பதிவு செய்த நாள்
19 ஏப்2019
04:43
புதுடில்லி: ‘பங்கு ஒதுக்கீட்டு விண்ணப்பங்களின் பரிசீலனைக்கு பின், ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் நிதி நெருக்கடிக்கு தீர்வு கண்டு, விரைவில் மீண்டும் விமான சேவை துவக்கப்படும்’ என, வங்கிகள் கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 8,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இந்நிறுவனத்திற்கு கடன் கொடுத்த வங்கிகள் கூட்டமைப்பு, 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்தது. அதற்கு, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர், நரேஷ் கோயல், தன் பங்கு மூலதனத்தை, 51 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என, நிபந்தனைவிதிக்கப்பட்டது. அதை ஏற்று, நரேஷ் கோயல் பங்கு மூலதனத்தை குறைத்துக் கொண்டார்.
மாற்றம்:
இதையடுத்து, எஸ்.பி.ஐ., தலைமையில், 26 வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பின் வசம், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின், 51 சதவீத பங்குகள் வந்தன.இதை தொடர்ந்து, ஜெட் ஏர்வேஸ் இயக்குனர் குழுவில் மாற்றம் செய்யப்பட்டது.அத்துடன், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின், 75 சதவீத பங்குகளை விற்கும் நடவடிக்கையில், வங்கிகள் கூட்டமைப்பு இறங்கியது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு, பங்கு விற்பனையில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என, கூறப்படுகிறது. அதனால், வங்கிகள் கூட்டமைப்பால், உறுதி அளித்தபடி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில், 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடியவில்லை.
இந்நிலையில், குத்தகைக்கு விமானங்களை அளித்த நிறுவனங்கள், பெரும்பாலான விமானங்களை திரும்பப் பெற்றுக் கொண்டன. அதனால், 2018, டிசம்பரில், 123 ஆக இருந்த விமானங்களின் எண்ணிக்கை, ஐந்தாக குறைந்தது.
அவசர உதவி:
இதையடுத்து, உடனடியாக, 400 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தால், விமான சேவையை தொடரலாம் என, ஜெட் ஏர்வேஸ் தெரிவித்தது.ஆனால், மேற்கொண்டு நிதியுதவி அளிக்க, வங்கிகள் மறுத்து விட்டன. இதனால், ஜெட் ஏர்வேஸ் விமான சேவை, 17ம் தேதி நள்ளிரவுடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.இந்நிலையில், வங்கிகள் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:ஜெட் ஏர்வேஸ் பங்கு விற்பனை தொடர்பாக, 16ம் தேதி நிலவரப்படி, தகுதியுள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து வந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். இதில், பங்கின் விலை, நியாயமாகவும், வெளிப்படையான முறையிலும் நிர்ணயிக்கப்படும். இப்பணி வெற்றிகரமாக முடியும் என, எதிர்பார்க்கிறோம். இதைத் தொடர்ந்து, விரைவில், ஜெட் ஏர்வேஸ் மீண்டும் வழக்கம் போல விமான சேவையை மேற்கொள்ளும் என, நம்புகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் தலையிட வேண்டும்:
ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிகமாக முடிவுக்கு வந்ததை அடுத்து, அதன் ஊழியர் சங்கம், பிரதமர் மோடி, நிதியமைச்சர், அருண்ஜெட்லி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுத்தம் காரணமாக, 16 ஆயிரம் நிரந்தர ஊழியர்கள் நேரடியாகவும், 22 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், இப்பிரச்னையில், உடனடியாக தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|