பதிவு செய்த நாள்
25 ஏப்2019
07:04
மும்பை : ரிசர்வ் வங்கி, வெளிச் சந்தையில், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, அரசு கடன் பத்திரங்களை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னராக, 2018 டிசம்பரில், சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றது முதல், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்தாண்டில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு இரு முறை கூடியது. இரு முறையும், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி, தலா, 0.25 சதவீதம் என, 0.50 சதவீதம் குறைக்கப்பட்டது.
குறைப்பு:
ஆனால், இந்த வட்டி குறைப்பின் முழு பயனையும், வங்கிகள், அவற்றின் பல்வேறு கடன்களுக்கு வழங்கவில்லை. எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் பேங்க் உள்ளிட்ட ஒரு சில வங்கிகள் மட்டுமே, அதிகப்பட்சமாக, கடனுக்கான வட்டியை, 0.20 சதவீதம் வரை குறைத்தன.வங்கிகள், வாராக் கடன் பிரச்னையால் சொத்து மதிப்பு குறைவதை தடுக்கும் நோக்கில், வட்டி குறைப்பின் பயனை, வாடிக்கையாளர்களுக்கு வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது.
இதனால், ரிசர்வ் வங்கி அதிரடியாக இருமுறை வட்டியை குறைத்த பின்னும், அதன் பயன், நுகர்வோருக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், வட்டி குறைப்பினால், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் எதிர்பார்த்த தாக்கமும், குறைவாக உள்ளது. இதையொட்டி, வெளிச் சந்தையில், அரசு கடன் பத்திரங்களை வாங்கி, பணப்புழக்கத்தை அதிகரிக்க, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இது, ரிசர்வ் வங்கி அவ்வப்போது மேற்கொள்ளும் வழக்கமான நடைமுறைதான். இருந்தபோதிலும், கடந்த மாதம், டாலர் வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய வேகத்தில், தற்போது, அரசு கடன் பத்திரங்களை வாங்குவது, வங்கிகள் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கையால், நிதிச் சந்தையில், 70ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வந்துள்ளது. இத்துடன், கடன் பத்திரங்கள் வாயிலான முதலீடும் குவியும் போது, வங்கிகளிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதன் காரணமாக, வங்கிகள், கடன்களுக்கான வட்டியை குறைக்கும் என, ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
வங்கிகள், வணிக கடன்களுக்கான வட்டியை குறைத்தால், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள், வணிகர்கள் பயன் பெறுவர். தனி நபர் கடன், வாகனம், வீட்டு வசதி கடன் ஆகியவற்றுக்கான வட்டி குறைக்கப்பட்டால், சாதாரண மக்களுக்கு பயன் கிடைக்கும்.
இரு கட்டங்கள்:
ரிசர்வ் வங்கி, வெளிச் சந்தையில். 358 கோடி டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது, இந்திய ரூபாய் மதிப்பில், 25ஆயிரம் கோடியாகும். முதற்கட்டமாக, வரும் மே, 2ல், 12ஆயிரத்து500 கோடி ரூபாய் மதிப்பிலான, கடன் பத்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மே மாதத்திற்குள், எஞ்சிய தொகைக்கான கடன் பத்திரங்கள் வாங்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|