பதிவு செய்த நாள்
20 ஏப்2019
23:45
நாமக்கல்: 'நெக்' நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து, 40 காசு குறைத்து, வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்கின்றனர். அதனால், பண்ணையாளர்களுக்கு, இரண்டு மாதத்தில், 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், நாமக்கல், சேலம் மாவட்டத்தில் உள்ள, 1,000 பண்ணைகளில் உள்ள, ஐந்து கோடி கோழிகள் மூலம், தினமும், 3.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, நெக் நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும்.இந்த முட்டை கொள்முதல் விலையானது, தட்ப வெப்பநிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஆனால், வியாபாரிகள், 'நெக்' நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து, 40 காசு வரை குறைத்து கொள்முதல் செய்கின்றனர். அதன் மூலம், உற்பத்தி செலவை காட்டிலும், பண்ணையாளர்களுக்கு, தினமும், கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்படுவதால், கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள்சம்மேளன துணைத் தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:'நெக்' நிர்ணயம் செய்யும் விலைக்கு, வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும். நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து, 25 காசு குறைத்து விற்பனை செய்ய, 'நெக்' அறிவுறுத்தி உள்ளது.ஆனால், வியாபாரிகள், 40 காசு வரை குறைத்து கொள்முதல் செய்கின்றனர். ஏற்கனவே, ஒரு முட்டை உற்பத்தி செலவில் இருந்து, 1 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.அதன் மூலம், நாள் ஒன்றுக்கு, 3.50 கோடி ரூபாய் என்ற அடிப்படையில், இரண்டு மாதமாக, 200 கோடி ரூபாய், பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, கோழிப் பண்ணையை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் உள்ளது.
தற்போது, மக்காசோளம் தட்டுப்பாடு உள்ளது. மத்திய அரசு, 5 லட்சம் டன் இறக்குமதியில், 1 லட்சம் டன்னுக்கு அனுமதி அளித்துள்ளது. அவை, இன்னும் வந்து சேரவில்லை.அவற்றை முழுமையாக இறக்குமதி செய்ய, மத்திய அரசுக்கு, மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், வீணாகும் கோதுமை, அரிசியை, மானிய விலையில் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதே நிலை நீடித்தால், கோழிப் பண்ணை தொழிலை நம்பியுள்ள பண்ணையாளர்கள், தொழிலாளர்கள் என, லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|