பதிவு செய்த நாள்
10 ஏப்2019
23:38
வாஷிங்டன்:‘இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சில சீர்திருத்தங்கள், முறைகேடுகள் குறைய வழி வகுத்துள்ளன’ என, பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிதியம் வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கை:இந்தியா மேற்கொண்ட சில சீர்திருத்தங்கள், மின்னணு மயமாக்கலின் பயன்களை பெற உதவியுள்ளன. அத்துடன், தனியாதிக்கச் செயல்பாடுகளும், முறைகேடுகளும் குறைய துணை புரிந்துள்ளன. உதாரணமாக, இந்தியாவிலும், இந்தோனேஷியாவிலும், சரக்கு மற்றும் சேவைகள் கொள்முதலில், மின்னணு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதால், சந்தை போட்டி அதிகரித்துள்ளது. இதனால், பொருட்கள் மற்றும் சேவைகள் தரம் உயர்ந்துள்ளது.
கொள்முதல்
பொது வினியோக கொள்முதலில், மின்னணு பயன்பாடு, பொருட்களின் விலை மற்றும் தரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில், சமூக உதவி திட்டத்தில், பயனாளிகளின் வங்கிக் கணக்கில், நேரடியாக நிதி செலுத்தப்படுகிறது.மின்னணு தொழில்நுட்பத்தில் நடைபெறும் திட்டத்தில், அரசின் செலவினம், சராசரியாக, 17 சதவீதம் குறைந்துள்ளது.
அதேசமயம், அத்திட்டத்தில் மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் சிறிதளவும் குறையவில்லை என்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஆந்திராவில் சமூக நலத் திட்டங்களில் பயன் பெற, ‘ஸ்மார்ட் ஐ.டி., கார்டு’ பயன்படுத்தப்படுகிறது. இது, உண்மையான பயனாளிகள் தவிர்த்து, பிறர் பயன் பெறுவதை தடுக்க உதவுகிறது.இதனால், அரசுக்கு வீணாகும் செலவில், 41 சதவீதம் மிச்சமாகிறது.
நிர்வாக மேலாண்மையில் செய்யும் தவறுகள், வீண் செலவுகளை அடையாளம் காணுதல் போன்றவற்றை, பார்லிமென்ட், தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் உள்ளிட்ட அமைப்புகள் கண்காணிக்கின்றன.
ஊழல்
இது, அரசு நிதியின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், மக்கள் பிரிதிநிதிகளுக்கு உள்ள பொறுப்பையும் சுட்டிக் காட்ட உதவுகிறது. கணக்கு தணிக்கையில் தீவிரமாக கவனம் செலுத்தும் பட்சத்தில், அது, லஞ்ச ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணை புரியும்.
உதாரணமாக, 2005 முதல், வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் செயல்பாட்டை மேற்பார்வை யிடவும், அத்திட்டத்தில் ஊழலுக்கு எதிரான செயல்களை கண்காணிக்கவும், சமூக தணிக்கை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த அமைப்புகள், எஸ்.ஏ.ஐ., எனப்படும் உயர்மட்ட தணிக்கை அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டு, குடிமக்களின் நேரடி பங்களிப்புடன் தொடர்புள்ளவை.
மத்திய அரசின், 2019 இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான புதிய வருவாய் ஆதரவு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, பிற திட்டச் செயல்பாடுகள் மந்தமாக இருக்கும் எனலாம்.அதனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3 சதவீத நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்டுவது தாமதமாக வாய்ப்பு உள்ளது. அது போல, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கடன், 40 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என்ற இலக்கு, 2024க்கு பின் எட்டப்படலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|