பதிவு செய்த நாள்
25 மார்2019
06:45
சர்வதேச சந்தைகளில், கடந்த வாரம் பல சுவாரசியமான நிகழ்வுகள் அரங்கேறியதை, நம்மில் பலர் கவனிக்கவில்லை. அமெரிக்க மத்திய வங்கியான, பெடரல் ரிசர்வ், இந்த ஆண்டில், இனி வட்டி விகிதத்தை கூட்ட வாய்ப்பில்லை என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது, அமெரிக்க பொருளாதார வளர்ச்சி எதிர்கொள்ளும் சவால்களின் வெளிப்பாடே ஆகும். மேலும், பணவீக்கம் பற்றிய கவலைகள் அதிகமில்லை என்று பொருள்படும் வகையில், இந்த அறிவிப்பு அமைந்தது. ஆண்டின் துவக்கத்திலேயே இந்த அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்பது தான், இதில் நாம் கவனிக்க வேண்டியது. வரும் ஆண்டுகளில், அமெரிக்க பொருளாதார வளர்ச்சி பற்றிய பார்வை கணிசமாக குறைந்துள்ளது. இந்த கணிப்பு, பல முன்னணி உலக பொருளாதாரங்களுக்கும் பொருந்தும். சீனா சந்திக்கும் வளர்ச்சி சவால்கள் வரலாறு காணாதவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வளர்ச்சி இல்லாத சூழல், நாட்டின் மக்களை அதிருப்தியிலும், வறுமையிலும் தள்ளிவிடும் என்ற அச்சம் அரசுகளுக்கும், மத்திய வங்கிகளுக்கும் அதிகரிக்கும் சூழல் உருவாகி வருவது தெரிகிறது.
இந்த சூழல், இந்தியாவுக்கும் பொருந்தும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இத்தகைய சூழலில், பங்குச் சந்தையில் தென்படும் உற்சாகம், சற்றே மிகையாக கூட பலருக்கும் தோன்றலாம்.இதே அளவு உற்சாகம், உலக சந்தைகளில் அதிகம் இல்லாத நிலையில், இங்கு மட்டும் ஏன் இவ்வளவு உற்சாகம்?ஒருவேளை, உலக சந்தைகளில் தாக்கம் ஏற்பட்டால், அது, நம் சந்தையில் எப்படி எதிரொலிக்கும்?
உலக வளர்ச்சி குறைந்த சூழலில், எங்கே வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகமோ, அங்கு முதலீடுகள் குவியக்கூடும். இந்த எதிர்பார்ப்பு தான், நம் சந்தையில், உலக முதலீட்டாளர்களின் உற்சாகத்திற்கு காரணம். புதிய ஆட்சி அமைந்த உடன், அவர்கள் வளர்ச்சியை கூட்ட நடவடிக்கைகளை எடுப்பர் என்பதே எதிர்பார்ப்பு. அதற்கான பொருளாதார சூழல் ஒருங்கே அமைந்ததை, அன்னிய முதலீட்டாளர்கள் சரியாக கணித்து விட்டனர்.தேர்தல் சார்ந்த பார்வைகளும், பலரது முதலீட்டு ஆர்வத்தில் அடங்கி உள்ளன. அரசியல் கணிப்புகள் தவறானாலும், பொருளாதார முன் நகர்வில் அன்னிய முதலீட்டாளர்கள் தெளிவாக இருப்பது, சந்தைக்கு நீண்ட நாள் பலமாக அமையும். அதனால் தான், சந்தையின் குறியீடுகள் தொடர்ந்து ஏற்றம் காண்கின்றன.
தேர்தல் முடிவுகள் மற்றும் உலக சந்தை நிகழ்வுகள், நம் சந்தையை சோதிக்கக் கூடும். ஆனால், வளர்ச்சிக்காக ஏங்கும் உலக முதலீட்டு சமூகம், நம்மை பார்க்கும் பார்வை, தொடர்ந்து உற்சாகம் கலந்து இருக்கக் கூடும்.இது, அரசியல் கடந்த முதலீட்டு வாய்ப்பு தேடல். இந்த தேடலில் வாங்கப்படும் பங்குகள், சந்தை குறியீடுகளுக்கு உள்ளடங்கியவையாக இருக்கும் அல்லது இதுவரை அதிகம் வாங்கப்படாத சீர்திருத்தம் சார்ந்த துறை பங்குகளாக இருக்கும்.சந்தையின் தலைமை பங்கு வரிசை புதிதாக அமையும். இந்த வரிசையில் பங்கேற்பது, ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் அவசியம். அப்படி இல்லாத முதலீட்டு அணுகுமுறையை கையாண்டால், காத்திருப்புக்கு தயாராக இருக்க வேண்டும்.மொத்தத்தில், சந்தை மிகவும் துல்லியமான முடிவுகளை எடுக்கும் காலகட்டத்தை நோக்கி நகர்கிறது.
- ஷியாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|