பதிவு செய்த நாள்
25 மார்2019
06:47
ரகுராம் ராஜன் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறார். முதலாளித்துவம் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்த கருத்து, சர்வதேச அளவில் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஒரு சர்வதேச நிகழ்ச்சியில் பேசிய, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன், அதிர்ச்சியான கருத்துகளை தெரிவித்துள்ளார். அதாவது, ‘முதலாளித்துவத்தால் பல்வேறு தரப்பினருக்கு நிறைவான வாழ்க்கையை வழங்க முடியவில்லை. இது தொடருமானால், முதலாளித்துவத்துக்கு எதிரான புரட்சி ஏற்படும்’ என்று கூறியுள்ளார்.
இந்த சிந்தனை, சர்வதேச அளவில் இன்று பெருகி வருவது கண்கூடு. அதாவது, பல்வேறு பெரு நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள் முதற்கொண்டு அனைத்து தொழில் மற்றும் சேவை அமைப்புகள், தங்களுடைய லாபத்தை அதிகப்படுத்திக் கொள்ள முனைகின்றனவே அன்றி, அனைவருக்குமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்ற சிந்தனை குறைந்து போய்விட்டது.லாப நோக்கில் மட்டுமே இறங்கியுள்ள அமைப்புகளால், சுரண்ட மட்டுமே முடியுமே அன்றி, அது சமூகத்துக்கோ, மக்களுக்கோ வாய்ப்புகளை வழங்கும் இடத்துக்கு முன்னேற முடியவதில்லை. இதைத் தடுத்து, சமூகத்துக்குப் பயனுள்ள விஷயங்களை செய்ய வைக்க வேண்டியவை, பல்வேறு நாட்டின் அரசுகள்.
இன்றைய நிலையில், அரசுகளும் பெரு முதலாளிகளின் கைப்பாவையாகிப் போய்விட்டன. அதன் விளைவாக, ஏழை எளியவர்களின் குரல்களை கேட்பதற்கான வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது.இதைத் தான், ‘சர்வாதிகாரமுள்ள அரசுகள்’ என்று ரகுராம் ராஜன் குறிப்பிடுகிறார்.இன்னொரு விஷயத்தையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். மக்களை கை துாக்கிடும் போது ஒன்றை செய்தும், மற்றொன்றை செய்யாமல் விட்டுவிட்டும் போகக் கூடாது. அனைவருக்கும் வாய்ப்புகளை சரி சமமாக உருவாக்கித் தர வேண்டியது அவசியம். இதில், அத்தகைய ஓர் அணுகுமுறை நடைபெறவில்லை என்பது தான் ராஜனது கவலை.
இப்படி சம வாய்ப்புகள் வழங்கப்படாமல் போகும்போது ஏற்படும் பாதிப்பு என்ன? ஒருவித அதிருப்தி, வெறுப்பு இந்தச் சமூகத்தின் மீதும் அரசின் மீது ஏற்படுவது உறுதி. தமக்கு சுபிட்சமான வாழ்க்கையை முதலாளித்துவம் வழங்கத் தவறிவிட்டதே என்ற எண்ணம், அவர்களை மேன்மேலும் வருத்தமுறச் செய்யும். வாழ்க்கையில் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் முதலாளித்துவமே தற்போது எதிரியாக மாறிக் கொண்டிருக்கிறது என்ற உண்மை மக்களுக்குப் புரியத் துவங்கி இருக்கிறது.குறிப்பாக, 2008 பொருளாதாரத் தேக்கத்துக்குப் பின், உலக நிலைமைகள் முற்றிலும் மாறியுள்ளன. ஒவ்வொரு நாடும் தன் வணிகத்தையும், முதலீடுகளையும் சுருக்கிக் கொண்டு, தன் உற்பத்தியில் ஒருவித கட்டுக்கோப்புத் தனத்தைக் கொண்டு வர முயற்சி எடுத்திருக்கிறது.
இது, ஏற்றத்தாழ்வுள்ள வளர்ச்சியாக மாறியிருக்கிறது. இதனால் பலன் அடைந்தவர்களை விட, பாதிப்படைந்தவர்களே அதிகம்.மேலும், இந்த ஏணிப்படியில் கல்வி முக்கியமான கருவியாக இருந்தது. எப்படியேனும் கஷ்டப்பட்டு படித்துவிட்டால், வாழ்க்கைப் படிக்கட்டுகளில் உயர்ந்து விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.இன்று அதிலும் பெரும் தொய்வு. சாதாரண கல்வி நிறுவனங்கள் அல்ல, உயர்ந்த தரமான கல்வி நிறுவனங்களில் பயின்றால் தான் வாய்ப்புகள். அதாவது, அந்த அளவுக்கு உழைக்க வேண்டும், திறன் பெற்றிருக்க வேண்டும், பண வசதியும் இருக்க வேண்டும்.
இவையெல்லாம் இன்றைக்கு கோடானு கோடி பேருக்குச் சாத்தியமில்லை. இவர்கள் இந்த எலிப் பந்தயத்தில் பின்தங்கிவிடுகின்றனர். முன்னேற்ற வாசல் இவர்கள் கண்ணுக்கே தெரிவதில்லை.இதனாலும், மக்கள் மத்தியில் வேதனையும், அதிருப்தியும், அன்னிய உணர்வும் ஏற்பட்டு விடுகிறது.இன்னும் மூன்று அம்சங்களை, ராஜன் குறிப்பிடுகிறார். சர்வதேச பொருளாதாரத்துக்கு உகந்தவர்களாக தயாரிக்கப்படுவதற்குத் தடையாக இருப்பவை, வீழ்ச்சியடைந்து வரும் கல்விக் கூடங்கள், பெருகி வரும் குற்றங்கள் மற்றும் உயர்ந்து வரும் சமூகத் தீங்குகள் என்கிறார் ராஜன். எவ்வளவு உண்மை!
பள்ளிகள் வணிகமயமாகிவிட்டன என்பது ஒருபுறம் என்றால், என்ன சொல்லிக் கொடுத்தால், மாணவர்களை எதிர்கால உலகத்துக்குத் தயார்படுத்த முடியும் என்ற தெளிவு இல்லாமல் இருக்கிறது. ஆக, கல்விக்கான சமூக பங்கு என்பதே கேள்விக்கு உரியதாகி வருகிறது.இதன் தொடர்ச்சியோ என்னவோ, பல்வேறு குற்றங்கள் பெருகி வருகின்றன. வறுமையும், அதிருப்தியும் இளைஞர்களை வேறு திசைகளுக்கு இட்டுச் செல்கின்றன. சமூகத் தீங்குகள் பெருகுவதும் இதனால் தான். ஏற்றத்தாழ்வு நிரம்பிய சமூகத்தில் இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இதையெல்லாம் பேசியிருக்கும் நபர் தான். இதை ஏதோ ஒரு பொதுவுடைமைவாதி பேசவில்லை. மாறாக, முதலாளித்துவத்தில் ஆழ்ந்து பற்றுடைய ஒரு நபர் பேசியிருக்கிறார்.சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் மனமாற்றத்தின் குரலாக இதை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, நம் அரசுகளும், நிறுவனங்களும் தம் பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் வெகு அருகில் வந்துவிட்டது என்றே பொருள்.இனிமேலும் பெரு நிறுவன லாபங்கள் முக்கியமல்ல. அவை, சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் வேலைவாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள், அனைவருக்குமான இடம் ஆகியவை மிக முக்கியமானவை. மக்களை திருப்திப்படுத்தினால் தான் தொழிலையே நடத்த முடியும்.
மக்களைப் புறக்கணித்துவிட்டு, தொழில்களோ அரசுகளோ இயங்க முடியாது. பொது நலனை விலக்கிவிட்டு, தனிநலன் பேணப்பட முடியாது.ராஜன் சொல்வது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் என்றாலும், குறிப்பாக இந்தியாவுக்கும் பொருந்துவது தற்செயல் அல்ல.இங்கே படிப்படியாக அதிருப்தி பெருகுவது கண்கூடு. ஒவ்வொரு கல்லுாரியும் ஏராளமான மாணவர்களை தயாரித்து அனுப்புகின்றன. ஆனால், அனைவருக்கும் சரியான வேலையில்லை.தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு போதுமான நிதி வசதி இல்லை. தம் எதிர்காலம் எப்படியிருக்குமோ என்ற அச்சம் பெற்றோர் முகங்களிலும், இளைஞர்கள் முகங்களிலும் தென்படுகிறது.
இவையெல்லாம் கவனித்து சீராக்கப்பட வேண்டிய இடர்கள். ராஜன் சொல்லும் வழிமுறை முக்கியமானது. சமூக ஏற்றத்தாழ்வுகளை எந்த அரசும் இனியும் அனுமதிக்கக் கூடாது என்கிறார்.இது தான் இனி எதிர்கால மந்திரம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்றால் என்ன என்பதை, ஒவ்வொரு நாட்டு அரசும் கேட்க வேண்டும். அதற்காக முழு முனைப்புடன் திட்டமிட வேண்டும். தாமதமானாலும் சரியான எச்சரிக்கையைத் தான் விடுத்திருக்கிறார் ரகுராம் ராஜன்.ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
- ஆர் வெங்கடேஷ்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|