பதிவு செய்த நாள்
17 ஏப்2019
07:14
புதுடில்லி: கடந்த, 2018 – -19ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 7.97 சதவீதம் வளர்ச்சி கண்டு, முதன் முறையாக, 50 ஆயிரம் கோடி டாலரை தாண்டி, 53 ஆயிரத்து, 540 கோடி டாலரை எட்டியுள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. இது, ரூபாய் மதிப்பில், 37 லட்சத்து, 40 ஆயிரத்து, 800 கோடியாகும்.
கடந்த, மார்ச்சில், முக்கியமான, 30 பொருட்களில், 20 பொருட்களின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. மருந்து, ரசாயனம், பொறியியல் துறைகளில் வளர்ச்சி நன்கு இருந்ததால், சரக்கு ஏற்றுமதி, ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு, 11 சதவீதம் அதிகரித்து, 3,250 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கடந்த, 2018 அக்டோபரில், இப்பிரிவு, 17.86 சதவீத வளர்ச்சியை எட்டிஇருந்தது. கடந்த நிதியாண்டில், சரக்கு ஏற்றுமதி, 33 ஆயிரத்து 100 கோடி டாலராக ஏற்றம் கண்டுள்ளது. இதற்கு முன், அதிகபட்சமாக, 2013 – -14ம் நிதியாண்டில், 31 ஆயிரத்து 440 கோடி டாலர் ஏற்றுமதி நடைபெற்றது. இதன் மூலம், ஐந்து நிதியாண்டுகளுக்கு பின், சரக்கு ஏற்றுமதியில் புதிய உச்சம் எட்டப்பட்டுள்ளது.
வர்த்தக பற்றாக்குறை:
மார்ச்சில், இறக்குமதி, 1.44 சதவீதம் ஏற்றம் கண்டு, 43 ஆயிரத்து, 440 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில், இறக்குமதி, 8.99 சதவீதம் அதிகரித்து, 50 ஆயிரத்து 744 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, ரூபாய் மதிப்பில், 35 லட்சத்து, 52 ஆயிரத்து, 80 கோடியாகும். இதனால், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 16 ஆயிரத்து 200 கோடி டாலரில் இருந்து,17ஆயிரத்து 642 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில், பெட்ரோலியப் பொருட்கள், பிளாஸ்டிக், ரசாயனங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி, முறையே, 28, 25.6 மற்றும் 22 சதவீதம் அதிகரித்துள்ளது.மருந்து, 11 சதவீதம், பொறியியல் சாதனங்கள், 6.36 சதவீத வளர்ச்சி கண்டுள்ளன.
எண்ணெய் இறக்குமதி, 29.27 சதவீதம் உயர்ந்து, 14 ஆயிரத்து, 47 கோடி டாலராக உயர்ந்துள்ளது. எண்ணெய் சாரா பொருட்கள் இறக்குமதி, 2.82 சதவீதம் அதிகரித்து, 36 ஆயிரத்து, 697 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: சர்வதேச மந்தநிலையால், மூன்று நிதியாண்டுகளாக, சரக்கு ஏற்றுமதி, அதிக ஏற்ற, இறக்கமின்றி காணப்பட்டது. இத்தகைய சூழலிலும், ஐந்து நிதியாண்டுகளுக்குப் பின், 2018- – 19ம் நிதியாண்டில், சரக்கு ஏற்றுமதி, இதுவரை இல்லாத வளர்ச்சியை கண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தகப் பதற்றம், சில நாடுகளின் சுய வர்த்தக மேம்பாட்டு கொள்கைகள் போன்ற சூழலுக்கு நடுவே, இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்திருப்பது சிறப்பாகும். ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க, வேளாண் பொருட்களுக்கு வட்டி மானியம், ஜி.எஸ்.டி.,யில் விலக்கு, சுலபமான கடன் வசதி, ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கு, வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
–கணேஷ் குமார் குப்தா, தலைவர், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|