பதிவு செய்த நாள்
05 ஏப்2019
23:44
புதுடில்லி:‘‘லோக்சபா தேர்தலுக்கு பின், அமையும் அரசு, புதிய தொழில் கொள்கை வரைவறிக்கையை வெளியிடும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
அவர், டில்லியில், இந்திய தொழிலக கூட்டமைப்பின் கூட்டத்தில் மேலும் பேசியதாவது: வர்த்தக அமைச்சகம், புதிய தொழில் கொள்கையை தயாரித்துள்ளது. வளரும் துறைகளை மேம்படுத்தவும், தற்போதைய தொழில்களை நவீனமாக்கவும், இக்கொள்கை துணை புரியும். மேலும், சுலபமாக தொழில் துவங்குவதற்கு தடையாக உள்ள நடைமுறைகளை மாற்றவும், தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்கவும், கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பரிசீலனை
நாடு சுதந்திரம் அடைந்த பின், 1956ல், முதல் தொழில் கொள்கை வெளியிடப்பட்டது.அதன் பின், 1991ல், நாடு, நடப்பு கணக்கு பற்றாக்குறை பிரச்னையில் சிக்கிய போது, இரண்டாவது தொழில் கொள்கை அமலானது. தற்போது, மூன்றாவதாக உருவாக்கப்பட்டுள்ள, தொழில் கொள்கை வரைவறிக்கை, மத்திய அமைச்சக குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்து, மத்தியில் புதிய அரசு அமைந்ததும், அமைச்சக குழு பரிசீலனைக்கு பின், தொழில் கொள்கை வரைவறிக்கை வெளியிடப்படும்.அன்னிய நேரடி முதலீட்டை அதிக அளவில் ஈர்க்கவும், ஏற்றுமதியை மேம்படுத்தவும், புதிய தொழில் கொள்கை உதவும்.
கடந்த, 2018- – 19ம் நிதியாண்டில், ஏப்ரல் – பிப்ரவரி வரையிலான காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, 29 ஆயிரத்து, 847 கோடி டாலரை எட்டியுள்ளது.
சீனா
சீனா உடனான வர்த்தகப் பற்றாக்குறை, முதன் முறையாக, 1,000 கோடி டாலர் அளவிற்கு குறைந்துள்ளது. சீன நிறுவனங்கள், வெளிநாடுகளில் ஆலைகளை அமைக்க ஆர்வம் காட்டுகின்றன. சில நிறுவனங்கள், இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளதால், அது குறித்து பேச்சு நடைபெறுகிறது.
பல ஆண்டுகளுக்குப் பின், சர்வதேச வர்த்தகத்தில், கடுமையான சவால்களை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியா மிகுந்த விழிப்புணர்வுடன், செயல்பட்டு வருகிறது.பல நாடுகளுடன், இந்தியா, தாராள வர்த்தகம் ஒப்பந்தம் செய்துள்ளது. அவற்றால், உள்நாட்டு நிறுவனங்களுக்கு போதிய பயன்கள் கிடைக்கவில்லை என, தொழில் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து, எதிர்காலத்தில் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களில், அனைத்து துறையினரும் பங்கு கொள்ளும் வகையில், புதிய நடைமுறைகளை உருவாக்கும் பணிகள் நடைபெறுகின்றன. விரைவில், இப்பணிகள் முடிவடையும்.தொழில் துவங்குவதை மேலும் சுலபமாக்க, மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து செயல்படுவதற்கான வழிமுறைகளை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
நான்காவது தொழில் புரட்சி
இந்தியா, நான்காவது தொழில் புரட்சிக்கு தயாராகி வருகிறது. இதில், சாதனங்கள் இடையிலான இணைய பயன்பாடு, ரோபோ, செயற்கை நுண்ணறிவு, மேக கணினி, அறிவார்ந்த கணினிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது.இதன் மூலம், நாட்டின் பொருளாதாரம், வரும் ஆண்டுகளில், 5 லட்சம் கோடி டாலரை எட்டும். இதில், தயாரிப்பு துறையின் பங்களிப்பு மட்டும், 20 சதவீதம் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
சுரேஷ் பிரபு,
மத்திய வர்த்தகம் – தொழில் துறை அமைச்சர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|