொரு பொருளை சேர்த்து அளிக்கும் திட்டமும் ஒன்று.
இவ்வாறு, ஒரு பொருளுடன் சேர்த்து இலவசமாக தரப்படும் பொருளுக்கு, தயாரிப்பு நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,சட்டத்தின் கீழ், உள்ளீட்டு வரிப் பயனை பெறுகின்றன.அதாவது, மூலப்பொருட்களுக்கு செலுத்தியவரியை, தயாரிப்பு பொருட்களின் விற்பனையில், நுகர்வோர் செலுத்தும், ஜி.எஸ்.டி., மூலம் திரும்ப பெற்று விடுகின்றன.
‘நோட்டீஸ்’
இந்நிலையில், ‘ஒரு பொருளுடன் இலவசமாக அளிக்கும் பொருளுக்கு, உள்ளீட்டு வரிப் பயன் பெற முடியாது; அவ்வாறு பெற்ற தொகையை, திரும்ப செலுத்த வேண்டும்’ என, வரித் துறை, ஏராளமான நுகர்பொருள் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பியிருந்தது. இதனால், பல நிறுவனங்கள், ‘ஒன்றுக்கு ஒன்று’ இலவச திட்டத்தை நிறுத்திவிட்டன.
இதையடுத்து, இப்பிரச்னை குறித்து, வரித் துறை தெளிவுபடுத்த வேண்டும் என, தொழில் கூட்டமைப்புகள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.இந்நிலையில், ‘ஒரு பொருளுடன், இலவசமாக வழங்கப்படும் அதே போன்ற மற்றொரு பொருளுக்கும், உள்ளீட்டு வரிப் பயன் பெறலாம்’ என, மத்திய மறைமுக வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர், பொருட்கள் வாங்க செலுத்தும் தொகையில், ஜி.எஸ்.டி., அடக்கம்என்பதால், இலவசமாக வழங்கப்பட்டாலும், அவை, ஒரே விலையில் தரப்படுவதால், அதற்கான உள்ளீட்டு வரிப் பயனை, நிறுவனங்கள் பெறலாம்.ஒரு பொருளுடன், இரு பொருட்களை இலவசமாக வழங்கினாலும், அவை ஒரே விலையில் இரு இலவச பொருட்களாகவே கருதப்படும்.
இலவச பொருளுக்கு, தனியே வரி செலுத்த தேவையில்லை.இது, ஒரே வகையான பொருளுக்குத் தான் பொருந்தும். ஒரு பொருளுடன், உயர் வரி விதிப்பில் உள்ள வேறு வகை பொருள் இலவசமாக வழங்கப்பட்டால், அதற்கான வரியை நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.அவ்வாறு இல்லாத பட்சத்தில், உள்ளீட்டு வரிப் பயனை திரும்பச் செலுத்த தேவையில்லை என, மத்திய மறைமுக வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, யர்னஸ்ட் அண்டு யங் நிறுவனத்தின் வரி வல்லுனர், அபிஷேக் ஜெயின் கூறியதாவது:வரித் துறையின் விளக்கத்தால், இலவச பொருளுக்கு உள்ளீட்டு வரிப் பயன் உண்டா, இல்லையா என்ற குழப்பம் தீர்ந்துள்ளது. சர்வதேச நடைமுறையை பின்பற்றி, இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
மாதிரி மருந்துகள்
மருந்து நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளின் மாதிரிகளை, ஸ்டாக்கிஸ்டுகள், முகவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு இலவசமாக வழங்குகின்றன. இவற்றை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் சப்ளை செய்யப்பட்டதாக கருத முடியாது. அதனால், இலவசமாக அளிக்கப்படும், மாதிரி மருந்துகளுக்கும் வரி விதிப்பு பொருந்தாது.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|