பதிவு செய்த நாள்
02 ஏப்2019
23:21
புதுடில்லி:‘வாராக் கடன் வசூல் தொடர்பாக, வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு, ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவு செல்லாது’ என, உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த, 2018, பிப்ரவரி, 12ல், அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல், வாராக் கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டார்.
அதில், வசதி இருந்தும் கடனை திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள் மீது, வங்கிகள் கடும் நடவடிக்கை எடுக்க, வழி வகை செய்யப்பட்டிருந்தது.அதில், ஒரு நிறுவனம்,கடன் தவணையை செலுத்த ஒரு நாள் தவறினாலும், வங்கிகள், அக்கடனை, இடர்ப்பாட்டு கடன் பிரிவில் சேர்த்து, 180 நாட்களுக்குள், கடனை மறுசீரமைக்க வேண்டும்.தவறினால், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மூலம், திவால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம், புதிய விதிமுறை, 25 கோடி ரூபாய் வரை கடன் நிலுவையில் உள்ள, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பொருந்தாது என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொறுப்புணர்வு
இதனால், வங்கிகள், காலதாமதமின்றி வாராக் கடனை கண்டறிந்து வசூலிக்க முடியும். திவால் நடவடிக்கைக்கு அஞ்சி, நிறுவனங்களும் கடனை திரும்பச் செலுத்தும். கடன் வழங்கும் வங்கிகளுக்கும், கடன் பெறுவோருக்கும் பொறுப்புணர்வு அதிகரித்து, கடன் நடைமுறையில் ஒழுக்கம் உருவாகும் என, ரிசர்வ் வங்கி எதிர்பார்த்தது.
ஆனால், ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கு, வங்கிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. திவால் நடவடிக்கையில், பல தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக கூறி, மத்திய அரசும், விதிமுறையை தளர்த்தக் கோரியது. அதை ஏற்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.
இதையடுத்து, மின்சாரம், சர்க்கரை, உரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் சட்ட விரோதமான உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
உத்தரவு
அந்த மனுவில், ‘அரசு துறைகளிடம் இருந்து வரவேண்டிய நிலுவை தொகை, உரிய நேரத்தில் கிடைக்காததால், கடனை திரும்பச் செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.‘புறக் காரணங்களால் நேரும் இது போன்ற பாதிப்பை கணக்கில் கொள்ளாமல், வேண்டுமென்றே கடனை திரும்பச் செலுத்தாதோர் பிரிவில், தங்களை சேர்க்க காரணமாக உள்ள, ரிசர்வ் வங்கியின் உத்தரவு, அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. அதை ரத்து செய்ய வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ரிசர்வ் வங்கி, 2018, பிப்., 12ல் பிறப்பித்த உத்தரவு, அரசியல் சாசன சட்டத்தில், தொழில் புரிவோருக்கு வழங்கியுள்ள உரிமையை மீறுவதாக உள்ளதால், அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
லாப பாதை
இதையடுத்து, ரிசர்வ் வங்கி, சீராய்வு மனு தாக்கல் செய்யும் என, தெரிகிறது. இல்லை என்றால், ஏற்கனவே ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, மேற்கொண்டு வரும் பல நிறுவனங்கள் மீதான திவால் நடவடிக்கைகளின் நிலை கேள்விக்குறியாகும்.
ரிசர்வ் வங்கி உத்தரவால், பொதுத் துறை வங்கிகள், அதிக அளவில் வாராக் கடனுக்கு நிதி ஒதுக்கியதில், துவக்கத்தில் இழப்பை சந்தித்தன. எனினும், கடந்த ஆண்டு இறுதியில், பெரும்பாலான வங்கிகள், மீண்டும் லாபப் பாதைக்கு திரும்பியுள்ளன. வங்கிகளின் வாராக் கடனும் பெருமளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த உத்தரவு?
வங்கிகள், வழக்கமாக, வாராக் கடன் பிரச்னைக்கு, தவணைக் காலத்தை நீட்டிப்பது, வட்டியில் ஒரு பகுதியை வசூலிப்பது உள்ளிட்ட சில நடைமுறைகளை கடைபிடித்து வந்தன.இதில்,வங்கி அதிகாரிகளும், கடன்தாரர்களும் கைகோர்க்கும் வாய்ப்பு உள்ளதால், வாராக் கடன் குறையாமல், அதிகரித்து வந்தது.
இதை தடுக்கவே, ‘கடன் தவணையை ஒரு நாள் செலுத்த தவறினாலும், அக்கடனை, இடர்ப்பாட்டு கடன் பிரிவில் சேர்த்து, 180 நாட்களில் தீர்வு காண வேண்டும்; தவறினால் திவால் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|