பதிவு செய்த நாள்
07 ஏப்2019
23:54
இந்திய சந்தையின் பங்கு மதிப்பு அதிகமாக இருக்கும் போதும், முதலீட்டு ஆர்வம் சிறிதும் குறையவில்லை என்பதே தற்போதைய சந்தையின் சவால். இந்த சவால் புதிதல்ல. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும், தேர்தல் முடிவுகள் சார்ந்த எதிர்பார்ப்புகள் சந்தையை பாதிக்கும். யார் ஆட்சி அமைப்பர் என்பதைப் பொறுத்து, சந்தை தன் நிலைப்பாட்டை எடுக்கும். நிலையான ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டால் சந்தை உயர்வது உறுதி. இதுவே, இம்முறை நடக்கிறது.
இம்முறை தென்படும் சந்தை ஆர்வம், எதிர்கால பொருளாதார வளர்ச்சி குறித்தும், நிலையான ஆட்சி குறித்தும் நிலவும் நம்பிக்கையின் வெளிப்பாடே ஆகும்.ஆனால், நடக்க வேண்டிய பொருளாதார நிகழ்வுகளின் நம்பகத்தன்மை மிக முக்கியம். சந்தையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அரசு இருக்க வேண்டும்.
அதற்கான அரசியல் ஆர்வமும், உறுதியும் அடுத்து அமையும் அரசுக்கு மிக அவசியம். அந்த இடத்தில் அரசு தன்னை நிலை நாட்டிக்கொள்ள போதுமான பெரும்பான்மை தேவை. அப்போது தான், வேகமான வளர்ச்சி கொள்கைகளை உருவாக்கி, வளர்ச்சிக்குத் தேவையான பொருளாதார சூழலை ஏற்படுத்த முடியும்.அடுத்து வரும் அரசு, பொருளாதார சீர்திருத்த மாற்றங்களை துரிதமாக நிறைவேற்றி, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பது சந்தை எதிர்பார்ப்பு.
இது நடக்க, தெளிவான தேர்தல் முடிவு மிக அவசியம். போதுமான அளவு பலம் இருந்தால் மட்டுமே, வேகமான கொள்கை முடிவுகளை எடுக்க இயலும்.துரித பொருளாதார மாற்றங் களை ஏற்படுத்த, அரசியல் பெரும்பான்மை மிக அவசியம். பார்லி.,யில் பெரும்பான்மை இருந்தால் மட்டுமே, அடுத்த அரசு துரித பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கும்.
மாறாக தொங்கு பார்லிமென்ட் அமைந்தால், சந்தை தன்னுடைய நம்பிக்கையை குறுகிய காலத்திற்கு இழப்பது உறுதி.தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும், அடுத்து அமையும் ஆட்சி மீது பொருளாதார எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளதை நாம் அனைவரும் உணர வேண்டும். அதை நிறைவேற்றத் தேவையான அரசியல் துணிச்சல், அடுத்து அமையும் அரசுக்கு இருக்க வேண்டும்.
தற்போது உள்ள சூழலில், ஆளும் கட்சிக்கு மட்டுமே வேகமாக பொருளாதார முடிவுகளை எடுக்கும் துணிச்சல் இருப்பதாக முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். அதில் ஓரளவு உண்மை இருந்தாலும், முழுவதும் உண்மையல்ல.யார் ஆட்சிக்கு வந்தாலும், விரைவில் அரசியல் நிலையை சரிசெய்துகொண்டு, பொருளாதார முடிவுகளை எடுக்குமிடத்தில் தன்னை நிலை படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயமிருக்கிறது.
அடுத்த ஆட்சியின் முதல் ஆண்டில் எடுக்கப்படும் பொருளாதார முடிவுகள், வரும், 10 ஆண்டுகளில் அமையப்போகும் பொருளாதார முன் நகர்வின் முன்னோடி என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.நாளைய இந்தியாவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு அடுத்த அரசுக்கு இருக்கிறது.
அதற்கான துல்லிய புரிதலோடு அரசு அமைந்தால், அது வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும்.சந்தை இந்த புரிதலில் மிக தெளிவாக இருக்கிறது. வாக்காளர்களும் தெளிவாக இருப்பர் என்றே சந்தை பெரும்பான்மை நம்புகிறது.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
பங்குச்சந்தை
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|