பதிவு செய்த நாள்
11 மார்2019
23:57
புதுடில்லி:அன்னிய நிதி நிர்வாக நிறுவனங்கள், பங்குச் சந்தையில், ஐந்து நாட்களில், 2,741 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.உள்நாடு மற்றும் வெளிநாட்டு காரணிகளால், இந்த அளவிற்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:நடப்பு மார்ச் மாதம், பங்குச் சந்தையின் முதல் ஐந்து வர்த்தக தினங்களில், அன்னிய நிதி நிர்வாக நிறுவனங்கள், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில், 11 ஆயிரத்து, 182 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.இதில், பங்குகளில், நிகர அளவில், 5,621 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்நிறுவனங்கள், இதே காலத்தில், 2,880 கோடி ரூபாய் அளவிலான, கடன் பத்திர முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளன.இந்த வகையில், மார்ச் 1 – - 8 வரையிலான, ஐந்து வர்த்தக தினங்களில், பங்குச் சந்தையில், அன்னிய நிதி நிர்வாக நிறுவனங்கள், நிகர அளவில், 2,741 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.இம்மாதம், 4ம் தேதி, மகாசிவராத்திரியை முன்னிட்டு, பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாக்., பயங்கரவாத முகாம்கள் மீது, இந்தியா நடத்திய தாக்குதல் காரணமாக, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசுக்கு மவுசு அதிகரித்து உள்ளது. இதன் தாக்கம், வரும் பொதுத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், அன்னிய முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இதனால், அன்னிய நிதி நிர்வாக நிறுவனங்கள், ஆர்வத்துடன் பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றன.ரிசர்வ் வங்கி, சமீபத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் பத்திரங்களில், அன்னிய நிதி நிர்வாக நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பை, தளர்த்தியுள்ளது. இதன் காரணமாகவும், பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றில், அன்னிய நிதி நிர்வாக நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|