பதிவு செய்த நாள்
15 ஏப்2019
00:08
கமாடிட்டி சந்தை
கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, தொடர்ந்து ஐந்தாவது வாரமாக உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், கடந்த வாரம் விலை ஏற்றம் சிறிதளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, 1 பேரல் கச்சா எண்ணெய் விலை, 63 முதல், 65 அமெரிக்க டாலர் என்ற அளவில், சீராக வர்த்தகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களான, அக்டோபர் முதல், டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், கச்சா எண்ணெய் விலை, தொடர் சரிவை சந்தித்தது. இருப்பினும், இந்த ஆண்டு ஆரம்பம் முதல், தற்போது வரை, தொடர்ந்து நான்கு மாதங்களாக விலை உயர்ந்து வருகிறது.
ஜனவரி மாதம், 1 பேரல் விலை, 42 அமெரிக்க டாலராக இருந்தது; தற்போது, 64 டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகள் மீது, அமெரிக்கா கொண்டு வந்துள்ள பொருளாதார தடை காரணமாக, கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும், லிபியா நாட்டின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாகவும் சந்தையில் எண்ணெய் தட்டுப்பாடு நிலவும் என்ற அச்சத்தில், விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
வெனிசுலா நாட்டின் தினசரி உற்பத்தி, 2 லட்சத்து, 70 ஆயிரம் பேரல்கள் குறைந்து, மார்ச் மாதத்தில், மொத்த தினசரி உற்பத்தி, 7 லட்சத்து, 32 ஆயிரம் பேரல்களாக ஆனது. மேலும், ஈரான் நாட்டின் உற்பத்தி, 27 லட்சம் பேரல்கள் என்ற நிலையில் உள்ளது.
வளைகுடா எண்ணெய் உற்பத்தி நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகியவை இணைந்து, 2019, ஆண்டின் முதல் ஆறு மாத காலத்துக்கு, உற்பத்தியை குறைத்து, விலையை அதிகரிக்க திட்டமிட்டன. இதன்படி, உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான, சவுதி அரேபியாவும் உற்பத்தியை குறைத்துள்ளது.
இத்துடன், வெனிசுலா மீதான தடையும் சேர்ந்து கொள்ள, விலை அதிகரித்துள்ளது. மேலும், வர்த்தக மோதல் குறித்து, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். இதில் சுமூகமான உடன்படிக்கை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி நிகழ்ந்தால், பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும். இதன் காரணமாக, தொழிற்சாலை தேவை மற்றும் கச்சா எண்ணெய் தேவை உயரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதன் காரணமாகவும் விலை அதிகரித்துள்ளது.
தங்கம் வெள்ளி
கடந்த வாரம் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை அதிகரித்து வர்த்தகம் ஆனது. இருப்பினும், வார இறுதியில், வியாழன் அன்று கடும் சரிவை சந்தித்தது. பின்பு வெள்ளி அன்று சிறிதளவு மீண்டு, வர்த்தகம் முடிவுற்றது. தங்கம், வெள்ளி ஆகியவை தொடர்ந்து மூன்றாவது வாரமாக விலை சரிவில் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், முதலீட்டாளர்கள் தங்கம் மீது மூதலீடு செய்வது குறைந்துள்ளது. இதுவும் விலை சரிவிற்கு ஒரு காரணமாகும்.வாரந்தோறும் வியாழன் அன்று வெளிவரும், அமெரிக்காவில் வேலை இல்லாதோருக்கான ஊக்க தொகை குறித்த புள்ளி விபரம், அந்நாட்டின் உற்பத்தி துறை குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில், டாலர் இண்டெக்ஸ் அதிகரித்தது. இதையடுத்து, தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை, கடந்த வியாழனன்று கடும் சரிவினை சந்தித்தது.
நடப்பு ஆண்டில் உலக பொருளாதாரம் முந்தைய கணிப்பான, 3.5 சதவீதத்திலிருந்து, 3.3 சதவீதமாக குறையும் என பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.இதில், அமெரிக்க பொருளாதார வளர்ச்சி, 2.5 சதவீதத்திலிருந்து, 2.3 சதவீதமாக குறையும் எனவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து பொருளாதார வளர்ச்சி குறையும் என்ற கோணத்தில், முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீட்டினை அதிகரித்தனர். இதன் காரணமாக, வார இறுதி நாளில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது.
வரும் நாட்களிலும், இது விலைக்கு சாதகமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் மட்டுமின்றி பிளாட்டினத்தின் விலையும் தொடர்ந்து, ஐந்தாவது வாரமாக உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. உற்பத்தி குறைவு மற்றும் தொழில்துறை தேவை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.
அமெரிக்காவில், நடப்பு ஆண்டில் மூன்று முறையும், அடுத்த ஆண்டில் ஒரு முறையும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த பொருளாதார காரணிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சந்தேகங்கள் காரணமாக, வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புகள் குறைவு என்ற கண்ணோட்டம் எழுந்தது. இந்த கண்ணோட்டத்தினால் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை, ஜனவரி முதல் தற்போது வரை உயர்ந்து வந்தது.
ஆனால், அண்மையில் வெளிவந்த சுற்றறிக்கையில், நடப்பாண்டில் ஒரு முறை வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற சூழ்நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்ததால், விலை சரிவு நிகழ்ந்தது.பொதுவாக, வட்டி விகிதமும் தங்கமும் எதிர்மறையான போக்கினை கொண்டவை. வட்டி விகிதம் உயரும்போது, அரசு மற்றும் அரசு சார்ந்த முதலீடுகளில் ஆதாயம் அதிகரிக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் அவற்றில் முதலீட்டை அதிகரிப்பார்கள். மாறாக, வட்டி விகிதம் குறையும்போது, அதிக லாபமீட்டும் பொருட்கள் மீது முதலீடு செய்வர். இவற்றில், தங்கத்தின் மீதான முதலீடு முதலிடம் வகிக்கிறது.
செம்பு
செம்பு விலையானது, முந்தைய வாரத்துடன் ஒப்பிடும் போது, கடந்த வாரம் விலை உயர்ந்து வர்த்தகம் ஆன போதிலும், வார இறுதி நாட்களில் சற்று சரிந்து வர்த்தகம் நடைபெற்றது.
பங்குச் சந்தைகள் உயர்வு, விலைக்கு சாதகமாக அமைந்த போதிலும், கடந்த வியாழன் அன்று வெளியான சீனாவின் தொழில் துறை உற்பத்தி குறியீடு வளர்ச்சி பாதகமாக அமைந்துவிட்டது.
சீனாவின் தொழில் துறை வளர்ச்சி குறியீடு, இவ்வாண்டு தொடக்கம் முதல் சரிந்துவரும் சூழலால், விலை ஏற்றம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. உலக அளவில் செம்பை அதிகம் பயன்படுத்துவதில், சீனா முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நாட்டின் தேவை மற்றும் நுகர்வு செம்பு விலையில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும்.
லண்டன் பொருள் வாணிப சந்தையில், செம்பு இருப்பானது, கடந்த வாரம், 34,900 டன் அதிகரித்துள்ளது. மொத்த இருப்பு, 66,325 டன்களாகும்.
அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே வர்த்தக மோதல் குறித்து நடைபெற்று வரும் பேச்சில், சுமூக முடிவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அப்படி ஏற்பட்டால், சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் ,தொழிற்சாலை தேவையும் அதிகரிக்கும். இந்த எதிர்பார்ப்பினாலும் செம்பு விலை ஏற்றம் கண்டது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|