பதிவு செய்த நாள்
29 ஏப்2019
06:58
பி.எப்., திட்டத்தின் ஓய்வூதிய அம்சமான, இ.பி.எஸ்., கீழ் பென்ஷனை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பு குறித்து ஒரு கண்ணோட்டம்.
பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஊழியர்களின் ஓய்வு காலத்திற்கான சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தில், 12 சதவீத தொகை, பி.எப்., கணக்கில் பிடித்தம் செய்யப்படும். இதே அளவு தொகை, நிறுவன தரப்பிலும் செலுத்தப்படும். இந்த தொகை, ஊழியர் கணக்கில் அதற்குரிய வட்டியுடன் சேரும். இந்த தொகையை, ஓய்வு பெறும் போது மட்டுமே, விலக்கி கொள்ள முடியும். இடையே, குறிப்பிட்ட சில தேவைகளுக்கு மட்டும் பகுதி அளவு தொகையை விலக்கிக் கொள்ள அனுமதி உண்டு.பி.எப்., திட்டத்தில், இ.பி.எஸ்., எனப்படும், ஊழியர்கள் பென்ஷன் திட்டம், 1995 கீழ், நிறுவன தரப்பில் செலுத்தப்படும் தொகையில், 8.33 சதவீதம் பென்ஷன் தொகைக்காக சென்றுவிடும்.
ஓய்வு பெற்ற பிறகு, இதன் மூலம் பென்ஷன் வழங்கப்படும். தொடர்ந்து, 10 ஆண்டுகள் பணியில் இருந்தவர்கள் இந்த திட்டத்தில் பென்ஷன் பெற முடியும். இடையே விலகியவர்கள், தொடர்ந்து, இரு மாதங்கள் பணியில் இல்லாமல் இருந்தால், மொத்த பி.எப் தொகையையும் விலக்கிக் கொள்ளலாம்.எனினும், பென்ஷனுக்காக பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, வரம்பு உள்ளது. எனவே, ஒருவர் அதிகபட்சம், 7,500 ரூபாய் மட்டுமே பென்ஷன் பெற முடியும் நிலை உள்ளது. ஆனால், அண்மையில், உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில், ஊழியரின் முழு அடிப்படை சம்பளத்திற்கு உரிய அளவுக்கு பென்ஷன் தொகையை உயர்த்திக்கொள்ளலாம் என, உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அடுத்து, உறுப்பினர்கள் தங்கள் சம்பளத்திற்கு ஏற்ப, அதிக பென்ஷன் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன் படி, அதிக சம்பளம் வாங்கும் நபர்கள், மாதம், 45 ஆயிரம் ரூபாய் வரை பென்ஷன் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகியுள்ளது. எனவே, பி.எப்., உறுப்பினர்கள், தாங்கள் பெறும் ஊதியத்திற்கு ஏற்ப, அதிக பென்ஷன் பெற விரும்பினால், இ.பி.எஸ்., கீழ் அதிக தொகை பிடித்தம் செய்யப்படும் வாய்ப்பை நாடலாம். இதனால், பென்ஷன் அதிகரிக்கும்.
அதிக பென்ஷன் வாய்ப்பை நாடுவது தொடர்பான விவாதமும், வல்லுனர்கள், ஊழியர்கள் மத்தியில் தீவிரமாகியுள்ளது. அதிக பென்ஷன் வாய்ப்பு ஈர்ப்புடையது என்றாலும், இது தொடர்பான மற்ற அம்சங்களையும், மனதில் கொள்ள வேண்டும். பென்ஷன் நிதிக்கு அதிக பணத்தை மாற்றும் முடிவினால், பி.எப்., சேமிப்பு மூலம் ஒருவருக்கு கிடைக்க கூடிய தொகை, அந்த அளவு குறையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், பென்ஷன் நிதிக்கு வட்டியும் கிடையாது.
ஆனால், சராசரி ஆயுள் காலம் அதிகரித்து வரும் நிலையில், அதிக பென்ஷன் என்பது, ஏற்புடையதாகவே இருக்கும். பென்ஷனுக்கு, ஆண்டளிப்பு திட்டங்களில் கிடைக்கும் பலனைவிட, இந்த திட்டத்தில் கிடைக்கும் பலன் அதிகம் இருக்கும். எனினும், பென்ஷன் வருமானம், வரிக்கு உட்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வரி விதிப்பு காரணமாக, அதிக வருமான வரி வரம்பு பிரிவில் இருப்பவர்களுக்கு இந்த மாற்றம் பயனுள்ளதாக இல்லாமல் போகலாம் என்கின்றனர்.
இந்த பிரிவினர், பி.எப்., தொகையை மொத்தமாக பெற்று பிற பொருத்தமான சாதனங்களில் முதலீடு செய்யலாம். இதனிடையே இந்த மாற்றம் பி.எப்., நிறுவனம் மீது நீண்ட கால சுமையாக அமையும் என்ற கருத்தும், முன்வைக்கப்படுவதும் கவனத்திற்கு உரியது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|