பதிவு செய்த நாள்
07 ஏப்2019
23:51
கமாடிட்டி சந்தை
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய், தொடர்ந்து ஐந்தாவது வாரமாக, விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. நடப்பாண்டில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், எண்ணெய் விலை, 30 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் மாதத்திலும் ஆரம்பம் முதல் விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.
கடந்த,2018ல், சரிந்து வந்த எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக, எண்ணெய் உற்பத்தியை குறைப்பது என, எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான, ‘ஒபெக்’ மற்றும் ‘நான் ஒபெக்’ நாடுகள் முடிவு செய்தன. இதன்படி, 2019ல் தினசரி, 1.2 லட்சம் பேரல் அளவுக்கு உற்பத்தி குறைப்பை அமல்படுத்துவதாக முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கடந்த இரு மாதங்களாக உற்பத்தி குறைப்பு நடந்து வருகிறது.
இந்த உற்பத்தி குறைப்பு சரிவர செயல்படுத்தப்படுகிறதா என்பதை மேற்பார்வையிட, ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் கூட்டம், 14ம் தேதி நடைபெற உள்ளது.அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதல் பிரச்னை, இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது. கடந்த மாதம் இப்பிரச்னை குறித்து, இந்த இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு நடைபெற்றது. இருப்பினும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதையடுத்து, அடுத்து நடைபெற இருக்கும் கூட்டம் குறித்து, எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.தற்போது, அமெரிக்காவின் தினசரி உற்பத்தி, 12 மில்லியன் பேரல்கள். இதையடுத்து, உலக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில், முதல் இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது.
மேலும், இப்போக்கு தொடரும் சூழலில், 2025ல் சவுதி அரேபியா, ரஷ்யா ஆகிய நாடுகளின் மொத்த உற்பத்தி அளவுக்கு, அமெரிக்காவே உற்பத்தி செய்து விடும் என்ற கருத்து நிலவுகிறது.வெனிசுலா நாட்டின் மீது, அமெரிக்கா கொண்டு வந்துள்ள பொருளாதார தடை காரணமாக, அந்நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
வாரம் ஒரு முறை, புதன் அன்று வெளியாகும் கச்சா எண்ணெய் இருப்பு விபரத்தில், இருப்பு அதிகரித்துள்ளதாக தெரிய வந்ததை அடுத்து, சற்று விலை சரிந்த போதிலும், மீண்டும் விலை உயர்வு நிகழ்ந்தது.
தங்கம் வெள்ளி
சர்வதேச அளவில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை, கடந்த வாரம் சரிவில் ஆரம்பித்த போதிலும், வார இறுதி நாட்களான வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில், சற்று உயர்ந்து வர்த்தகம் ஆனது.
அமெரிக்காவில், விவசாயம் சாராத அரசு பணிகளில், புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விபரம், கடந்த வெள்ளியன்று வெளியானது. அதில், புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களின் எண்ணிக்கை, எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது.இதன் காரணமாக, அமெரிக்க நாணய குறியீடு சற்று வலுப்பெற்றது. இது தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை சரிய காரணமாக அமைந்தது.
அமெரிக்க வட்டி விகிதம் குறித்த மினிட்ஸ் சுற்றறிக்கை வெளியாகி உள்ளது. வட்டி விகிதம் குறித்த எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத சூழலில், அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் அதை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்கப்படும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று உயர்ந்தது. இதையடுத்து, தங்கம், வெள்ளி விலை கடந்த வியாழன் அன்று, 2 சதவீதம் சரிந்தது.
கடந்த வாரம் திங்கள் அன்று, அமெரிக்க சந்தைகளுக்கு விடுமுறை தினமாக இருந்தது. கடந்த வாரம் சந்தையில், 1 அவுன்ஸ் – 31.104 கிராம் தங்கம், 1,350 டாலர் என்ற நிலையை எட்டி, 30 டாலர் வரை சரிந்து வர்த்தகம் நடைபெற்றது. நடப்பு ஆண்டு துவக்கம் முதலே, தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை உயர்ந்து வந்தது. இதற்கு, அமெரிக்க வட்டி விகிதம் குறித்த தகவல்களே காரணமாக அமைந்தது.
அமெரிக்காவில், நடப்பு ஆண்டில் மூன்று முறையும், அடுத்த ஆண்டில் ஒரு முறையும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த பொருளாதார காரணிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சந்தேகங்கள் காரணமாக, வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புகள் குறைவு என்ற கண்ணோட்டம் எழுந்தது. இந்த கண்ணோட்டத்தால் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை, ஜனவரி முதல் தற்போது வரை உயர்ந்து வந்தது.
ஆனால், கடந்த வாரம் வெளிவந்த சுற்றறிக்கையில், நடப்பாண்டில் ஒரு முறை வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற சூழ்நிலை உள்ளதாக இருந்ததால், விலை சரிவு நிகழ்ந்தது.பொதுவாக, வட்டி விகிதமும், தங்கமும் எதிர்மறையான போக்கை கொண்டவை.
வட்டி விகிதம் உயரும் போது, அரசு மற்றும் அரசு சார்ந்த முதலீடுகளில் ஆதாயம் அதிகரிக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் அவற்றில் முதலீட்டை அதிகரிப்பர். மாறாக, வட்டி விகிதம் குறையும் போது, அதிக லாபமீட்டும் பொருட்கள் மீது முதலீடு செய்வர். இவற்றில், தங்கத்தின் மீதான முதலீடு முதலிடம் வகிக்கிறது.
செம்பு
கடந்த வாரம் செம்பு, விலை சரிந்து, வர்த்தகம் ஆனது. ஐரோப்பா மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, செம்பின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.சீனாவின் பொருளாதார காரணிகள், எதிர்பார்த்ததை விட குறைவாக வந்துள்ளன. இதன் காரணமாக, இந்நாட்டின் தொழில் துறை வளர்ச்சி மற்றும் தேவை ஆகியவை குறையும் என்ற கண்ணோட்டத்தில், விலை சரிவு நிகழ்ந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் தொழில் துறை வளர்ச்சி, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சிறிய அளவு உயர்வை கொண்டிருந்தது.இந்த ஆண்டை பொறுத்தவரை, 16 சதவீதம் அளவுக்கு விலை சரிந்துள்ளது. அமெரிக்கா, சீனா ஆகியவற்றுக்கு இடையே நடந்த வர்த்தக மோதல் காரணமாக, பெருமளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செம்பின் விலையை பொறுத்தவரை, அதன் ஏற்ற, இறக்கத்துக்கு, அமெரிக்க – சீன நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதலே முழு காரணமாக அமையும்.காரணம், உலக அளவில் அதிக அளவில் கனிமங்கள் மற்றும் தொழிற்சாலை மூலதன பொருட்களை உபயோகிப்பதில், சீனா முதல் இடம் வகிக்கிறது. மேலும், ஏற்றுமதியின் ஏற்ற, இறக்கங்களும் கனிமங்களின் விலைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|