பதிவு செய்த நாள்
14 மார்2019
23:57
திருப்பூர்:பின்னலாடைகளை விரைந்து அனுப்புமாறு பிரிட்டன் இறக்குமதியாளர்கள், திருப்பூர் ஏற்றுமதியாளர்களை நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர்.
திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், பிரிட்டன் நாட்டு வர்த்தகர்களிடமிருந்து, ஆடை தயாரிப்புக்கு, ஒவ்வொரு ஆண்டும் அதிகளவு, 'ஆர்டர்' பெறுகின்றன. அந்நாட்டு வர்த்தகர்கள், ஆடை தயாரிப்புக்கு, 60 நாட்கள் அவகாசம் வழங்குகின்றனர்.
ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து, வரும், 29ம் தேதிக்குள் பிரிட்டன் வெளியேறுகிறது. ஆனால் இன்னும், 'பிரக்ஸிட்' திட்ட வரைவை, பிரிட்டன் பார்லிமென்ட் அங்கீகரிக்கவில்லை. இதனால், பிரிட்டனில் குழப்ப நிலை நீடிக்கிறது.கூட்டமைப்பிலிருந்து பிரியும் போது, பிரிட்டன், புதிய ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்கும்; வரி விகிதங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.
இதனால் வர்த்தகம் பாதிப்பதை தடுக்கும் வகையில், பிரிட்டன் நாட்டு வர்த்தகர்கள், ஏற்கனவே வழங்கிய ஆர்டர் மீது, ஆடைகளை விரைந்து தயாரித்து அனுப்ப, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
மறுசீரமைப்பு
திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர், கிரீஷ் கூறியதாவது:ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் பிரியும்போது, வரியினங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும். தற்போது, நம் நாட்டிலிருந்து பெறும் ஆடைகளுக்கு, பிரிட்டனில், 13 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
ஒருவேளை வரி உயர்த்தப்பட்டால், இறக்குமதி செய்யும் ஆடைகளுக்கு, அந்நாட்டு வர்த்தகர்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டி வரும்; இது, பெரும் லாப இழப்பை ஏற்படுத்தும்.வர்த்தக பாதிப்புகளில் சிக்காமல் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக, அந்நாட்டு ஆடை இறக்குமதியாளர்கள், ஆடைகளை துரிதமாக தயாரித்து அனுப்ப, திருப்பூர் ஏற்றுமதியாளர்களை அறிவுறுத்துகின்றனர்.
சூழல் மாறும்
கப்பலில் அனுப்பப்படும் சரக்குகள், பிரிட்டன் சென்றடைய, 23 நாட்களாகிறது. எனவே, ஆடை தயாரிப்புக்கு வழங்கும் அவகாசத்தை, 30 நாட்களாக குறைத்துள்ளனர்.ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெற்றிகரமாக பிரிட்டன் பிரிந்த பின், குழப்பங்கள் நீங்கும்; அவசர நிலை வர்த்தக சூழல் மாறும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|