பதிவு செய்த நாள்
11 மார்2019
01:03
‘கிரெடிட் கார்டு’ பயன்பாட்டில் சாதகமான, பாதகமான அம்சங்கள் இரண்டுமே இருப்பதால், இதை சரியாக பயன்படுத்தும் முறையை அறிந்திருப்பது அவசியம்.நீங்கள் யாரிடம் கேட்கிறீர்கள் என்பதை பொறுத்து கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்பான கருத்து அமையும்.
ஒரு சிலர், இதை மிகச்சிறந்த நிதி சாதனம் என்று சொல்லலாம். இவற்றின் வசதி, இவை தரும் கேஷ்பேக் சலுகைகள் போன்றவற்றை பட்டியலிடலாம். இன்னும் சிலர், கிரெடிட் கார்டு அதிக செலவுக்கு வித்திட்டு, கடன் வலையில் தள்ளிவிடும் அபாயம் இருக்கிறது என எச்சரிக்கலாம்.
கிரெடிட் கார்டு பயன்பாட்டில் சாதகமான, பாதகமான அம்சங்கள் இரண்டும் கலந்து இருக்கின்றன என்பதே உண்மை. ஆனால், கிரெடிட் கார்டை சரியான முறையில் பயன்படுத்தினால், அதன் மூலம் பல நன்மைகளை பெற முடியும்.தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம், பணம் செலுத்த வசதியானது என்பது தவிர, கிரெடிட் கார்டு அளிக்கும் முக்கிய பலன்கள் பல இருக்கின்றன.
அவற்றில் ஒன்று, கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்திக்கொள்ள இது உதவுகிறது என்பதாகும். வீட்டுக்கடன், வாகனக்கடன் என எந்த வகை கடன் பெறுவதாக இருந்தாலும், கிரெடிட் ஸ்கோர் எனப்படும் கடன் தகுதி மதிப்பெண்ணுக்கு, வங்கிகள் முக்கியத்துவம் அளிக்கின்றன.
கிரெடிட் கார்டை சிறந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம், கிரெடிட் ஸ்கோரை உயர்த்திக்கொள்ளலாம். பில்களை சரியான நேரத்தில் செலுத்துவது, கடன் வரம்பிற்கு உட்பட்டு செயல்படுவது உள்ளிட்டவற்றை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக, எந்த கடனும் பெறாமல், தங்களுக்கு என கிரெடிட் ஸ்கோர் இல்லாமல் இருப்பவர்கள், கிரெடிட் வரலாற்றை உருவாக்கிக் கொள்ள கிரெடிட் கார்டு பயன்பாடு கைகொடுக்கும். இதற்கு வைப்பு நிதி கணக்குடன் இணைக்கப்பட்ட செக்யூர்டு கிரெடிட் கார்டு வசதியையும் நாடலாம். கிரெடிட் கார்டை பொறுப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதே முக்கியம்.
கிரெடிட் கார்டு நிறுவனங்கள் அளிக்கும் வட்டி இல்லா காலம் என்பது மிகவும் சாதகமான அம்சமாகும். ஒருவர் வாங்கும் பொருளுக்கு ஏற்ப இந்த காலம் அமையலாம். இந்த காலத்திற்கு வட்டி கிடையாது என்பதால், அதுவரை அந்த தொகையை பயனுள்ள விதங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த காலத்தில் அந்த தொகையை குறுகிய கால முதலீடான லிக்விட் பண்டில் முதலீடு செய்தும் பயன் பெறலாம். ஆனால், உரிய காலத்தில் திரும்பி செலுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லை எனில் பாதகமே உண்டாகும்.அதே போல, கிரெடிட் கார்டுகள் அவசர காலத்தில் கைகொடுக்க கூடியவை.
மருத்துவ தேவை போன்ற முக்கியமான நேரங்களில் கிரெடிட் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம். திடீர் வேலை இழப்பு போன்ற நேரங்களிலும், உடனடி அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க கிரெடிட் கார்டு வசதியை நாடலாம். ஆனால், கார்டு இருப்பதற்காக தேவையான நேரங்களில் எல்லாம் தேய்த்து, பணம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், தற்போது ஆன்லைன் சேவைகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. பில் செலுத்துவது போன்றவற்றை ஆன்லைன் மூலமே மேற்கொள்ள முடிகிறது. ஆன்லைனில் பணம் செலுத்த கிரெடிட் கார்டு ஏற்றது. கிரெடிட் கார்டு பயன்பாட்டிற்கு கேஷ்பேக் சலுகை களையும் பெற வாய்ப்பிருக்கிறது. கிரெடிட் கார்டுகளின் வரம்பை புரிந்து கொண்டு, பொறுப்பான முறையை பயன்படுத்தினால், கிரெடிட் கார்டின் முழு பலனை பெறலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|