பதிவு செய்த நாள்
10 மார்2019
23:54
உலகப் பொருளாதார சந்தையில் நடக்கும் மாற்றங்கள், நம் உள்ளூர் சந்தையிலும் பிரதிபலிப்பது என்பது இயல்பாக நடக்கும் ஒன்று தான். உலக பொருளாதார நிகழ்வுகள், வெளிநாட்டு சந்தைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது, அவற்றின் தாக்கம் குறித்த அச்சங்கள், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
உலக சந்தைகளில், முந்தைய நாள் இரவு சரிவு நேர்ந்தால், மறுநாள் காலை, அனைத்து ஆசிய சந்தைகளும் சரிவது நடப்பு. வழக்கமாக காணக்கூடிய ஒன்று தான்.ஆனால், சில காலகட்டங்களில், இந்திய சந்தையின் போக்கு மாறக்கூடும். அப்படிப்பட்ட காலகட்டங்கள் ஏற்பட, சில முக்கிய காரணங்கள் உண்டு. அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களை, சந்தை தனக்கு சாதகமாக எதிர்ப்பார்ப்பது தான் இதற்கு முக்கிய காரணம்.
தற்போதைய சூழலில், உலக சந்தைகளில் சரிவு ஏற்படும் போதும், இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து நிலையாக தோன்றுகிறது. இது எதை வெளிப்படுத்துகிறது?சந்தை, சாமானியரும் எதிர்பார்க்காத ஏதோ ஒன்றை எதிர்பார்ப்பது தெளிவாக தெரிகிறது. அது, அரசியல் மாற்றங்கள் சார்ந்த கணிப்பு என்பது தெளிவு.
அரசியல் சார்ந்த மாற்றங்கள், ஒவ்வொரு தேர்தலுக்கு பின்னரும் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், சந்தை அந்த மாற்றங்களின் பாதிப்பை கூர்ந்து கவனிக்கும். இந்த தேர்தலும் இதற்கு விதிவிலக்கல்ல.தற்போது, சந்தை அதிக கலக்கம் காணாமல் இருப்பது, வரும் தேர்தல் முடிவுகள் சார்ந்த சந்தை நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவே அமைகிறது.
தேர்தல் முடிவுகள், சந்தைக்கு அதிக பாதகம் ஏற்படுத்தாது என்ற முடிவுக்கு, சந்தை வந்து விட்டது. இந்த நம்பிக்கை, வரும் வாரங்களில் ஏற்படும் அரசியல் மாற்றங்களால், இன்னும் வலுவடையலாம். அப்படி நடந்தால், சந்தை மேலும் உயரக்கூட வாய்ப்பு இருக்கக்கூடும்.ஒருவேளை, அதிரடி அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டால், அவை சந்தையில் கலக்கத்தை ஏற்படுத்தலாம்.
இந்த கலக்கம், பன்னாட்டு முதலீட்டாளர்களிடமும் கலக்கத்தை உண்டாக்கலாம். ஆனால், அதற்கான வாய்ப்புக்கள் தொடர்ந்து குறையக்கூடும் என்றே தோன்றுகிறது.இதன் வெளிப்பாடு, பன்னாட்டு முதலீட்டாளர்களின் தற்போதைய முதலீட்டு போக்கில் தெளிவாக தெரிகிறது.
வரும் வாரங்களில், பன்னாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்குகளை இன்னும் அதிகமாக வாங்குவர் என்றே தோன்றுகிறது. ஆனால், பங்கு வர்த்தகத்தை அவர்கள் வேறு திசையில் எடுத்து செல்வர் என்று தெரிகிறது.இந்திய முதலீட்டாளர்கள் தற்போது இதற்கு தயாராக இல்லாததால், அந்த மாற்றங்கள் ஒரு வகையில் அவர்களுக்கு அதிர்ச்சியூட்டலாம்.
அந்த மாற்றங்களை எதிர்கொள்வதில் காட்டும் கவனமும், முதிர்வுமே, ஒவ்வொரு உள்நாட்டு முதலீட்டாளரின் வெற்றி வாய்ப்பையும் நிர்ணயிக்கும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|