பதிவு செய்த நாள்
10 மார்2019
23:39
இந்தியாவின் மிகப்பெரும் வங்கியான, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதில் முன்னோடி முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறது.
இந்திய வாடிக்கையாளர்களுக்கும், வங்கி துறைக்கும் இதனால் கிடைக்கும் பலன்கள் என்ன?இந்திய வங்கிகளில், சேமிப்புகளுக்கும் கடன்களுக்கும் வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதற்கு, தன்னிச்சையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.உதாரணமாக, வீட்டுக்கடன் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான வட்டி விகிதங்களை சொல்வர். அதன் பின்னால் இருக்கும் கணக்கீடு நமக்குப் புரியாது.
இந்நிலையில், ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறை வேண்டும் என்ற கருத்தை ஆர்.பி.ஐ., தெரிவித்து வந்தது. அரசு முன்வைக்கும் ஏதேனும் ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில், வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுவது சரியாக இருக்கும் என்ற எண்ணமும் முன்வைக்கப்பட்டது.
ஆர்.பி.ஐ., நிர்ணயிக்கும் ரெப்போ விகிதத்தையோ, இந்திய அரசின், 91 கருவூல பில்லின் வருவாயையோ, 182 கருவூல பில்லின் வருவாயையோ அல்லது சந்தையோடு தொடர்புடைய வேறு ஏதேனும் ஒரு அடிப்படை அலகையோ கொண்டு, வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என, ஆர்.பி.ஐ., தெரிவித்தது.இந்த நடைமுறை, 2019 ஏப்ரல், 1 முதல் நடைமுறைக்கு வரவேண்டும்.
இதே சமயத்தில் இன்னொரு விஷயமும் நடைபெற்றது. சமீபத்திய நிதிக் கொள்கை குழுவின் சந்திப்புக்குப் பின், ஆர்.பி.ஐ., 0.25 சதவீதம் ரெப்போ விகிதத்தை குறைத்தது. இதன் நோக்கம், வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதே. அதன் மூலம், கடன்கள் கொடுப்பது அதிகரிக்கும், தொழில் வளர்ச்சி பெருகும், வேலைவாய்ப்புகள் உயரும் என்பதே நம்பிக்கை.
பல வங்கிகள், ஆர்.பி.ஐ., வழங்கிய, 0.25 சதவீத ரெப்போ சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை. இது தொடர்பாக, ஆர்.பி.ஐ., கவர்னர் சக்திகாந்த தாஸ், வங்கி துறைத் தலைவர்களை சந்தித்து வற்புறுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.
முதல் அடி
இந்தப் பின்னணியில் தான், எஸ்.பி.ஐ., வங்கி முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. அதாவது தமது வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், அதிலும், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பு வைத்திருப்பவர்களுக்கான வட்டி விகிதத்தை, ஆர்.பி.ஐ.,யின் தற்போதைய ரெப்போ விகிதத்தின் அடிப்படையில் நிர்ணயித்து இருக்கிறது.
சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் என்பது, ரெப்போ விகிதத்தைவிட, 2.75 சதவீதம் குறைவாக இருக்கும். ரெப்போ விகிதம் தற்போது, 6.25 சதவீதம். இதிலிருந்து, 2.75 சதவீதத்தைக் குறைத்தால், 3.50 சதவீத வட்டி கிடைக்கும். தோராயமாக தற்போது வழங்கப் பட்டு வரும் வட்டி விகிதமே தொடரும்.
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் என்பது, ரெப்போ விகிதத்தைவிட, 2.25 சதவீதம் அதிகமாக இருக்கும். 6.25 சதவீத ரெப்போவுடன் சேரும்போது, கடன்களுக்கான வட்டி விகிதம், 8.5 சதவீதமாக இருக்கும். ஒவ்வொரு வங்கியும், வாடிக்கையாளரின் கடனை திருப்பிச் செலுத்தும் சக்தியைக் கணக்கிட்டு, கூடுதலாக ஒரு ரிஸ்க் பிரிமியத்தை சேர்த்துக் கொள்ளும்.
கடன்களுக்கான வட்டி எப்படி இருக்கும்?
தற்போது வாகனக் கடன், வீட்டுக் கடன், கார்ப்பரேட் கடன்கள் அனைத்தும், எம்.சி.எல்.ஆர்., என்பதன் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது. எம்.சி.எல்.ஆர்., கணக்கீட்டின் அடிப்படையில், சேமிப்புக் கணக்கில் கொடுக்கப்படும் வட்டி விகிதமும் முக்கிய பங்கு வகிக்கிறது.
சேமிப்புக் கணக்குக்கான வட்டி விகிதம் உயருமானால், எம்.சி.எல்.ஆர்., விகிதமும் உயரும். குறையுமானால், இதுவும் குறையும். அதாவது, ரெப்போ விகிதம், 0.25 சதவீதம் குறையு மானால், எம்.சி.எல்.ஆர்., 7 முதல், 10 புள்ளிகள் வரை குறையும்.
பலன் என்ன?
முதற்பலன், சேமிப்புகளுக்கும் கடன்களுக்குமான வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதில், வங்கிகளிடையே சமச்சீரற்ற நிலைமை இருந்தது. எஸ்.பி.ஐ., விஷயத்தில் அது களையப்பட்டு இருக்கிறது. ரெப்போ விகிதம் தான் அடிப்படை எனும்போது, அதன் ஏற்ற இறக்கங்கள், சேமிப்புகளுக்கான வட்டியையும், கடன்களுக்கான வட்டியையும் சேர்த்தே பாதிக்கும்.
இந்தியாவின் மிகப்பெரும் வங்கியான, எஸ்.பி.ஐ., இதை துவங்கியிருப்பதால், இனி பிற பொதுத் துறை வங்கிகளும் இந்த அணுகுமுறையை பின்பற்றும். தனியார் வங்கிகளும் கூட இதை அனுசரிக்க வேண்டிய தேவை ஏற்படும்.
இதன் மூலம், முதல் வெற்றி, ஆர்.பி.ஐ.,க்கு தான். இனி ஒவ்வொரு முறையும், ஆர்.பி.ஐ., வட்டியை குறைக்கும்போது, அதன் பலன் நேரடியாக பொதுமக்களை சென்று சேரும். இதுநாள் வரை, நடுவில் வங்கி நிர்வாகம் என்னும் நந்தி நின்று கொண்டிருந்தது. அவர்கள் நினைத்தால் தான், வட்டி குறைப்பின் பலன் வாடிக்கையாளர்களை போய்சேரும். அந்த நிலை இனி இல்லை.
இரண்டாவது பலன், வாடிக்கையாளர்களுக்கு. வட்டி உயர்ந்தாலும் இறங்கினாலும், அதன் பலன் அவர்களுக்கு போய் சேரும். கூடுதலாக ஒரு பலனும் உண்டு. எம்.சி.எல்.ஆர்., உடன் வங்கிகள் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை, வாடிக்கையாளரின் கடனை திருப்பிச் செலுத்தும் சக்தியை நிர்ணயித்து வசூலிக்கும் இல்லையா? அதில் ஒரு போட்டி ஏற்படும். வாடிக்கையாளர்களால், வங்கிகளிடம் பேரம் பேசி வட்டியை குறைத்துக் கொள்ள வாய்ப்பு உண்டு.
சேமிப்புக் கணக்குகளைப் போல் நிரந்தர வைப்பு நிதிகளுக்கும் வட்டி கூடவோ, குறையவோ வாய்ப்புண்டு. இங்கேயும், வங்கிகளுக்கு எவ்வளவு நிதி ஆதாரத் தேவை இருக்கிறது என்பதை பொருத்து வட்டி விகிதங்கள் வேறுபடும். கூடுதல் நிதி தேவைப்படும் வங்கிகள், ரெப்போ விகிதத்தோடு, 2.5 சதவீதமோ, 3 சதவீதமோ கூடுதலாக தந்து, நிரந்தரச் சேமிப்புகளை ஈர்க்க முனையக்கூடும்.
சிக்கனமான வங்கிகள், இன்னும் கூடுதல் வட்டி கூடத் தர முடியும்.ரெப்போ விகிதம் என்பது நாட்டின் பொருளாதார நிலைமையை கணக்கிட்டு, ஆர்.பி.ஐ.,யால் நிர்ணயிக்கப்படுவது. அதன் அடிப்படையில், வங்கிகளின் வட்டி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படுவது என்பது, இந்திய பொருளாதாரத்தோடு இணைந்த முடிவாகவே அமையும். ஒருங்கிணைந்த சமச்சீரான வளர்ச்சிக்கான நல்ல ஆரம்பம் இது.
ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|