பதிவு செய்த நாள்
14 ஏப்2019
00:31
வாஷிங்டன்:‘‘வங்கிகளின் வட்டி விகிதம், 0.25 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்படாமல், நாட்டின் பொருளாதார சூழல், எதிர்கால மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் குறைக்க வேண்டும்,’’ என, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தலைநகர், வாஷிங்டனில், பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கியின் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது.இதில், மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இம்மாநாட்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாக, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த, மத்திய வங்கிகளின் கூட்டம் நடைபெற்றது.
அதில், சக்திகாந்த தாஸ் பேசியதாவது:ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, சில்லரை விலை பணவீக்க அடிப்படையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடன்களுக்கான, ‘ரெப்போ’ வட்டியை நிர்ணயிக்கிறது.அதன்படி வட்டி, 0.25 சதவீதம் குறைக்கப்படுகிறது அல்லது உயர்த்தப்படுகிறது.
நிதிக் கொள்கை குழு, வட்டி விகிதத்தை குறைக்கவோ, உயர்த்தவோ முடிவெடுத்தால், அதை, 0.25 சதவீதத்திற்கு பதிலாக, 0.10 சதவீதமாகவோ அல்லது 0.35 சதவீதமாகவோ நிர்ணயிக்கலாம்.இத்தகைய முடிவு சரியானதாக இருக்கும். நிதிச் சந்தையின் ஏற்ற, இறக்கத்திற்காக, அடிக்கடி கொள்கையை மறுபரிசீலனை செய்யும் அவசியம் குறையும்.
மேலும், 0.10 சதவீத வட்டி குறைப்பு போதும் என்ற சூழலில், இலக்க வசதிக்காக, கூடுதலாக, 0.15 சதவீதம் குறைப்பது தேவையற்றது.அதனால், நாட்டின் பொருளாதார சூழலை கருதி, ரெப்போ வட்டி, 0.10 சதவீதம் அல்லது 0.35 சதவீதம் குறைக்கலாம். அதேசமயம், ஒரே தவணையில், 0.50 சதவீதம் குறைப்பது அதிகம் என, கருதுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
குறைப்பு
ரிசர்வ் வங்கி கவர்னராக, 2018, டிசம்பரில் சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றார். இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, இந்தாண்டு பிப்ரவரி மற்றும் நடப்பு ஏப்ரல் துவக்கத்தில், ரெப்போ வட்டியை, தலா, 0.25 சதவீதம் என, இரு முறை குறைத்தது.ஆனால், இந்த பலன் முழுவதையும், எந்த வங்கியும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை. எஸ்.பி.ஐ., வீட்டு வசதி கடனுக்கான வட்டியை, தலா, 0.10 சதவீதம் என, இரு முறை குறைத்து உள்ளது.
ஆக, ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி குறைப்பின் முழு பயனை, வாடிக்கையாளர்கள் பெற முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாகவே, பொருளாதார காரணிகளின் அடிப்படையில், ரெப்போ வட்டியை, 0.10 சதவீதம் கூட குறைக்கலாம் என, சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டியை குறைத்தாலும், வங்கிகள், கடனுக்கான வட்டியை அதே அளவில் குறைக்காத போது, எதற்காக, கூடுதலாக வட்டி குறைக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தை, சக்திகாந்த தாஸ் பேச்சு வெளிப்படுத்தியுள்ளது.
ரெப்போ வட்டி, 0.25 சதவீதம் குறைந்த போதிலும், அதில், 0.10 சதவீத பயனை மட்டுமே, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றன.இந்நிலையில், ரெப்போ, 0.10 சதவீதம் குறைக்கப்பட்டால், வங்கிகள், கடனுக்கான வட்டியை சிறிதும் குறைக்காது என, பொருளாதார வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|